Wednesday, December 26, 2018

அந்த வெக்கையைக் காட்டிலும் . . .




















நேற்று வெண்மணி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த தமிழகம் முழுதிலிருந்தும் சுமார் எழுநூறு இன்சூரன்ஸ் ஊழியர்கள் திரண்டிருந்தனர். வெண்மணி நினைவகம் நோக்கி பேரணியாய் புறப்படும் முன்னர் ஒரு சிறிய கூட்டம் நடைபெற்றது.

சங்கத்தலைவர்கள் தோழர்கள் எம்.கிரிஜா, கே.சுவாமிநாதன், என்.ஆனந்த், ஆர்.புண்ணியமூர்த்தி ஆகியோரைத் தவிர தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் கௌரவத் தலைவர் தோழர் ச.தமிழ்ச்செல்வனும் உரையாற்றினார்.


அவரது உரை மிகவும் முக்கியமானது. அதிலிருந்து சில பகுதிகளை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

“வெண்மணி குறித்த வரலாறை தொடர்ந்து மக்களிடம் எடுத்துச் செல்லும் பணியை நடுத்தர வர்க்க ஊழியர்கள் செய்திட வேண்டும்.

வெண்மணி கொடூரம் நிகழ்ந்த போதுதான் தோழர் மைதிலி சிவராமன் அமெரிக்காவிலிருந்து திரும்பி இருந்தார். அவர் வெண்மணியில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தார். கொடூரத்திற்கு காரணமான பண்ணையார்களையும் சென்று சந்தித்தார்.

ஏன் இந்த கொடூரம்?
அவர்கள் கூலி உயர்வு கேட்டது பிரச்சினையா?
செங்கொடியை அகற்றி உங்களின் மஞ்சள் கொடியை ஏற்ற மறுத்தது பிரச்சினையா?

 என்று கேட்டதற்கு பண்ணையார்கள் சொன்ன  என்ன தெரியுமா?

கூலி உயர்வு என்பது பிரச்சினையே இல்லை. அரை படி அல்ல ஒரு படி கூட கொடுத்து விடலாம். அவர்கள் செங்கொடியை பிடித்துக் கொண்டு இருப்பதுதான் பிரச்சினை.

அப்படியென்றால் செங்கொடியை பிடித்திருப்பதை உங்களுடைய ஈகோ பிரச்சினையாகப் பார்க்கிறீர்களா என்றும் அவர் கேட்கிறார்.

அது ஈகோ பிரச்சினை இல்லை. செங்கொடியைப் பிடித்ததும் அவர்களுக்கு ஒரு திமிர் வந்து விட்டது.  நாங்கள் முன்பெல்லாம் வேலைக்கு வராத கூலிகளை சாட்டையால் அடிப்போம். சாட்டையின் நுனியில் கட்டப்பட்டிருக்கும் கல், சதையை பிய்த்துக் கொண்டு வரும். கட்டி வைத்து அடிக்கையில் தாகம் என்று கதறினால் சாணியைக் கறைத்து சாணிப்பால் புகட்டுவோம். செங்கொடி வந்ததும் அது எல்லாம் நின்று போனது.

முழங்காலுக்கு மேல்தான் புடவை கட்ட வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. அவர்கள் விரைவாக வேலை செய்யவும் அவர்களை நாங்கள் ரசிக்கவும் அப்படி வைத்திருந்தோம். அது மாறி விட்டது.

ஏட்டி என்று  அழைத்தால் ஏண்ட்டி என்று திரும்பி அழைக்கவும் "அடித்தால் திருப்பி அடி" என்றும் கற்றுக் கொடுத்து விட்டார்கள்.  

எங்கள் வீட்டு புழக்கடையில் நின்று மீந்து போன கஞ்சியை சிரட்டையில் வாங்கிக் குடித்தவர்கள் எல்லாம் வீட்டு வாசலில் நின்று  ஐந்து மணியாகி விட்டது, கட்சிக்கூட்டம்  இருக்கு, வரட்டுமா ஆண்டை என்று சொல்லிப் போகிறார்கள்.

இதற்கெல்லாம் பாடம் கற்றுக் கொடுத்து செங்கொடி இயக்கத்தை அழிக்கத்தான் செய்தோம்”

என்றெல்லாம் ஆணவமாக பதில் கொடுத்தார்கள்.

இதையெல்லாம் கேட்ட பின்புதான் தோழர் மைதிலி சிவராமன் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தார்.

சாதாரண மக்களுக்கு இன்னமும் நம்பிக்கை அளிப்பது செங்கொடிதான் என்பதை மக்களிடத்தில் தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டும்.”

கூட்டம் நடக்கும் போதும் சரி, பின்பு வெண்மணி நினைவகம் சென்று திரும்பும் போதும் சரி மிகக் கடுமையான வெயில்.

வழக்கத்தை விட மிக அதிகமான கூட்டம். உள்ளே செல்வதை விட திரும்புவது மிகவும் சிரமமாக இருந்தது. நடையும் வழக்கத்தை விட இரட்டிப்பு தூரம்தான். 

உச்சி வெயில் நேரடியாக தாக்கியது. ஆனாலும் அது அவ்வளவு கடுமையாக இல்லை.

ஆமாம்.

தன் உரையைத் தொடங்கும் முன்பாக தோழர் தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டார்.

“இப்போது நல்ல வெயிலாகத்தான் உள்ளது. ஆனாலும் வெண்மணியில் வெந்து கருகிய தோழர்கள் சந்தித்த வெக்கையை விட ஒன்றும் பெரிதான ஒன்றை நாம் அனுபவிக்கப் போவதில்லை”

ஆம்,

அவர்கள் அனுபவித்த அந்த மரண வாதையை விடவா நம் சில நிமிட சிரமங்கள் பெரிது !!!


No comments:

Post a Comment