Friday, December 28, 2018

இடப் பக்கமாய் வராதீர்கள்





இந்த தலைப்பை இந்த வலைப்பக்கத்தில் பார்க்க அதிர்ச்சிகரமாய் உள்ளதல்லவா? இத்தலைப்பில் ஒரு கவிதையைப் பார்க்கையில் எனக்கும் கூட இருந்தது.


நூல்                                        : பெண்டிரும் உண்டுகொல்?
ஆசிரியர்                             :  கோவை மீ.உமாமகேஸ்வரி
வெளியீடு                            : பாரதி புத்தகாலயம்
                                                  சென்னை – 18
விலை                                    : ரூபாய் 70

எங்கள் கோவைக் கோட்டச்சங்கத்தின் இணைச்செயலாளரும் தமுஎகச அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினரும் பட்டிமன்றப் பேச்சாளருமான தோழர் உமா மகேஸ்வரி அவர்களின் கவிதைத் தொகுப்பு இந்த நூல்.

பெண்களின் நுண் உணர்வுகளை, அவர்களின் வலியை, ஆதங்கத்தை உழைக்கும் வர்க்கப் பார்வையோடு அழகு தமிழில் தேர்ந்தெடுத்த வார்த்தைகளோடு கவிதைச்சரம் தொடுத்துள்ளார்.

சில தலைப்புக்களும் சில வரிகளும் மட்டும் உங்கள் பார்வைக்கும் படிக்கும் ஆவலைத் தூண்டுவதற்கும்

ஜன்னலோர இருக்கைக்கும் சுதந்திரத்திற்கும் என்ன தொடர்பு என்பதை “மீச்சிறு சுதந்திரம்” சொல்கிறதென்றால் வீட்டிற்குள் அடைக்கப்படும் பெண்ணின் துயரத்தை “வேறெங்கும் கிளைகள் இல்லை” கண்ணீர் மல்க வைக்கிறது.

உறவுகளுக்குள் ஆன ஒப்பனையை “அன்னைக்கு வர முடியலை” கலைக்கிறது.  சில ஆண்களின் சபலக் கண்களுக்கான சவுக்கடி “இடப் பக்கமாய் வராதீர்கள்”

கொலைக்குற்றவாளியின்
தலைமறைவு வாழ்க்கையைக் காட்டிலும்
பதட்டங்கள் நிரம்பியதாயிருக்கிறது
நம் தேசத்து தனிப் பெண்களின் வாழ்க்கை!

என்று முடியும் “தனிப் பெண்கள்” யதார்த்தத்தை கன்னத்தில் அறைந்து சொல்கிறது.

தானியங்கி மின் தூக்கியில்
தனித்திருக்கிறாள் பெண்ணொருத்தி

என்று தொடங்கும் “யாவர்க்குமாம் சுதந்திரம்”  இன்றைய நிலைமையின் அவலத்தைச் சொல்லும் இன்னுமொரு கவிதை.

ஏய்த்துப் பிழைக்காது
உழைத்துப் பிழைக்கிற
பாட்டாளிகளால்தான்
உலக உருண்டை
நிற்காமல் சுழல்கிறது . . .

என்ற உண்மையை உரக்க முழங்குகிறது “நிற்காமல் சுழல்கிறது”

முறிக்கப்பட்ட முதுகெலும்பும் மூன்று நட்சத்திர விடுதியும்
பெண்டிரும் உண்டுகொல்? 
தன் நாமம் கெட்டாள்

ஆகிய அதிர்ச்சிகரமான கவிதைகளுக்கு மத்தியில்

ஆண்டாளின் வெண்ணெய் முத்தங்கள்,
சத்தமாய் கவிதையைப் படிக்காதீர்கள்,
நீயும் நானும் நமது தலையணைகளும்

ஆகிய சுவாரஸ்யமான கவிதைகளும் உண்டு. 

அவசியம் படித்து உணர வேண்டிய கவிதைத் தொகுப்பு


2 comments:

  1. அருமையான விமர்சனம் / அறிமுகம்

    ReplyDelete
  2. நூலினைப் படிக்கத் தூண்டும் நல் அறிமும் | நன்றி நண்பரே

    ReplyDelete