Tuesday, November 27, 2018

கேஜ்ரிவாலிடம் எடப்பாடி கற்கட்டும்



புதுடெல்லி ஆம் ஆத்மி அரசு நேற்று ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளது. 

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான முந்தைய பென்ஷன் திட்டம் என்பதில் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு எவ்வளவு பலன் கிடைக்கும் என்பது தெளிவாக தெரியும் (Defined Benefit Scheme)

அதுவே 0.04.2004 க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு மாறி விட்டது. இதிலே பங்களிப்பு என்ன என்பது வரையறுக்கப் பட்டுள்ளது. அடிப்படை ஊதியம், அகவிலைப்படி ஆகியவற்றில் 10 % ஊதியத்தில் பிடிக்கப்பட்டு அதே தொகை அரசாலும் அளிக்கப்பட்டு அத்தொகை பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு ஓய்வு பெறுகிற போது என்ன தொகை மிஞ்சுகிறதோ அத்தொகைக்கு ஏதாவது ஒரு இன்சூரன்ஸ் கம்பெனியில் (அது தனியார் கம்பெனியாகவும் இருக்கலாம்) ஆன்யுட்டி (ANNUITY) பாலிசி எடுக்கப்பட்டு அதிலிருந்து பென்ஷன் வழங்கப்படும்.

வங்கி, இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கு 01.04.2010 முதல் இத்திட்டம் திணிக்கப்பட்டுவிட்டது.

இந்த பங்களிப்பு வரையறுக்கப்பட்ட (Defined Contribution Scheme) ல் பென்ஷன் எவ்வளவு கிடைக்கும் என்பது தெரியாது.

ஊழியர்களின் ஓய்வூதிய நிதியை பங்குச்சந்தைக்கு கொண்டு வந்து சூறையாடுவது என்ற திருப்பணியை துவக்கி வைத்தது வாஜ்பாய் என்பது நினைவிருக்கட்டும்.

இப்போது தேசிய பென்ஷன் திட்டம் என்ற பெயரில் அழைக்கப்படும் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மத்தியரசு, மாநில அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வரும் டிசம்பர் 4 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வேன் என்பது ஜெயலலிதா அளித்த தேர்தல் வாக்குறுதி.

இச்சூழலில் நேற்று டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் விளைபயனாக புதுடெல்லி அரசு தேசிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தையே அமலாக்கப் போவதாக அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார். மிக்ச்சரியான முடிவெடுத்த கேஜ்ரிவாலுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். 

தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முடிவுகளுக்கு முட்டுக்கட்டை போடக்கூடாது என்று லெப்டினன்ட் கவர்னருக்கு ஏற்கனவே உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் அதன் அமலாக்கத்தில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு குறைவு.

அம்மா வழி ஆட்சி நடத்துவதாகச் சொல்லும் எடப்பாடி அரவிந்த் கேஜ்ரிவால் வழியில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து அவர்களின் அம்மா அளித்த உறுதிமொழியை காப்பாற்றட்டும். 

பிகு

அனாமதேயங்களின் புத்தி கூர்மையை சோதிக்கவே ஒரு முக்கியமான தகவலை இங்கே தவிர்த்துள்ளேன்.

நான் எதிர்பார்க்கும் கேள்வி வருகிறதா என்று பார்ப்போம்


3 comments:

  1. Why Edappadi only? Why Not Kerala CM? Does he not learn from Kejriwal? A typical hypocrite post of a communist. Before advising other states, you implement in your own kerala.

    ReplyDelete
  2. ஏன் எடப்பாடிதான் கத்துக்கனுமா? பினராயி கத்துக்க வேண்டாமா? கேரள மாநில அரசு ஊழியர்களுக்கு முதல்ல ரத்து செய்ய சொல்லு.

    ReplyDelete
  3. ஹாஹா. இதை இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். அனானிகளின் புத்திகூர்மையை பரிசோதிக்க ஒரு முக்கிய தகவலை எழுதவில்லை என்று சொன்னதே இது போன்ற அபத்தமான பின்னூட்டம் வரும் என்றுதான்.

    தெளிவா எச்சரிக்கை கொடுத்தும் அவசரப்பட்டு நான் விரிச்ச வலையில இப்படி வந்து சிக்கிட்டீங்களே!

    புதிய பென்ஷன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட போது அதனை முதலில் ஏற்க மறுத்தது மேற்கு வங்கத்தின் இடது முன்னணி அரசு. அந்த முடிவை மட்டும் மம்தா அரசு இன்னும் மாற்றாமல் அப்படியே வைத்துள்ளது.

    கேரளாவில் அப்போது ஏ.கே.அந்தோணி அரசு. காங்கிரஸ் ஆளும் பிற மாநிலங்களில் புதிய பென்ஷன் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டாலும் அரசு ஊழியர்களின் கடுமையான போராட்டத்தாலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அப்போராட்டத்திற்கு ஆதரவு தந்ததாலும் அந்தோணி அரசால் புதிய பென்ஷன் திட்டத்திற்கு மாற்ற முடியவில்லை. அந்தோணியின் முடிவையே அவருக்குப் பின் முதல்வரான உம்மன் சாண்டியும் பின்பற்ற வேண்டியிருந்தது.

    பிறகு மத்தியிலும் ஆட்சி மாற்றம், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம். மன்மோகன் ஆட்சிக்காலத்தில் புதிய பென்ஷன் திட்டத்திற்கு மாறச் சொல்லி நிர்ப்பந்தம் வந்தாலும் தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் உறுதியாக மறுத்து விட்டார். தோழர் அச்சுதானந்தன் எடுத்த முடிவை மீண்டும் ஆட்சிக்கு வந்த உம்மன் சாண்டி தொடர வேண்டியிருந்தது.

    கேரளாவில் புதிய பென்ஷன் திட்டத்தை அமலாக்க முடியாது என்பதில் அங்கே உள்ள அரசு ஊழியர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கறாராக இருப்பதால் அரவிந்த் கேஜ்ரிவாலிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டியது எடப்பாடியும் மற்ற மாநில முதல்வர்களும்தானே தவிர தோழர் பிணராயி விஜயன் அல்ல.

    புதிய பென்ஷன் திட்டத்தை திரிபுராவிலும் அமலாக்காமல் இத்தனை நாள் தோழர் மாணிக் சர்க்கார் பார்த்துக் கொண்டார். ஆனால் கோமாளி பிப்ளப்தேவ் குமாரின் அராஜக அரசு அதனை இப்போது அறிமுகம் செய்துள்ளது.

    அரவிந்த் கேஜ்ரிவால் எடுத்த நல்ல முடிவு மத்தியரசிற்கும் மற்ற மாநில அரசுகளுக்கும் ஒரு நிர்ப்பந்தத்தை உருவாக்கியுள்ளது. அது போலவே போராட்ட களத்தில் நிற்கும் மத்தியரசு, மாநில அரசு, வங்கி, இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது.

    ReplyDelete