Thursday, January 14, 2021

மறக்க இயலா தோழர் அவர் . . .

 


இன்று காலை இப்போதுதான் முக நூல் வந்தேன்.  வந்ததுமே மிகப் பெரும் அதிர்ச்சியாக தோழர் காஷ்யபன் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து கொண்டேன்.

எல்.ஐ.சி ஓய்வூதியர் என்பதைத்தாண்டி எழுத்தாளர், தீக்கதிர் பத்திரிக்கையாளர்,  நாடக நடிகர், தமுஎகச அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர், வரலாற்றுச் செய்திகளை பகிர்ந்து கொள்பவர், இடதுசாரி சித்தாந்தத்தின் மீது நம்பிக்கை கொண்டவர், மனித உரிமைகளை பேணுபவர் ஆகியவையெல்லாம்தான் அவரது அடையாளம், சிறப்பு.

மதுரைக் கோட்டத்தில் பணியாற்றிய தோழர், பணி ஓய்வுக்குப் பிறகு நாக்பூரில் அவரது மகனோடு வசித்து வந்தவர். கொரோனா அவரது மகனைப் பறித்தது பெருந்துயரம். கொஞ்சம் கொஞ்சமாக தேற்றிக் கொண்டு தன் வழக்கமான பாணியில் எழுதி வந்தவரின் எழுத்து நிரந்தரமாக நின்று விட்டது. 

தனிப்பட்ட முறையிலும் எனக்கு பேரிழப்பு. என் எழுத்துக்களை எப்போதும் உற்சாகப்படுத்தியவர். சிறுகதைகளை வாசித்து விட்டு தொலைபேசியில் கூப்பிட்டு பேசுவார். "முற்றுகை" வாசித்து விட்டு நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். பல்வேறு நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

தன் மனைவியின் எழுத்துப்பணி மீது மிகுந்த பெருமிதம் கொண்டவர். நாக்பூரில் அகில இந்திய மாநாடு நடைபெற்ற போது தமிழகத் தோழர்களை பார்க்க சிரமம் எடுத்துக் கொண்டவர், தன் மனைவி எழுதிய "அஜிமுல்லாகான்" நூலை அனைவருக்கும் பரிசாக அளித்தார்.



"வால்கா முதல் கங்கை வரை" நூல் அவரது மனைவியின் தமிழாக்கத்தில் வந்த போது வலைப்பக்கத்தில் எழுதியிருந்தேன். அதை வாசித்து விட்டு அந்த மொழிபெயர்ப்பிற்காக எவ்வளவு சிரமப்பட்டார் என்று பகிர்ந்து கொண்டார்.

உங்கள் கூர்மையான எழுத்துக்கள் இனி வராது என்பது மிகவும் வருத்தமளிக்கிறது தோழர். ஆனால் உங்களை எப்போதும் மறக்க இயலாது.

செவ்வணக்கம் தோழர் சியாமளம் காஷ்யபன்


2 comments:

  1. பல முறை அலைபேசி வழி ஐயாவுடைன் பேசியிருக்கிறேன்
    ஆழ்ந்த இரங்கல்

    ReplyDelete