Wednesday, February 28, 2024

மோடியென்றால் விதியை மீறலாமா?

 


மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்று பத்து வருடங்களாவது இருக்கும். அந்த முறை சென்ற போது கெடுபிடிகள் புதிதாக இருந்தன. செருப்புக்கள் வைக்கும் இடத்தோடு புதிதாக அலைபேசிகள் வைப்பதற்கான ஒரு கவுண்டர் உதித்திருந்தது. மொபைலோடு செல்ல அனுமதி மறுக்கப் பட்டிருந்தது. அது போலத்தான் காமெராக்களும் அனுமதிக்கப்படவில்லை. பத்து வருடங்களுக்கு முன்பு போன போதுதான் இந்த கெடுபிடி. அதற்கு முன்பு அப்படி கிடையாது என்று நினைக்கிறேன். பொற்றாமரைக்குளம் அருகிலும் பிரகாரங்களிலும் சினிமாக்களே எடுக்கப்பட்டுள்ளது. உதாரணம் சண்டைக் கோழி. போன், கேமரா தடையை நான் தவறென்று சொல்ல மாட்டேன்.  அப்படி இல்லையென்றால் வழிபாட்டுத்தளங்கள் செல்பி எடுத்துக்கொள்ளும் சுற்றுலாத்தளங்களாகி விடும். (இப்போதும் பெரும்பாலான கோயில்கள் அப்படித்தான் உள்ளது என்பது வேறு விஷயம்)

 என்னுடைய கேள்வி எளிமையானது.

 அலைபேசியோ, கேமராவோ உள்ள எடுத்துச் செல்லக்கூடாது என்ற விதி இப்போது மீனாட்சி அம்மன் கோயிலில் அமலில் உள்ளதா இல்லையா?

 அப்படி அமலில் இல்லையென்றால் பேச ஒன்றுமில்லை.

 அமலில்தான் உள்ளது என்றால்  மோடி எப்படி வழக்கம் போல அவரது போட்டோகிராபர் படையோடு உள்ளே சென்றார்?

 மோடியென்றால் கோயிலின் விதிகள் கூட மீறப்படுமா?

 மோடிக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு இதர புகைப்படப் பிரியர்களுக்கும் இனி தரப்படுமா?

 இதிலே கொடுமை என்னவென்றால் என் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு, பாஜகவால் எப்போதும் திட்டப்படும் இந்து சமய அற நிலையத்துறை.

 ஆனாலும் ஒன்றை சொல்லித்தான் ஆக வேண்டும்.


மோடியின் புகைப்படக்காரர் பயங்கரக் கில்லாடி. சும்மா பாலு மகேந்திரா, பி.சி.ஸ்ரீராம் கணக்கா வித்தியாசமான ஆங்கிளில் போட்டோ எடுக்கறாரு. கஷ்டமான வேலையும் கூட. உத்தர்கண்டில் மோடி கேதார்நாத் கோயிலுக்கு போன போது எடுத்த ஒரு போட்டோ உதாரணம். சிவ லிங்கத்தின் மீது உட்கார்ந்தால் மட்டுமே அந்த ஆங்கிளில் அப்படி ஒரு போட்டோ சாத்தியம். . . .

No comments:

Post a Comment