Friday, July 2, 2021

இறந்தவர் பெயரில் மோசடிக்கு முயற்சி

  


தோழர் இ.எம்.ஜோசப், எங்கள் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் முன்னாள் துணைத்தலைவர்.  சிறந்த பொருளாதார நிபுணர். அருமையாக வகுப்பெடுக்கக் கூடிய தோழர். நல்ல மொழிபெயர்ப்பாளர், பேச்சாளர். இரண்டாண்டுகளுக்கு முன்பு ஜூன் முப்பது அன்று அவர் மறைந்து விட்டார்.

 நேற்று மாலை அவருடைய பெயரில் ஒரு முகநூல் நட்பழைப்பு வந்தது. மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அதன் ப்ரொஃபைல் பூட்டப் பட்டிருந்தது. ஏழு பேர் ஏற்கனவே நட்புப்பட்டியலில் இணைந்திருந்தார்கள். அதில் ஒருவரான நெல்லைக் கோட்டச் சங்கத்தின் ஓய்வு பெற்ற தலைவர் தோழர் டி.தேவபிரகாஷ் அவர்களை தொடர்பு கொண்டு விபரம் கேட்டால் “தோழர் ஜோசப் அவர்களின்  மனைவி என்று நினைக்கிறேன். முதல் நாள்  இணைய வெளியில் தோழர் ஜோசப் நினைவு கருத்தரங்கில் அவர் கலந்து கொண்டார். அதன் தாக்கத்தால் ஒரு வேளை அவர் தோழர் ஜோசப் பெயரில் முகநூல்  தொடங்கியிருக்கலாம்” என்று அவர் சொல்ல நானும் அந்த நட்பழைப்பை ஏற்றுக் கொண்டாலும் ஒரு சின்ன நெருடல் இருந்து கொண்டே இருந்தது.

 நேற்று இரவு ஹலோ என்று இன்பாக்ஸில் செய்தி வர. யெஸ் என்று பதில் அளித்ததோடு இன்று காலை மீண்டும் உரையாடல் தொடங்கியது. எல்.ஐ.சி ஊழியரா என்ற கேள்விக்கு ஆமாம் என்று  பதில் வந்தாலும் எங்கே என்ற கேள்விக்கு வீடு என்றே பதில் வந்தது. எந்த அலுவலகம் என்று கேட்ட பின்பு பெங்களூர் என்ற பதில் வந்து அந்த மோசடிப் பேர்வழி அம்பலமாகி விட்டது. ஏனென்றால் தோழர் ஜோசப் மதுரையில் மட்டுமே பணியாற்றியவர்.

 







நீ ஒரு ஃப்ராடு, நீ வைத்திருக்கும் புகைப்படத்தில் இருப்பது யார் தெரியுமா என்று கேட்டவுடன், அந்த மோசடி ஜென்மம் என்னை உடனடியாக ப்ளாக் செய்து விட்டது.

 இரண்டாண்டுகளுக்கு முன்பு இறந்து போனவருடைய பெயரில் கூட மோசடி செய்ய ஆட்கள் உள்ளனர்.

 இது அனைவருக்குமான எச்சரிக்கை.

 ஏற்கனவே முகநூல் கணக்கு உள்ளவரிடமிருந்து மீண்டும் நட்பழைப்பு வந்தால் ஏற்க வேண்டாம்.

 தங்கள் பக்கத்தை பூட்டி வைப்பவரிடமிருந்து நட்பழைப்பு வந்தால் ஏற்க வேண்டாம். (தாங்கள் யாரென்று சொல்ல விரும்பாதவருடைய நட்பு அவசியமா என்ன?)

 இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக இன்பாக்ஸ் மூலம் பணம் கேட்டால் கண்டிப்பாக அனுப்ப வேண்டாம். தெரிந்தவர் என்றால் தொலைபேசி மூலம் தெளிவு படுத்திக் கொள்ளவும்.

No comments:

Post a Comment