Saturday, October 20, 2018

நேற்று வரை ராமன். இன்று ஐய்யப்பன்




சபரிமலையும் கம்யூனிஸ்டுகளும் காவிக்கயவர்களும் 

என்ற தலைப்பும் கூட பொருத்தமாகத்தான் இருக்கும் . . .


சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. வழக்கு தொடுத்தது கம்யூனிஸ்டுகளோ அல்ல இடது முன்னணி அரசோ அல்ல. வழக்கை தொடுத்தது ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த சில காவிகளே.

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த பின்பு கேரள மாநில இடது முன்னணி அரசும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மிகத் தெளிவான நிலை எடுத்தது.

சபரிமலைக்குச் செல்லுங்கள் என்று பெண்களிடம் பிரச்சாரம் செய்வதோ பெண்களை அழைத்துச் செல்வதற்கான முயற்சிகள் எடுப்பதோ அரசின் வேலை அல்ல. மாறாக விருப்பத்துடன் வருகிற பெண்கள் சபரிமலைக்குச் செல்வதற்கான பாதுகாப்பை வழங்குவது அரசின் பொறுப்பு என்று முடிவெடுத்தது.

சபரிமலையை வைத்து அரசியல் செய்யும் அநாகரீகமான வேலையை இடது முன்னணி அரசோ, மார்க்சிஸ்ட் கட்சியோ செய்யவில்லை. அந்த அரசியலை செய்வது காவிக்கயவர்களும் காங்கிரஸ் கட்சியுமே. அதற்கான உள்நோக்கத்தை முந்தைய பதிவில் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தெளிவாகவே விளக்கி உள்ளார்,

பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று வழக்கு தொடுத்த ஆர்.எஸ்.எஸ் ஆட்கள்தான் சபரிமலையில் கலவரத்தைத் தூண்டுகின்றனர். அவர்கள் ஆட்சியில் இருக்கும் மஹாராஷ்டிராவில் சனீஸ்வரன் ஆலயத்தில் இரண்டாண்டுகளாக பெண்கள் அனுமதிக்கப் பட்டு வருகின்றனர். அங்கே எந்த கலவரத்தையும் காவிக் கயவர்கள் தூண்டவில்லை.

பெண்களை சபரிமலைக்கு அழைத்துச் செல்வோம் என்று தெலுங்கானாவில் தேர்தல் வாக்குறுதி அளித்ததும் இதே காவிக் கயவர்கள் என்பதையும் மறந்து விடாதீர்கள் . . .

அதே போல காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைமை உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றது. கேரளத்தில் மூவர்ணக் கொடி காவிக் கொடியாக உருமாறி விட்டது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமலாக்க வேண்டும் என்று சொல்வதால் கம்யூனிஸ்டுகள் ஐயப்ப பக்தர்களாகி விட்டார்களா? அவர்கள் சபரிமலை சென்று வழிபடுவார்களா என்று ஹெச்.ராஜா புகழ் ஹைகோர்ட்  பிளக்கும் வாதத்தை  சிலர் எழுப்புகிறார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாத கம்யூனிஸ்டுகளுக்கு சபரிமலையில் என்ன வேலை என்றும் யார் சென்றால் அவர்களுக்கு என்ன? செல்லாவிட்டால் அவர்களுக்கு என்ன என்றும் அவர்கள்  கேட்கிறார்கள்.

இதற்கான பதில் மேலேயே உள்ளது. இருப்பினும் புரிதலுக்காக இன்னும் விளக்கமாகச் சொல்கிறேன்.

கம்யூனிஸ்டுகள் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள்தான். உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த காரணத்தால் அவர்கள் ஐயப்ப பக்தர்களாக மாறப் போவதில்லை. அங்கே சென்று வழிபடப் போவதுமில்லை.

ஆனால் வழிபட வேண்டும் என்று விரும்புகிற பக்தர்களை ஜாதியின் பெயராலோ, அல்லது பாலினத்தின் பெயராலோ, யாராவது தடுத்தால் அப்போது கம்யூனிஸ்டுகள் தலையிடுவார்கள். வழிபாட்டு உரிமையை பெற்றுத் தருவார்கள்.

தலித் மக்களின் ஆலயப் பிரவேசப் போராட்டங்களை அன்று கேரளாவில் தோழர்கள் ஏ.கே.ஜி, இ.எம்.எஸ் ஆகியோர் நடத்தியதும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் தோழர் பி.ராமமூர்த்தி நடத்தியதும் அந்த அடிப்படையில்தான். இன்று அதே அடிப்படையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பல ஆலய நுழைவுப் போராட்டங்களை காவல்துறை தடியடிகளுக்கு மத்தியில் தமிழகத்தில் நடத்தியுள்ளது.

இப்போது சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று சொல்வதும் அந்த அடிப்படையில்தான். இந்து மதத்தோடு மட்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலையீடு நின்று போவதில்லை என்பதற்கும் பல உதாரணங்கள் உண்டு. சிவகங்கை மறை மாவட்டத்தில் கூட சமீபத்தில் ஒரு போராட்டம் நடந்துள்ளது.

அரசியல் சாசனத்தின் படி அனைவரும் சமம், அது ஆலயங்களுக்கும் பொருந்தும். அதை உறுதி செய்வது என்பதுதான் கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடு,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோ, இடது முன்னணி அரசோ நினைத்தால் லட்சக்கணக்கான பெண்களைத் திரட்டி சபரிமலைக்கு அழைத்துச் செல்ல முடியும். அதற்கான அமைப்பு வலிமை கட்சிக்கு உண்டு. ஆனால் விருப்பமுள்ள பெண்கள் செல்லட்டும் என்ற நிலையை எடுத்துள்ளதால் அப்படிப்பட்ட முயற்சிகளை எடுத்து தன் வலிமையை நிரூபிக்க விரும்பவில்லை.

ஐயப்பனை சபரிமலையில் வழிபட வேண்டும் என்று நினைக்கிற பெண் பக்தர்களை தடுத்து நிறுத்துவது நிஜமான ஐயப்ப பக்தர்கள் அல்ல. ஐயப்ப பக்தர்கள் என்ற பெயரில் உலா வருகிற காவிக் கயவர்களே.

சரிமலை ஐய்யப்ப வழிபாட்டோடு தொடர்புடைய ஏராளமான சம்பிரதாயங்கள் மாறிய பின்பு, பெண்கள் வரக்கூடாது என்ற, அதுவும் சில பத்தாண்டுகளுக்கு முன்பு அறிமுகமான சம்பிரதாயத்தை மட்டும் பிடித்துக் கொண்டு தொங்குவது ஏன் என்று முந்தைய பதிவொன்றில் கேட்டிருந்தேன். அதற்கு உருப்படியான பதில் எதுவும் வரவில்லை.

வராது.

ஏனென்றால் காவிக்கயவர்கள் சுயமாய் சிந்திக்கும் திறனற்றவர்கள். மூளைச்சலவை செய்யப்பட்ட விஷயங்களை வாந்தியெடுப்பதைத் தவிர வேறெதும் அறியாதவர்கள்.

அதனால்தான் பெண்கள் வந்தால் ஐயப்பனின் பிரம்மச்சரியம் பாதிக்கப் படும் என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்  கொண்டு அவர்கள் இப்போது கையிலெடுத்துள்ள ஆயுதமான ஐயப்பனை பலவீனமான ஒருவராகவே  தொடர்ந்து சித்தரிக்கிறார்கள்.

நல்ல குடும்பத்துப் பெண்கள் சபரிமலைக்கு வர மாட்டார்கள் என்று வேறு பல பக்தர்கள் பிதற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.

அப்படி என்றால் ???????

அதற்கான விளக்கத்தை சங்கிகளே சொல்லட்டும் . . .

கிட்டத்தட்ட  அறுபத்தி எட்டு வருடங்களாக, அதாவது 1949 ல் பாப்ரி மசூதியில் ராமர் சிலையை திருட்டுத்தனமாக வைத்த நாள் முதல் ராமரை வைத்து அரசியல் செய்கிற காவிக் கயவர்கள், இனிமேல் ராமரை வைத்து பிழைப்பு நடத்த முடியாது என்பதால் ஐயப்பனை கையில் எடுத்துள்ளார்கள்.

ஆனால் அந்த வண்டி நீண்ட நாள் ஓடாது.

ஏனென்றால் கேரளம் பிராந்தர்களின் தேசம் அல்ல.
தோழர் பிணராயி விஜயன், நரசிம்மராவ் அல்ல. 

2 comments:

  1. I really appreciate your explanation about communist line.also acceptable line which will not harm or hurt anybody's feeling.

    ReplyDelete
  2. ஐயப்பனை வைத்து அரசியல் அவ்வளவுதான்.. Well said

    ReplyDelete