Friday, March 20, 2020

கைத்தட்டல் தேவையில்லை லூசு . . .


ஒரு மிகப் பெரிய நோய்ப்பரவலை சமாளிக்க உருப்படியாக எந்த ஒரு செயல் திட்டமும் இல்லாத டுபாக்கூர் அரசுதான் மோடி அரசு என்பதை அவருடைய வெட்டி உரை உணர்த்துகிறது.

வெற்று ஆரவாரங்களையும் சினிமாத்தனமான அறிவிப்புக்களையும் தாண்டி எதுவுமில்லை என்பதற்கு மேலாக சில அறிவிப்புக்கள் லூசுத் தனமாகவும் இருக்கிறது.

மக்கள் ஹர்த்தால் என்று பெயரிட்டு 22 ம் தேதி யாரும் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்று அறிவித்துள்ளார். காஷ்மீர் மக்களுக்கு இது பழக்கமானது. மற்றவர்களுக்கு?

பதட்டத்தில் பொருட்களை வாங்கிக் குவிக்காதீர்கள் (No Panic Buying)  என்ற அவரது கூற்றுக்கு முரணாக மக்களை 21 ம் தேதி அன்றைக்கு கடைகளுக்குத் தள்ளி நெரிசலை உருவாக்கி நோய்ப் பரவலுக்கான வாய்ப்பை உருவாக்கவே இந்த மக்கள் ஹர்த்தால் உதவும். 

அது என்ன 22 ம் தேதி மட்டும்?

அந்த தேதிக்கு ஏதாவது அறிவியல் பின்னணி உள்ளதா? அல்லது நாள் நட்சத்திரம் பார்த்து அறிவித்தாரா?

ஒவ்வொரு ஊர்களிலும் மூன்று வேளை உணவுக்கும் விடுதிகளை மட்டுமே நம்பியுள்ள லட்சக்கணக்கானவர்களை பட்டினி போடப் போகிறார் மோடி. 

22 ம் தேதி ஐந்து மணிக்கு எல்லோரும் வீட்டுக்கு வெளியே வந்து ஐந்து நிமிடம் கைதட்ட வேண்டுமாம், லூசுத்தனத்தின் உச்ச கட்டம் இது. பணி செய்பவர்களுக்கு அங்கீகாரம் இது என்ற வியாக்யானம் தரப்பட்டுள்ளது. இந்த வியாக்யானத்தால் புல்லரித்துப் போய் எண்ணற்ற லூசுகள் கைதட்டும் என்பது வேறு விஷயம். 

அங்கீகாரம் அளிக்கும் வழி இது அல்ல,

அதைத் தாண்டி ஏராளமாக இருக்கிறது. 

2015 பெரு வெள்ளத்தின் போது சென்னை ஒரு குப்பை மேடாக மாறியது என்பதும் அப்போது நிலைமையை சரி செய்ய இதர மாவட்டங்களில் இருந்து துப்புறவுத் தொழிலாளர்கள் சென்றார்கள். அப்படி வேலூரில் இருந்து சென்ற ஒருவரின் அனுபவம் பற்றி 08.01.2016 அன்று எழுதி இருந்தேன். 

படா பேஜாராப் போச்சு சார் என்ற பதிவின் இணைப்பு இங்கே

இணைப்பிற்கு செல்ல முடியாதவர்களுக்காக அந்த பதிவை அப்படியே மீண்டும் பகிர்கிறேன்.

படா பேஜாரா போச்சு சார்!




வழக்கமாக எங்கள் சாலையை சுத்தம் செய்யும் துப்புறவுத் தொழிலாளி அந்த தோழர். பல நாட்கள் அவரை பார்க்கவில்லை. இன்றுதான் கண்ணில் பட்டார்.

என்னங்க, கொஞ்ச நாளா காணோமே, எங்க மெட்ராஸ் போயிருந்தீங்களா என்று உரையாடலைத் தொடங்கினேன்.

ஆமாம் சார், ரொம்பவே அவஸ்தையாயிடுச்சு, பதினஞ்சு நாள் பெண்டு நிமித்திட்டாங்க. விடியக் காலயிலே எழுந்து துப்புறவு வேலைக்கு கூட்டிட்டு போயிடுவாங்க, ராத்திரில நிவாரணப் பொருளயெல்லாம் பேக் பண்ண வேற எடத்துக்கு கூட்டிட்டுப் போய்டுவாங்க. தூங்கக் கூட நேரமில்லை என்றார் அவர்.

தங்க வைச்ச இடமெல்லாம் எப்படி இருந்தது?

ஆட்டு மந்தை மாதிரி அடச்சு வைச்சுட்டாங்க. கொசுக்கடி வேற. ஒன்னு ரெண்டு நாள் குளிக்க தண்ணி கூட சரியா வரல.

சாப்பாட்டு வசதியெல்லாம்.

பக்கத்துல எங்க அம்மா ஓட்டல் இருக்கோ, அங்க போய் சாப்பிட்டுக்கோனு சொல்லிட்டாங்க. துட்டு எங்களதுதான்.

சரி, இவ்ளோ கஷ்டப்பட்டீங்களே. எவ்வளவு ரூபா கிடைச்சது?

அத கேக்காத சார், சொன்னா வெட்கக்கேடு. படா பேஜாராப் போச்சு சார்.

பார்த்துக் கொள்ளுங்கள், இதுதான் அம்மா ஆட்சியின் லட்சணம். உழைப்புச் சுரண்டலுக்கு இலக்கணம்.

சென்னை வெள்ளத்தின் போது துப்புறவுத் தொழிலாளர்கள் எப்படி மோசமாக நடத்தப்பட்டார்களோ அதே அவதியைத் தான் கஜா புயலின் போது பாதிக்கப்பட்ட மின் வினியோகத்தை சீரமைக்க தமிழகம் முழுவதிலிருந்தும் சென்ற மின் வாரிய தொழிலாளர்களும் அனுபவித்தார்கள்.

இப்போது அவர்களுக்குத் தேவை என்ன தெரியுமா?

பாதுகாப்பாக பணி செய்வதற்குத் தேவையான உபகரணங்கள்.
பணியிடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள்.
உரிய நேரத்தில் ஆரோக்கியமான உணவு.
பணி நேரத்திற்கு அப்பால் வேலை செய்தால் அந்த காலத்திற்கு நியாயம் ஓவர் டைம் ஊதியம்.
பொதுப் போக்குவரத்து வசதி இல்லாமலிருந்தால் பயண ஏற்பாடுகள்.
தேவையற்ற தலையீடுகள்.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக நியாயமான கோரிக்கைகளுக்காக எதிர்காலத்தில் அவர்கள் அரசையோ நிர்வாகத்தையோ அணுகும் வேளையில் அவர்களை போராட்டத்திற்கு தள்ளாமல் அக்கோரிக்கைகளை தீர்த்து வைப்பது.

இதை இந்த அரசு செய்யுமா?

செல்லா நோட்டு விவகாரத்தின் போதும் பி.எம்.தன் யோஜனா வங்கிக் கணக்குகளை துவக்கிய போதும் வங்கி ஊழியர்கள் மேற்கொண்ட சிரமங்களை பட்டியலிட முடியாது. அவர்களுக்கு 01.11.2017 முதல் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும். 'இவ்ளோ கஷ்டப்பட்ட உங்கள் மீது மோடி கரிசனமா இருக்காரு. நவம்பர் 2017 சம்பளமே உங்களுக்கு புது சம்பளம்தான்" என்று ஆசை வார்த்தைகள் வீசப்பட்டது. வங்கி ஊழியர்கள் பல நாட்கள் வேலை நிறுத்தம் செய்து விட்டனர். ஆனால் இன்று வரை ஊதிய உயர்வு ஒப்பந்தம் முடிவாகவில்லை. இதுதான் உழைத்தவர்களுக்கு இந்த அர்சு அளிக்கும் அங்கீகாரம்.

அங்கீகாரம்தானே, கை தட்டினால் என்ன குறைந்து போய் விடுவோமா என்று அப்பாவித்தனமாக சிலரும் லூசுத்தனமாக பலரும் கேட்பார்கள்.

இன்று மருத்துவர்களை புகழ்கின்ற நீங்கள்தான் நேற்று அவர்கள் போராடிய போது வசை பாடித் தள்ளினீர்கள். இன்று நீங்கள் யாருக்காக கை தட்டப் போகிறீர்களோ, நாளை அவர்களை இந்த அரசு போராட்டக் களத்திற்கு நிச்சயம் தள்ளும். அப்போது நீங்கள் அவர்களுக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை, வசை பாடாமல் வாயை மூடிக் கொண்டாவது இருக்கவும்.


1 comment:

  1. //பதட்டத்தில் பொருட்களை வாங்கிக் குவிக்காதீர்கள் (No Panic Buying) என்ற அவரது கூற்றுக்கு முரணாக மக்களை 21 ம் தேதி அன்றைக்கு கடைகளுக்குத் தள்ளி நெரிசலை உருவாக்கி நோய்ப் பரவலுக்கான வாய்ப்பை உருவாக்கவே இந்த மக்கள் ஹர்த்தால் உதவும்// இதுதான் நடக்கப் போகிறது

    ReplyDelete