Friday, September 9, 2022

அதிர்ச்சியூட்டும் அரசியல் திருப்பம்..!!

 

தோழர் சம்சூதீன் ஹீரா, தோழர் சாத்திரியின் பதிவை பகிர்ந்து கொண்டிருந்தார். அதை நானும் பகிர்ந்து கொள்கிறேன். கடைசி வரை கண்டிப்பாக படிக்கவும்.



அதிர்ச்சியூட்டும் அரசியல் திருப்பம்..!!

எலிசபெத் மகா ராணியின் இறுதிக் கணங்கள் ..
...............
ஸ்கொட் லாண்டின் பல்மோரால் அரண்மனை . முதலாம் மாடியில் ராணியின் படுக்கையறையில் இருதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் கணிக்கும் கருவிகள் பொருத்தப் பட்ட நிலையில் கட்டிலில் படுத்திருக்கிறார் . அவரைச்சுற்றி இங்கிலாந்தில் சிறந்த வைத்தியர்கள் குழு ஒன்று அவரின் உடலின் ஒவ்வொரு அசைவையும் கண்காணித்தபடியிருக்கின்றார்கள் . இளவரசர் சார்ள்ஸ் சோகமாக மனைவி கமீலாவின் கைகளை பற்றியபடி நின்றிருக்க . அவரின் மகன் வில்லியம் அப்போ தான் உள்ளே வந்தவர். அப்பா ..தம்பி ஹென்றிக்கு தகவல் சொல்லியாச்சா என்று கேட்க்கிறார் . சார்ள்ஸ் அதுக்கு ஆம் என்று தலையசைத்து விட்டு யன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்க்கிறார் . தகவல் பரவி உள்ளூர் பத்திரிகையிலிருந்து உலக பத்திரிகையாளர் எல்லோரும் அரண்மனை வாசலில் கூட தொடங்கியதோடு கேமராக்களை அரண்மனை பக்கம் நீட்டியபடியே செய்திகளை முந்திக்கொடுக்கும் வெறியோடு காத்திருக்கிறார்கள் ..

மக்களும் கூடத் தொடங்க காவல்துறை தடுப்புக்களை அமைத்து அவர்களை ஒழுங்கு பண்ணத் தொடங்கியிருந்தனர் . அமெரிக்காவிலிருந்த பேரன் ஹென்றிக்கு பாட்டி நிலைமை மோசம் என்று தகவலறிந்ததுமே அவரின் மனைவி மார்க்கெல். என்னை அவமதித்த அந்த கிழவி முகத்தில் முழிக்க மாட்டேன் நீ வேண்டுமானால் தனியாகப் போ . என்று கணவன் ஹென்றியிடம் கோபமாக சொல்லிவிட அவரும் அவசரமாக தனி விமானத்தில் லண்டன் புறப்பாட்டு விட்டிருந்தார் .

ராணி இடைக்கிடை கண் விழிப்பதும் எதோ சொல்ல வருவதும் பின்னர் மயக்க நிலைக்கு போவதுமாக இருந்தார் . சார்ள்ஸ் வைத்தியர்களை பார்க்க . அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரியாமல் வைத்தியர்கள் கைகளை பிசைந்தபடி நிற்க .. இப்போ இரவாகி விட்டிருந்தது . வெளியே பொது மக்கள் எல்லோரும் மெழுகு வர்த்தி ஏந்தி ராணிக்காக பிரார்த்தனை செய்து கொண்டிருக்க ஒரு பாதிரியாரும் ராணியே எழுந்து வா .. என்று அருகில்நின்ற ஒரு பெண்ணின் தலையில் கை வைத்து செபித்துக் கொண்டிருந்தார் .

ராணி கடைசியாக எதோ சொல்ல நீண்ட நேரமாக போராடிக்கொண்டிருக்கிறார் அது என்னவென்று எல்லோரும் தவித்துக்கொண்டிருக்க . அப்போ வந்து சேர்ந்த ஹென்றிக்கு தான் அந்த யோசனை வந்தது. ராணியிடம் நீண்டகாலமாக உதவியாளராக இருந்த பிலிப் என்பவருக்கே ராணியின் அனைத்து அசைவுகளும் புரியும் ஆனால் வயதான அவரும் படுத்த படுக்கையாகி கிடக்கிறார் அவரை கொண்டு வந்தால் ராணி சொல்ல வருவதை புரிந்து கொள்வார் என்றதுமே ஒரு அம்புலன்ஸ் வண்டி வேகமாய் போய் பிலிப்பை அள்ளிப் போட்டுக்கொண்டு வந்தது .

ராணிக்கு அருகில் இருந்த பிலிப் அவரின் கைகளை லேசாக தொட்டதும் லேசாக கண் விழித்த ராணியின் உதடுகள் அசைந்தது . உடனே சார்ள்ஸ் ஒரு பேப்பரையும் பேனையையும் பிலிப்பின் கைகளில் கொடுக்க நடுங்கிய கைகளால் பிலிப் அதில் எழுதினார் .. அதோடு ராணி கண்களை மூடினார் . அவரில் பொருத்தப்பட்டிருந்த கருவிகள் அனைத்தும் பீப் என்ற சத்தத்தோடு ஒரே நேர் கோட்டில் இயங்க . எல்லோரும் தலை குனிந்து சிலுவை போட்டுக் கொண்டார்கள் .இங்கிலாந்திலிருந்த அத்தனை தேவாலயங்களினதும் மணிகள் ஒலிக்க விடப்பட்டிருந்தது ..

பிலிப் தான் எழுதிய துண்டு காகிதத்தை சார்ள்ஸிடம் கொடுக்க கலங்கிய கண்களோடு அதை வாங்கியவர் மாடியின் பால்கனிக்கு வரவே அதுவரை காத்திருந்த அத்தனை மக்களும் ஊடகங்களின் காமராக்களும் பால்கனியை நோக்கித் திரும்பவே. இதோ மகா ராணியின் இறுதிச் செய்தி என்றபடி சார்ள்ஸ் கையிலிருந்த துண்டுக்காகிதத்தை உயர்திக் காட்டினார் .. அதில் சீமானுக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை அவரை எனக்குத் தெரியாது என்று எழுதியிருந்தது ...

என்னால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. நீங்கள்???

1 comment:

  1. எப்படி சிரிப்பை அடக்க,,,, சிரிக்காமல் இருக்க முடியும்!

    ReplyDelete