Sunday, June 13, 2021

பொய் சொல்லாதீர் இரக்கமற்ற அம்மணியே

 


நேற்று ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடந்துள்ளது.

கொரோனா தொற்று தொடர்பான மருந்துகள், பாதுகாப்புப் பொருட்கள், தடுப்பூசி ஆகியவற்றுக்கான ஜி.எஸ்.டி அகற்றப்பட வேண்டும் என்று பாஜக ஆளாத மாநிலங்களின் ஜி.எஸ்.டி கவுன்சில் உறுப்பினர்கள் கடுமையாக குரல் கொடுத்ததன் விளைவாக 12 %, 18 % என்று இருந்த ஜி.எஸ்.டி இப்போது 5 % ஆக குறைக்கப்பட்டுள்ளது.

வரி வாங்கியே பழக்கப்பட்ட அந்த அம்மையாரால் அந்த 5 % வரி கூட விதிக்காமல் இருக்க முடியவில்லை போல. 

மக்கள் மரணத்தோடு போராடும் வேளையில் கூட இவர்கள் கல்லா கட்ட வேண்டும் என்ற சிந்தனை எவ்வளவு கேவலமான ஒன்று!

தடுப்பூசிக்கான 5 % ஜி.எஸ்.டி தொடரும். ஆனால் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக போடப்படுவதால் மக்களுக்கு பாதிப்பில்லை என்று அம்மையார் சொல்லியுள்ளார்.

இதைத்தான் பொய் என்று சொல்கிறேன் நான்.

சுகாதாரத்துறை அமைச்சர் மோடியின் குரங்குக் குளியலுக்கு மறு நாள் கொடுத்த அறிக்கையில் கோவிஷீல்ட், கோவேக்ஸின், ஸ்புட்னிக் ஆகிய மூன்று தடுப்பூசிகளுக்கும் முறையே 780, 1410, 1145  என அதிகபட்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தனியார் மருத்துவமனைகள் அந்த வரம்பையும் சேவைக் கட்டணம் 150 ரூபாயையும் தாண்டி வசூலிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மாநில அரசுகளின் பொறுப்பு என்று சொன்னார்.

வேறு வழியில்லாமல் தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் உங்கள் அரசு நிர்ணயித்த விலையைத் தாண்டி ஜி.எஸ்.டி யும் கட்ட வேண்டியிருக்குமே!

இது பாதிப்பு கிடையாதா?

ஏன் இப்படி அபாண்டமாக பொய் சொல்கிறீர்கள்?

சாரி, மன்னிக்கவும்.

ஏன் பொய் சொல்கிறீர்கள் என்று மோடியின் மந்திரியைக் கேட்டது என் தவறுதான்.


No comments:

Post a Comment