Saturday, January 15, 2022

அதிகாரிகள் அரசியலுக்கு வரலாமா?

 


இந்திய ராணுவத்தின் தளபதியாக இருந்த ஜெனரல் வி.கே.சிங் பணியில் இருந்து ஓய்வு பெற்றதும் பாஜகவில் இணைகிறார். மத்திய மந்திரியாகிறார்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலின் போது ஏராளமான ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், ஐ.பி.எஸ் அதிகாரிகள் விருப்ப ஓய்வு கொடுத்து விட்டு பாஜகவில் இணைந்து தேர்தலிலும் போட்டியிட்டார்கள்.

ஆட்டுப் பண்ணை வைப்பதற்காக ஐ.பி.எஸ் பணியை ராஜினாமா செய்ததாக சொன்ன அண்ணாமலை சட்டசபைத் தேர்தலில் தோற்றாலும் பாஜகவின் மாநிலத் தலைவராகிறார்.

கான்பூர் கமிஷனராக இருந்த  உபி உதவி டைரக்டர் ஜெனரல் ஆஃப் போலிஸான அசிம் அருண் விருப்ப ஓய்வில் வெளி வந்த மறு நாளே பாஜக வேட்பாளராகிறார். உபி டிஜிபி ஆக இருந்த அவரது தந்தைக்கும் சீட் உண்டாம்.

ரஞ்சன் கோகாய் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற உடனேயே பாஜகவில் சேராமலேயே மாநிலங்களவை உறுப்பினரானார்.

சகாயம் போன்ற குறைந்த எண்ணிக்கையிலான சிலர் தனி ஆவர்த்தனம் செய்தார்கள்.

இவர்கள் எல்லாம் அரசியல் கட்சியில் இணைய அரசியல் சாசனப்படி தடை ஏதாவது உண்டா?

ரௌடிகளும் கொலைகாரர்களும் திருடர்களும் கடத்தல் காரர்களும் அரசியலுக்கு வரும் போது இவர்கள் மட்டும் ஏன் வரக்கூடாது என்ற கேள்வி கூட நியாயமாகத் தோன்றலாம்.

சட்டப்படி எதுவும் கிடையாது.தாராளமாக சேரலாம்.

 பிறகு ஏன் இந்த கேள்வி?

 ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகள், நீதிபதிகள், ராணுவ அதிகாரிகள் ஆகியோரின் பணிகள் என்பது மிக முக்கியமானது. அரசு இயந்திரத்தை கையாள்பவர்கள் குடிமைப் பணி அதிகாரிகள் என்றால் பாதுகாப்பு இயந்திரம் ராணுவ அதிகாரிகளிடமும் நீதி பரிபாலனம் நீதிபதிகள் கையிலும் உள்ளது.

 பல ஆட்சியாளர்களின் கீழ் இவர்கள் பணியாற்றலாம். ஆனால் இவர்கள் இந்திய அரசியல் சாசனத்துக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்கள். எந்த விருப்பு, வெறுப்புக்கும்  அப்பாற்பட்டு பாரபட்சமின்றி மக்கள் நலனை மட்டுமே முதன்மையாகக் கொண்டு செயல்பட  வேண்டியவர்கள். எப்படிப்பட்ட அழுத்தம் ஆட்சியாளர்களிடமிருந்து வந்தாலும் அவற்றை நிராகரிக்கும் உரிமையை அரசியல் சாசனம் கொடுத்துள்ளது.

 அப்படி இருக்கும் போது முதல் நாள் வரை பணி செய்து விட்டு மறு நாள் ஒரு கட்சியில் சேர்ந்தால் அந்த நாள் வரை அவர்கள் எப்படி வேலை பார்த்திருப்பார்கள் என்ற கேள்வி வருவது இயல்பானது.

 அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஆளுங்கட்சிக்கு சாதகமாக எத்தனை எத்தனை முடிவுகளை எடுத்திருப்பார்கள்!

 ஒப்பந்தங்களை அளித்திருக்கலாம்,

கைது செய்யாமல் இருந்திருக்கலாம்.

அரசியல் எதிரிகளை கைது செய்திருக்கலாம்.

சாதகமான தீர்ப்புக்களை வழங்கியிருக்கலாம்.

எதிர்த் தரப்பிற்கு பாதகமான தீர்ப்புக்களை வழங்கி இருக்கலாம்.

உளவுத்துறை அறிக்கையை உதாசீனம் செய்யச் சொன்னதை கேட்டிருக்கலாம் (புல்வாமா போல).

 இப்படி பட்டியல் போட்டால் நீண்டு கொண்டே இருக்கும்.

 அதிகாரிகள் தங்கள் பணிக் காலத்தில் நேர்மையுடன் நடந்து கொண்டிருந்தால் இது போன்ற சந்தேகங்களுக்கு வாய்ப்பு இருக்காது. ஆனால் யதார்த்தம் அப்படி இல்லையே!

 பிறகு என்ன செய்யலாம்?

 அரசியலில் நுழைய ஆசைப்படும் குடிமைப்பணி, பாதுகாப்புப் படை அதிகாரிகள், நீதியரசர்கள் ஆகியோர் தங்கள் பணிக்காலத்தில் எடுத்த முடிவுகள், குறைந்த பட்சம் ஐந்து வருட காலத்துடையதாவது, அனைத்துக் கட்சிகள், தொழிற்சங்கங்கள், அரசியல் சாரா அமைப்புக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று ஆய்வு செய்ய வேண்டும்.

 அவரது பணி நேர்மையானதாக இருந்தால் அரசியலுக்கு வருவதற்கு அனுமதி வழங்கலாம்.

 எதிர்கால அரசியல் ஆதாயம் கருதி செயல்பட்டது தெரிய வந்தால் துறைசார் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 இப்படிச் செய்தால் நிகழ்கால முறைகேடுகளும் அதிகார துஷ்பிரயோகங்களும் குறையும்.

 ஆனால் ஒன்று.

 பாஜகவுக்கு யாரும் வர மாட்டார்கள்.

 ஆமாம். யோக்கியர்களுக்கு அங்கே என்ன வேலை !!!!!

No comments:

Post a Comment