Friday, October 5, 2018

பிக்பாக்கெட் திருடனும் ?????




பல வருடங்களுக்கு முன்பு ஒரு கலை இரவு மேடையில் கேட்டது. இப்போது மய்யத்துக்கு போன தோழர் பாரதி கிருஷ்ணகுமார் பேசியது என்று நினைவு. கூடுமானவரை அவர் பேசியதை அப்படியே கொடுக்க முயல்கிறேன்.

டவுன் பஸ் நிரம்பி வழிகிறது. முன்னாடி போ, முன்னோடி போ என்று கண்டக்டர் அனைவரையும் விரட்டிக் கொண்டே டிக்கெட் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்.

திடிரென டிரைவர் சடன் ப்ரேக் போடுகிறார். அனைவரும் முன் நிற்பவர்கள் மீது முட்டிக் கொள்கிறார்கள். சிலர் வாய் விட்டும் சிலர் மனதுக்குள்ளும் திட்டுகிறார்கள்.

கண்டக்டர் டிக்கெட்டிற்கு காசு கேட்கையில் ஒரு மனிதர், தன் பேண்ட் பையை பார்க்கிறார். அங்கே இருந்த ப்ர்ஸ் காணவில்லை. சட்டைப்பை, கையில் வைத்திருந்த பை எல்லாவற்றையும் பார்க்கிறார். அங்கேயெல்லாம் பர்ஸூம் இல்லை, ஒரு பத்து பைசா சில்லறையும் கூட இல்லை.

தெரிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று சுற்றி சுற்றி பார்க்கிறார். யாரும் இல்லை. அவர் மனதின் தேடலைக் கூட யாரும் புரிந்து கொள்ள யாரும் இல்லை. அவரவர்கள் அவரவர் சிந்தனைகளில் மூழ்கிப் போயிருந்தனர்.

மெதுவாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவர் கண்டக்டரிடம்

“நான் தினசரி இந்த பஸ்ஸிலதான் வருவேன்” என்கிறார்

“நானும் இதே பஸ்ஸிலதான் வரேன். அதுக்கு என்ன?” என்று எரிச்சலாக பதில் சொன்னார் கண்டக்டர்.

“இல்லை. பர்ஸை யாரோ அடிச்சுட்டாங்க. கே.கே.நகர் வரைக்கும் ஒரு டிக்கெட் கொடுத்தீங்கன்னா, நாளைக்கு வந்து பணத்தை கொடுத்துடுவேன்”

“ஒரு நாளைக்கு பத்து பேர் இப்படி சொல்றாங்க. இன்னிக்கு நீ பதினொன்னாவது ஆளு. மரியாதையா அடுத்த ஸ்டாப்பில இறங்கிடு”

என்று சத்தமாக சொல்ல பஸ்ஸே திரும்பிப் பார்த்தது.

இந்த மனிதர் கூனிக் குறுகி பஸ்ஸிலிருந்து இறங்கப் போன போது “கண்டக்டர் நான் அவருக்கு டிக்கெட் வாங்கறேன்” என்று ஒரு குரல் கேட்டது.  பளபளவென்று சட்டை போட்ட ஒரு நாகரீகமான நபர் பத்து ரூபாய் கொடுத்து அவருக்கு டிக்கெட் வாங்கினார்.

கே..கே.நகர் வந்தது. இருவருமே இறங்குகிறார்கள்.

டிக்கெட் வாங்கிய நபரின் கைகளைப் பிடித்துக் கொண்ட பர்ஸைத் தொலைத்த நபர்

“வாழ்க்கையில் உங்களை எப்பவுமே மறக்க மாட்டேன். உங்க விலாசத்தை சொல்லுங்க. இந்த பணத்தை மணி ஆர்டர் அனுப்பறேன்” என்று தழுதழுக்க

“ஐந்து ரூபாய் கமிஷன் செலவு செஞ்சு பத்து ரூபாய் அனுப்பப் போறியா, மனுசனுக்கு மனுசன் உதவறது எல்லாம் ஒரு விஷயமாய்யா” என்று சொல்லி அனுப்பி வைக்க

அவரும் நன்றியோடு திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே நடந்து போனார்.

டிக்கெட் எடுத்த மனிதர் மனதுக்குள் எண்ணிக்கொண்டார்

“மொத்த பர்ஸையும் அடிச்சாச்சு, பத்து ரூபாய்க்கு டிக்கெட் வாங்கறது பெரிய விஷயமா?”

கன்னாபின்னாவென்று பெட்ரோல் விலையை உயர்த்தி விட்டு  இரண்டு ரூபாய் ஐம்பது பைசா மட்டும் குறைத்து அதையே பெரிதாக பேசும் மோடியையும் அந்த பிக்பாக்கெட் திருடரையும் ஒப்பிடாதீர்கள் என்று சொன்னால் நீங்கள் கேட்கவா போகிறீர்கள் !!!!!


No comments:

Post a Comment