Tuesday, March 30, 2021

ரெண்டு கட்டு பணமா? . . .வட போச்சே . . .

 


 “இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி” என்று ஃப்ரண்ட்லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் தன் காரை நிறுத்திய போலீசார், பணம் கடத்தப் படுகின்றதா என டிபன் பாக்ஸ் உட்பட சோதனையிட்ட கடமை உணர்ச்சியைப் பற்றி எழுதியிருந்தார்.

இந்த முறை தேர்தல் நடத்தை விதிகள் தொடங்கிய பிறகு ஒரு முறை குடியாத்தத்திற்கும் இரண்டு முறை சென்னைக்கும் காரில் பயணம் மேற்கொண்டிருந்தேன். ஆனால் இது வரை பறக்கும் படையின் கடைக்கண் பார்வை கிடைக்கவில்லை. முதல் முறை சென்னை சென்று திரும்பி வருகையில் சோதனையிட்டிருந்தால் டிக்கியில் இரண்டு கட்டைப் பைகள் பார்த்து மகிழ்ச்சியடைந்திருப்பார்கள். ஆனால் அவை சென்னை புத்தக விழாவில் வாங்கிய புத்தகங்கள் என்பதை அறிந்து நொந்திருப்பார்கள் என்பது வேறு விஷயம். (இந்த வருடம் வாங்கிய புத்தகங்களை வைப்பதற்கான இடத்தை இன்னும் கண்டுபிடிக்காததால் அதன் பட்டியலை தயாரித்து இன்னும் பகிர்ந்து கொள்ள இயலவில்லை).

முந்தைய சந்தர்ப்பங்களில் பல சோதனைகள் நடந்திருந்தாலும் இரண்டு சோதனைகள் சுவாரஸ்யமானவை.

ஒரு தோழருடைய அம்மாவின் மறைவுக்காக செஞ்சி தாண்டி, விழுப்புரத்திற்கு முன்னாள் இருக்கும் ஒரு கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தோம். போகும் வழியில் ஐந்து இடங்களில் நிற்கும் படையின் (மர நிழலில் நின்று கொண்டிருந்ததால்) சோதனையிட்டது. அதில் ஒரு இடம் அந்த கிராமத்திற்கு திரும்பும் பாதையில். அஞ்சலி செலுத்தி விட்டு திரும்புகையில் மீண்டும் நிற்கும் படை நிறுத்தியது. “போற போதுதானே சார் செக் பண்ணுனீங்க, இப்போ மறுபடியுமா?” என்று நான் கேட்க, “ஊரிலே இருந்து பணம் கடத்திட்டு வந்திருந்தீங்கன்னா” என்று ஒரு கடமை வீரர் கேட்க காரில் இருந்த அனைவரும் சிரித்து விட்டார்கள். இப்படித்தான் பதில் சொல்வாங்க பாருங்களேன் என்று ஒரு நிமிடம் முன்பாக நான் சொன்னது நடந்ததால் வந்த சிரிப்பு அது.

2014 மக்களவைத் தேர்தலின் போது விழுப்புரம் மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக போட்டியிட்ட தோழர் ஜி.ஆனந்தன் அவர்களுக்காக இரண்டு பிரச்சார நோட்டீஸ்களை தயார் செய்திருந்தோம். சிதம்பரத்தில் ஒரு தோழரின் மகள் திருமணம். போகும் வழியில் பண்ருட்டியில் நோட்டீஸை கொடுத்து விட்டால் அங்கிருந்து எடுத்துக் கொள்கிறேன் என்று விழுப்புரம் தோழர் சொல்லியிருந்தார். எனவே அந்த நோட்டீஸ் கட்டுகள்  கார் டிக்கியில் இருந்தது.

 

திருவண்ணாமலைக்கு முன்பாக காரை நிறுத்தினார்கள். டிக்கியை திறந்ததும் அந்த காவலர், எதிர்ப்பக்க மரத்தடி நிழலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஏட்டையாவைப் பார்த்து “சார் ரெண்டு கட்டு:” என்று உரத்த குரலில் கத்த, அவரோ ஏட்டையாக்களுக்கே உரிய தொந்தியை கஷ்டப்பட்டு தூக்கிக் கொண்டு ஓடி வந்தார்.

 கட்டுக்களின் மேலே சொருகி இருந்த நோட்டீஸ்களை எடுத்து “இதுதான் இருக்கு” என்று சொன்னாலும் அவர் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. கட்டுக்களை பிரித்தே ஆக வேண்டும் என்று அடம் பிடித்து பிரிக்க வைத்தார். முழுவதும் நோட்டீஸ்கள் மட்டும்தான் என்றதும் அவர்கள் முகம் பியூஸ் போன பல்புகளாகி விட்டது. கட்டுக்களைப் பார்த்த அந்த நொடிப் பொழுதில் “தொலைக்காட்சியில் முகம், நாளிதழ்களில் புகைப்படம், பாராட்டுக்கள்” என்று எத்தனை கனவுகள் மனதில் ஓடியிருக்கும்!

 மனைவியின் இறப்புச் செய்தி அறிந்ததும்  தளர்ந்து போன எஸ்.பி.சவுத்ரி நடை போலவே  நடந்து ஏட்டையா மீண்டும் மரத்தடிக்கு போய் விட்டார்.

 பாவம் வட போச்சே!

 

No comments:

Post a Comment