Monday, December 21, 2020

இறந்த பின்னும் பயனுள்ளவராக . . .

 



இன்றைய அதிர்ச்சிச் செய்தி தமுஎகச அமைப்பின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் கருப்பு கருணா அவர்களின் திடீர் மறைவு.

எங்கள் கோட்டச் சங்க மாநாடு 1999 ல்  திருவண்ணாமலையில் நடைபெற்ற போது அறிமுகமான தோழர் என்றாலும் முக நூல் வாயிலாகவே மிகவும் பரிச்சயமானவர்.

நக்கலும் நையாண்டியுமாக எழுதக் கூடிய உற்சாகமான தோழர் அவர். எங்கள் கோட்டத்தின் வெள்ளி விழா ஆண்டை ஒட்டி திருவண்ணாமலையில் நடைபெற்ற கலை விழா வில் அவர் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சி எப்படி இருந்தது என்று கேட்ட போது அவருக்கே உரிய பாணியில் சொன்னார்.

"பெண்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் எல்லாம் மிக இயல்பாக, சிறப்பாக இருந்தது. மற்றவையெல்லாம் விளம்பர இடைவேளை"

நேற்று மாலை கூட மோடியை நக்கல் செய்து ஒரு பதிவிட்டிருந்தார். அது கீழே.



தமுஎகச நிகழ்ச்சிகளின் அழைப்பிதழ் வடிவமைப்புக்களில் இருக்கும் சிறப்பு அவரது கைவண்ணம் என்று எங்கள் இணைச்செயலாளர் தோழர் கே.வேலாயுதம் பல முறை கூறியுள்ளார்.

அவர் இயக்கிய "ஏழுமலை ஜமா" குறும் படம் அவரது திறமைக்குச் சான்று. 

நேற்று வரை உற்சாகமாக செயல்பட்டு வந்த தோழர் மாரடைப்பு காரணமாக இன்று இல்லை என்பது மிகப் பெரிய துயரம்.

நாளை அவரது உடல் திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்படவுள்ளது.

தன் இறப்பைக் கூட சமூகத்திற்கு பயனுள்ளதாக மாற்றிய அன்புத் தோழருக்கு செவ்வணக்கம்.

No comments:

Post a Comment