Tuesday, February 23, 2021

ஆட்சியைக் கவிழ்த்தது தோற்றுப் போனவர்கள்

 



நேற்று புதுவையில் நடந்த ஜனநாயகப் படுகொலை பற்றிய பதிவைப் படித்த ஒரு புதுவை தோழர் “நியமன எம்.எல்.ஏ க்கள் எல்லாம் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு மோசமாக தோற்றவர்கள்” என்று வாட்ஸப் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.

நேற்று ஒரு பயணம். இரவில் வீடு திரும்புகையில் தேர்தல் ஆணைய இணைய தளத்தில் அந்த விபரங்களை தேடி எடுத்தேன்.

2016 சட்டமன்ற தேர்தலில் பாஜக முப்பது தொகுதிகளிலும் போட்டியிட்டது.  மொத்தம் பதிவான 7,90,881 வாக்குகளில் அது பெற்ற மொத்த வாக்குகள் 18406 மட்டுமே.

உசுடு என்ற ஒரே ஒரு தொகுதியில் மட்டும் 6,323 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றது. இரண்டு தொகுதிகளில் மட்டும் தலா 1492, 1633 வாக்குகளைப் பெற்று நான்காவது, ஐந்தாவது இடங்களைப் பெற்றிருந்தது. மொத்தம் பதிவான வாக்குகளில் பாஜக பெற்றது வெறும் 2.32 % மட்டுமே.

 ஐநூறுக்கும் மேல் வாக்குகள் பெற்ற தொகுதிகள் ஐந்து. மூன்னூறிலிருந்து ஐநூறுக்குள் பெற்றது மூன்று தொகுதிகள். இருநூறிலிருந்து முன்னூறுக்குள் பெற்றது எட்டு தொகுதிகள். நூறிலிருந்து இருநூறுக்குள் பெற்றது ஒன்பது தொகுதிகள். நூறுக்கும் குறைவாகப்ப் பெற்றது இரண்டு தொகுதிகள்.

 கிரண் பேடியால் தன்னிச்சையாக நியமனம் செய்யப்பட்ட மூன்று எம்.எல்.ஏ க்களில் ஒருவர் புதுவை பாஜக தலைவர். இன்னொருவர் பாஜக பொருளாளர். இன்னொருவரோ “கல்வி வள்ளல்:. சங்கர் என்ற பொருளாளர் இறந்து போனதால் அந்த இடத்தில் விக்ரமன் என்ற இன்னொரு சங்கி நியமன எல்.எல்.ஏ ஆகிறார்.

 இந்த நியமன எம்.எல்.ஏ க்கள் பெற்ற வாக்கு விபரங்களைப் பார்ப்போம்.

 கல்வி வள்ளல் எஸ்.செல்வ கணபதி போட்டியிடவில்லை.

 லாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட வி.சாமிநாதன் பெற்றது 1,492 வாக்குகள் மட்டுமே. நான்காவது இடம். வெற்றி பெற்றவர் பெற்றதோ 11,980 வாக்குகள்.

 மனவேலி தொகுதியில் போட்டியிட்ட டி.விக்ரமன் பெற்றது 172 வாக்குகள் மட்டுமே. ஒன்பதாவது இடத்தைப் பிடித்தவர் இவர். வெற்றி பெற்றவர் பெற்றதோ  9,194 வாக்குகள்.

 இன்னொரு முக்கியமான ஒன்று உண்டு. கவிழ்ப்பு வேலையை முன் நின்று செய்த கிரண் பேடி அம்மையார் டெல்லி சட்டமன்ற தேர்தலில் 2,200 வாக்குகள் வித்தியாசத்திலும் தமிழிசை அம்மையார் மக்களவை தேர்தலில் தூத்துக்குடியில் 3,47,200 வாக்குகள் வித்தியாசத்திலும் தோற்றுப் போனவர்கள்.

புதுவை மக்களால் கேவலமான முறையில் நிராகரிக்கப்பட்டவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் ஆட்சியை கவிழ்ப்பது என்பது எவ்வளவு மோசமான செயல்!

 

நிச்சயம் இதற்கு புதுவை மக்கள் பதிலடி கொடுப்பார்கள்.

No comments:

Post a Comment