Friday, September 3, 2021

பிள்ளையார் சந்தோஷப்படுவார் அண்ணாமலை

 


 

பொது வெளியில் பிள்ளையார் சிலை வைப்பதற்கும் சிலை ஊர்வலத்திற்கும்  இந்த வருடமும்  அனுமதி கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளதைக் கண்டித்து சங்கிகள் திட்டிக் கொண்டே இருக்கிறார்கள். கேடி.ராகவன், மதன், வெண்பா பிரச்சினையிலிருந்து தப்பிக்க ஆட்டுக்கார அண்ணாமலை ஓவராக குதிக்கிறார். அவர்கள் கட்சி ஆட்சி செய்யும் கர்னாடக மாநிலத்திலும் பிள்ளையார் சிலை ஊர்வலங்கள் இந்தாண்டு தடை செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசை கலைக்கப் போவதாக மிரட்டும் ப்ரவுட் கன்னடிகா அண்ணாமலை கர்னாடக பாஜக அரசையும் கலைத்து நீதியை நிலை நாட்டுவார் என்று நம்புவோமாக.

 நிற்க,

 தமிழகத்தில் மிகப் பெரும் மக்கள் திரளோடு நடைபெறக் கூடிய கோயில் விழாக்கள் பல உண்டு.

 அதிலே முதன்மையானது என்று மதுரை சித்திரைத் திருவிழாவையும் அதிலும் குறிப்பாக அழகர் ஆற்றில் இறங்குவதையும் சொல்லலாம்.  எங்கள் பகுதியை எடுத்துக் கொண்டால் குடியாத்தம் கங்கையம்மன் கோயில் திருவிழாவை சொல்லலாம். திருவண்ணாமலை தீபத் திருவிழா இன்னும் ஒரு உதாரணம். இப்படி எத்தனையோ விழாக்கள் பல லட்சம் மக்கள் பங்கேற்போடு நடப்பவை. அவை இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றின் காரணமாக நடக்கவில்லை. நிகழ்வு நடந்தாலும் மக்கள் பங்கேற்பிற்கு அனுமதி கிடையாது.

 இந்த விழாக்கள் பற்றி பாஜக வாய் திறக்கவே இல்லை. அவை மக்கள் விழாக்கள். அமைதியாகத்தான் நடக்கும். அங்கே அரசியல் செய்வதற்கான ஸ்கோப் கிடையாது. பல இடங்களில் சமூக நல்லிணக்கமும் பேணிப் பாதுகாக்கப்படும் வகையில் சில சடங்குகள் உண்டு. ஆகவே சங்கி அரசியலுக்கு வாய்ப்பில்லாத கடவுள்களை அவர்கள் மதிக்கவே மாட்டார்கள் என்பதுதான் யதார்த்தம்.

 கலவரம் செய்வதற்காகவே அவர்கள் வடிவமைத்ததுதான் பிள்ளையார் சிலை ஊர்வலங்கள். பல ஊர்களின் பல பகுதிகளில் வைக்கப்படுகிற சிலைகள் அந்தந்த பகுதி மக்களால் வைக்கப்படுவதல்ல, சிலைகள் இந்து முன்னணியால் வைக்கப்படும், பந்தல், மைக் செட் செலவுகளுக்கும் பணம் கொடுக்கப்படும்.

 இந்த வேலைக்கு பெரும்பாலும் விடலைப் பசங்கள், அதிலும் ரசிகர் மன்ற கண்மணிகளைத்தான் பயன்படுத்திக் கொள்வார்கள்  சிலையின் பெயரால் அவர்கள் வசூல் செய்து அந்த பணத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். கம்யூனிஸ்டுகளை உண்டியல் குலுக்கிகள் என்று நக்கலடிக்கும் சங்கிகள், சின்னப் பசங்களை சாலையில் போகும் வாகனத்தை நிறுத்தி உண்டியலை குலுககி காசு போடச் சொல்லி தொந்தரவு செய்வார்கள், அந்த பணம் மூலம் பலனடைவது டாஸ்மாக்காக மட்டுமே இருக்கும். பந்தல்களில் ஒலிப்பரப்பப்படும் பாடல்கள் இன்னொரு கொடூரம்,

 வினாயகர் சிலை ஊர்வலம் என்ற பெயரில் சர்ச்சுகள் முன்பாகவும் மசூதிகள் முன்பாகவும் வெறுப்பேற்றி மோதலுக்கு அழைப்பு கொடுப்பதுதான் நோக்கம்.  வினாயகர் ஊர்வலத்தில் போதையில்லாமல் வருபவர்களை விரல் விட்டு எண்ணி விட முடியும். அவர்களை இன்னும் வெறியேற்றும் வேலையை இறந்து போன ராம.கோபாலன் முதற்கொண்டு உயிரோடு இருக்கிற அர்ஜூன் சம்பத் வரை செய்வார்கள்.

 இரண்டு வருடங்களாக பிள்ளையார் ஊர்வலங்கள் இல்லாத காரணத்தால் பிள்ளையாரின் பெயரில் அரசியலோ கலவரமோ செய்ய முடியவில்லை. பிள்ளையாரின் பெயரில் கல்லா கட்டும் வாய்ப்பும் அடிபட்டு விட்டது. அந்த கடுப்புதான் அண்ணாமலை அறிக்கையில் தெரிகிறது.

 யப்பா, அண்ணாமலை, பாவம்யா பிள்ளையாரு! அவரை ஃப்ரீயா     விடுய்யா.

 டாஸ்மாக் சரக்கின் நாற்றத்திலிருந்து,
குத்துப்பாட்டுகளின் கொடூரத்திலிருந்து,
கலவர வினாயகர் என்ற பழியிலிருந்து
நிஸர்ஜனம் என்ற பெயரில் சிலையை  
        மூழ்கடிக்க நடத்தும் தடியடியிலிருந்து

 தப்பித்து

 இந்த வருடம் பிள்ளையார் நிம்மதியாக இருக்கட்டுமே அண்ணாமலை.

 

No comments:

Post a Comment