Wednesday, June 16, 2021

ராமரின் பெயரால் - ஊழல் இப்போது

 


ராமர் கோயில் என்பது சங்கிகளுக்கு ஆட்சியதிகாரத்தை பிடிக்கும் ஆயுதமாக மட்டும் இல்லை. காசு பார்ப்பதற்கான பெரிய வழியாகவும் இருக்கிறது.

ராமர் கோயில் கட்டுவதற்காக விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பெயரில் உள்நாட்டிலிருந்தும் வெளி நாடுகளிலிருந்தும் திரட்டப்பட்ட சில நூறு கோடி ரூபாய் என்ன ஆனது என்று கேட்டதற்காக என்னை கொலை செய்ய துரத்துகிறார்கள் என்று அந்த கால காவி தாதா பிரவீண் தொகாடியா புலம்பியது நினைவில் இருக்கலாம். மோடி டீ விற்றதாக சொன்னது பொய் என்றும் அப்போது சொன்ன பிரவீண் தொகாடியா இப்போது எங்கே என்று தெரியவில்லை. பில்லா ரங்கா கிரிமினல் கூட்டணி என்ன செய்ததோ? முன்பு திரட்டப்பட்ட பணம் என்ன ஆனது என்ற கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை.

இப்போது மீண்டும் நிதி திரட்ட தொடங்கினார்கள். பிஎம் கேர்ஸ் நிதிக்கு என்ன வந்தது, என்ன செலவு என்பதே மர்மமாக உள்ள போது இந்த நிதிக்கு வந்த பணத்திற்கு மட்டும் கணக்கு இருக்குமா என்ன? பிஎம். கேர்ஸ் நிதிக்கு பணம் கொடுத்த/கொடுக்காத பெருந்தலைகள் எல்லாம் இந்த நிதிக்கு வாரி வாரி வழங்கி இருப்பார்கள் என்பது நிச்சயம்.

சில புத்திசாலிகள் வங்கி இருப்பிற்கு மேலும் காசோலை கொடுத்து அந்த காசோலை திரும்பியதால் வங்கி இருப்பை காத்துக் கொண்டனர் என்ற தகவலும் சில மாதங்கள் முன்பு வந்தது.

ஆனால் கோயில் கட்டுவதற்கான நிதியைத் தாண்டி ஊழல் செய்யும் அளவிற்கு துட்டு சேர்ந்து விட்டது போல!

ராமர் கோவில் ட்ரஸ்ட் சார்பாக இப்போது ராமர் கோயில் கட்டப்படும் இடத்திற்கு அருகில் ஒரு நிலம் வாங்கி உள்ளார்கள்.  அதில்தான் ஊழல் நடந்துள்ளது.

18.03.2021 மாலை 7 மணிக்கு 12000 சதுர அடி நிலத்தை இரண்டு கோடி ரூபாய்க்கு  குசும் பதக் என்பவரிடமிருந்து  ரவி திவாரி, சுல்தான் அன்சாரி ஆகியோர் வாங்குகின்றனர்.

சரியாக பத்து நிமிடங்களுக்குப் பிறகு ரவி திவாரியும் சுல்தான் அன்சாரியும் அதே நிலத்தை ராமர் கோயில் ட்ரஸ்டுக்கு விற்று விடுகிறார்.

என்ன விலை?

அதிகமில்லை.

வெறும் பதினெட்டு கோடியே ஐம்பது லட்சம்.

பத்து நிமிடத்தில் ஒரு நிலத்தின் மதிப்பு பதினாறு கோடியே ஐம்பது லட்சம் அதிகரித்த அதிசயம் இங்குதான் நடந்தது.

"ஊரான் வீட்டு நெய்யே" என்று தொடங்கும் வாசகம் நினைவுக்கு வருகிறதல்லவா?

ராமர் கோயில் ட்ரஸ்டே குசும் பதக்கிடமிருந்து அந்த நிலத்தை ஏன் நேரடியாக வாங்கவில்லை?

மூன்று கோடி ரூபாய் சந்தை மதிப்பு உள்ள நிலத்திற்கு 18 கோடி கொடுத்தது ஏன்?

முதல் பத்திரப்பதிவு பற்றி எதுவும் தெரியாது என்றும் சொல்ல முடியாது.

7 மணி பத்திரப்பதிவு, 7.10 மணி பத்திரப்பதிவு என இரண்டிலும் சாட்சிக் கையெழுத்து போட்டவர்கள் அயோத்தி மாநகராட்சியின் மேயர் ரிஷிகேஷ் உபாத்யாயா மற்றும் ராமர் கோயில் ட்ரஸ்ட் உறுப்பினர் அணில் மிஸ்ரா.

இந்த ட்ரஸ்ட் ஏதோ தனிப்பட்ட ட்ரஸ்ட் அல்ல.  ராமர் கோயில் கட்ட ஒன்றிய அரசு பரிந்துரைத்த நபர்களைக் கொண்டு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் கொடுத்து உருவாக்கப்பட்ட ட்ரஸ்ட்.

எனவே இங்கு நடந்துள்ள ஊழல் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசுக்கும் பொறுப்பு இருக்கிறது.

ஆனால் செய்ய மாட்டார்கள்.

பாஜக ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சி என்று முட்டாள்கள் கூவிக் கொண்டு இருப்பார்கள்.

ராமரின் பெயரால் இன்னும் என்னவெல்லாம் அராஜகம் செய்யப் போகிறார்களோ?


3 comments:

  1. அருமை...தோலுறித்துக் காட்டியமைக்கு
    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நீ பார்த்த அதே ஹிந்து பேப்பரில் ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் செயலாளர் விளக்கம் கொடுத்துள்ளாரே அது உன் குருட்டுக் கண்ணுக்கு தெரியலையா? பணம் வங்கிக் கணக்கில்தான் செலுத்தப்பட்டுள்ளது. அதில் எங்கே ஊழல் வரும். சமஜ்வாடி கட்சிக்காரனே சந்தை மதிப்பு 5 கோடியே எண்பது லட்சம் என்று சொல்றான். நீ மூன்று கோடின்னு கதை விடறே! ராமர் கொயில் விஷயத்தில் விளையாடாதே

    ReplyDelete
    Replies
    1. வா, அனாமதேயம், நீ வருவேன்னு எனக்கு தெரியும். நீ புத்திசாலியா இல்லை முட்டாளா? ஹிந்து செய்தியை அடிப்படையா வைத்து எழுதினது கரெக்டுதான். ஆனா அந்த விளக்கெண்ணெய் விளக்கத்தையும் எழுதி அசிங்கப்படுத்தச் சொல்றியே, தனி பதிவாகவே எழுதிடறேன். 5.8 கோடியை மூன்று கோடி என்று எழுதியதே இப்படி யாராவது வந்து மாட்டிக்க விரிச்ச வலைதான். இப்படி மாட்டிக்கிட்டயே தம்பி. அப்போ பத்து கோடி ரூபாய் ஊழல்தானே!

      Delete