Monday, March 30, 2020

கடைசியில் தடம் புரண்ட "சூல்"



ஊரடங்கு காலத்தில் படித்து முடித்த நூல் இந்த வருடம் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற திரு சோ.தர்மன் எழுதிய "சூல்" நாவல்.

விவசாயிகளின் நுட்பமான அறிவைக் கண்டு சோவியத் யூனியனின் முன்னாள் ஜனாதிபதி பிரஷ்னேவ் வியந்து போன ஒரு சம்பவமே இந்த நூலுக்கான அடிப்படை என்று முன்னுரையில் கொடுத்துள்ளார்.

இந்திய விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தில் எட்டயபுரம் ஜமீனில் உருளைக்குடி என்ற கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையாகக் கொண்ட கண்மாயும்தான் இந்த நாவல்.

கரிசல் காட்டு பிதாமகன் கி.ரா வின் மொழி நடையில் நாவலின் துவக்கப் பக்கங்களிலிருந்து பாதி வரை சுவாரஸ்யமாகவே உள்ளது. பல்வேறு மனிதர்களின் கதைகளின் தொகுப்பாகவேதான்  நூல் செல்கிறது. கிராமத்து மனிதர்களின் வெள்ளந்தியான பேச்சு என்று அங்கங்கே காம நெடி ஓவராகவே அடிக்கிறது.

மழை எப்போது வரும் என்று பறவைகளைப் பார்த்து கணிக்கும் முத்து வீரன் தாத்தா, கண்மாயின் அடைப்பை அகற்ற தன் உயிரைப் போக்கிக் கொள்ளும் கருப்பன், தன் வாழ்நாளுக்குப் பிறகும் தன் பெயரைச் சொல்ல ஒரு நந்தவனத்தை உருவாக்கி வழியில் செல்பவர்கள் தினமும் மோர் பருக ஏற்பாடு செய்யும் கொப்பளாயி, கொப்பளாயிக்கு துணை நிற்கும் காட்டுப்பூச்சி, காரமான வெற்றிலை பயிரிட திருட்டுத்தனமாக தொழில்நுட்பம் கற்று கடைசியில் செத்துப் போகும் கொடிக்கால் வேளார், குப்பாண்டி பண்டாரம் என்று ஏராளமான சுவாரஸ்யமான பாத்திரங்கள் உண்டு.

வீர பாண்டிய கட்டபொம்மனும் கூட வந்து போகிறார். அவருக்கு உதவி செய்த பனையேறிக்கும் ஆசாரிக்கும் கொடுத்தனுப்புகிற நகைகளை அவர்கள் மறைத்து வைத்து விட்டு எப்படி வெளியே எடுத்து பயன்படுத்துவது என்று அலைவதில் நூலும் கொஞ்சம் தடுமாறுகிறது.

ஆவிகள், பேய்கள் ஆகியவை உள்ளது என்றும் அவ்வப்போது பல சம்பவங்கள் மூலம் ஆசிரியர் சொல்லிக் கொண்டே இருக்கிறார். லாஜிக் இல்லாத காஞ்சனா படங்களின் பாதிப்பு போல . . .

சுதந்திரம் வந்தால் மக்கள் நலன் பின்னுக்கு போகும் என்று முதலில் குப்பாண்டி சாமி மூலம் சொல்ல வைக்கிறார்.

அரசாட்சி முடிந்தவுடன் வருகிற ஆட்சியாளர்கள் மூலம் கிராமப்புற வாழ்க்கை பாழாகிறது என்று முடிக்கிறார்.

இதற்கு அவர் பயன்படுத்தியுள்ள கதாபாத்திரங்களின் பெயர்களில்தான் வில்லங்கத்தை விதைக்கிறார்.

பஞ்சாயத்துத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகிற சின்னாத்துரை, அவரது உதவித்தலைவராக இருந்து பதவியேற்ற சில மாதங்களில் விஷ சிலந்தி நோயில் சின்னாத்துரை இறந்து போக தலைவராகிற மூக்கா, இவர்களையெல்லாம் வழி நடத்துகிற சுச்சி நாயக்கர் ( பெயர் என்னமோ ராமசாமி நாயக்கர்தான். இவர் ஒரு வார்த்தை சொன்னால் சுச்சி போட்டது போல வாலிபர்கள் செயல்படுவதால் சுச்சி நாயக்கர் என்று அழைக்கிறார்களாம் என்று ஆசிரியரே எழுதுகிறார்) என்று வெளிப்படையாகவே எழுதுவதில் இவர் யாரைச் சொல்கிறார் என்று நன்றாகவே புரிகிறது.

சுதந்திரம் வந்தவுடனேயே மக்களை பாதிக்கிற சம்பவங்கள் நடப்பதாக எழுதுகிறார். சுதந்திரம் வந்து இருபது வருடத்திற்குப் பிறகுதான் திமுக ஆட்சிக்கு வருகிறது. இடைப்பட்ட காலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த கருவேல மர விதை கொடுத்தது போன்ற சம்பவங்களுக்கு அவர்கள் மீது பழி போடுவது என்ன நியாயம்?

கால்நடை ஆராய்ச்சி மையங்கள் துவக்குவதெல்லாம் கொலைக் குற்றமா என்ன?

பஞ்சாயத்து தலைவர் நிலத்தை ஆக்கிரமிக்கிறார். அதனை கண்டிக்கிற குப்பாண்டிசாமி "சாமி இல்லைன்னு எப்போ நீங்க சொல்ல ஆரம்பிச்சீங்களோ, இந்த திருட்டுத்தனம்தான் செய்வீங்கன்னு எனக்கு அப்பவே தெரியும்" என்கிறார்.

நாத்திகர்களை திருடர்கள் என்று நிறுவ செய்கின்ற முயற்சியல்லவா இது! சபரிமலைக்கு தங்கப்படிக்கட்டுக்களும் கர்னாடகா சுப்ரமணியா கோயிலுக்கு தங்கக் கதவும் செய்து கொடுத்த விஜய் மல்லய்யாதான் இந்திய வங்கிகளின் பணத்தை திருடிக் கொண்டு வெளிநாடு போனது அவருக்கு தெரியாது போல !

உருளைக்குடி எக்காலத்திலும் சுபிட்சமாகவே இருந்தது போலவே எழுதப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல லட்சம் பேரை கொன்றழித்த தாது வருஷப்பஞ்சம் உருளைக்குடிக்கும் எட்டயப்புரம் ஜமீனுக்கும் மட்டும் வரவில்லை போல!

பின்னட்டையில் இந்த நூலை ஜெயமோகன் விதந்தோந்தி எழுதியிருந்த போதே எச்சரிக்கையாக இருந்திருக்க வேண்டும். சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல் என்று வாங்கியதால் படித்து எரிச்சலானதுதான் மிச்சம்.  ஜெமோ சொல்லும் "அறம்" இல்லாத நூல்.





2 comments:

  1. நூலினைப் படித்து முடித்தேது எனக்கும் இதே உணர்வுதான் ஏற்பட்டது

    ReplyDelete
  2. காரமான வெற்றிலை பயிரிட திருட்டுத்தனமாக தொழில்நுட்பமா? ??? ... அப்போ அப்போதே நம்ம ஆளுக நல்ல விவ(கா)ரமாகத்தான் இருந்திருக்கானுகளா.... பலே பாண்டியா !!... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

    ReplyDelete