Saturday, June 19, 2021

மயானக் கூட்டாளிகள்

 


மீண்டும் முன் குறிப்பு : பெண்கள் கொள்ளி வைக்கலாமா என்று ஒரு விவாதம் சில வாரங்கள் முன்பு நடந்தது நினைவிலிருக்கலாம். அப்போதே எழுதிய  இரு பதிவுகளை பகிர்ந்து கொள்ளாமல் ட்ராப்டிலேயே வைத்திருந்தேன். அனைவரும் அர்ச்சகராகலாம் என்ற அறிவிப்பை தொடர்ந்த சில ஆணவமிக்க பதிவுகள் காரணமாக முன்பு எழுதியதன் முதல் பகுதியை நேற்று பகிர்ந்து கொண்டேன். இப்போது இரண்டாவது பகுதியை பகிர்ந்து கொள்கிறேன்.

 பீகாரிலிருந்து ஒரு தோழர் தன் மனைவியை சி.எம்.சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கூட்டி வந்திருந்தார். சிகிச்சை பலனளிக்காமல் அவர் இறந்து விட்டார். அவரால் தன் மனைவியின் சடலத்தை பீகாருக்கு எடுத்துச் செல்ல இயலவில்லை. வேறென்ன காரணம் ! பொருளாதாரம்தான்.

 வேலூரிலேயே தகனம் செய்து விட்டுச் செல்ல திட்டமிட்டார். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மருத்துவமனையே செய்து விட்டது. ,மிகப் பெரிய கூட்டுக் குடும்பமாக இருந்தாலும் யாருமே இல்லாமல் நான் மட்டும் ஒரு அனாதை போல என் மனைவிக்கு இறுதிச் சடங்கு செயயப் போகிறேனே என்று அவர் கதற மனம் கலங்கி விட்டது.

 ஏ.ஐ.ஐ.இ.ஏ உறுப்பினர்கள் யாரும் அனாதை கிடையாது என்று அவரைத் தேற்றி நாங்கள் ஒரு பத்து தோழர்கள் அந்த இறுதி நிகழ்வில் பங்கேற்றோம்.

 மருத்துவமனை ஏற்பாடு செய்த ஒரு புரோகிதர் வந்தார். மிகுந்த உற்சாகத்தோடே அவர் இருந்தார். அவருக்கும் மயானப் பணியாளருக்கும் பயங்கர ஜாலியான உரையாடல்கள். ஒருவரை ஒருவர் காலை வாரி விட்டுக் கொண்டே இருந்தனர்.

 “இப்படி தண்ணி போட்டுட்டு வேலைக்கு வந்துருக்கியே?” –புரோகிதர்.

 “வேலையை முடிச்சிட்டு நீ மட்டும் என்ன செய்யப்போற?” – மயானப் பணியாளர்.

 “உன்னை ஒரு நாள் கொளுத்தரபோது நாந்தாண்டா உனக்கும் மந்திரம் சொல்வேன்” – இது புரோகிதர்.

 “சாமி, அதெல்லாம் நடக்காது. என் கையாலதான் உன்னை கொளுத்தப் போறேன்” – இது மயானப் பணியாளர்.

 துயரம் தோய்ந்த நிகழ்வை அவர்கள் இருவரும் பெரிய காமெடியாக்கிக் கொண்டிருந்தார்கள்.

 ஒரு அதட்டல் போட்டு வேலையை பார்க்கச் சொன்னோம்.

 எல்லாம் முடிந்து புறப்படும் வேளையில் அந்த புரோகிதர் அந்த மயானப் பணியாளரிடம் “டேய் பாக்கு இருக்கா?” என்று கேட்க “அதான் காசு வாங்கற இல்லை, எல்லாத்தையும் ஓசியிலேயே முடிச்சிக்கிறயே” என்று திட்டிக் கொண்டு பான்பராக் பாக்கெட்டை கொடுக்க அதை பிரித்து வாயில் போட்டுக் கொண்டே அவரும் கிளம்ப நாங்களும் புறப்பட்டோம்.

 புரோகிதருக்கும் மயானப் பணியாளருக்கும் இடையிலான நட்பும் புரிதலும் நன்றாகத்தான் இருந்தது.

No comments:

Post a Comment