Friday, June 8, 2018

அந்த வருத்தம் இப்போதும் உண்டு





அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவராக 1996 முதல் 2003 வரை செயலாற்றிய தோழர் ஆர்.பி.மான்சந்தா அவர்களின் நினைவு நாள் இன்று.

பாஞ்சால சிங்கம் என்று இவரைச் சொன்னால் அது மிகையல்ல. துவக்கத்தில் சண்டிகர் கோட்டத்தின் பொதுச்செயலாளராக, பின்பு வடக்கு மண்டலத்தின் பொதுச்செயலாளராக  நீண்ட காலம் செயல்பட்ட தோழர்.

கம்பீரமான தோற்றமும் அதற்கேற்ற சிம்மக்குரலும் கொண்ட தோழர். அவர் பேசுவதைக் கேட்பது ஒரு Visual Treat.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் வரலாற்றில் நீண்ட காலம் சிறைக்கு சென்ற பெருமை இவருக்கு உண்டு.

இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கத்தோடு தன் பணியை நிறுத்திக் கொள்ளாமல் பஞ்சாப் மாநிலத்தின் இதர தொழிலாளர்களை அணி திரட்டுவதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். பஞ்சாப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் செய்த போது அந்த மாநில அரசு இவர் மீது  ஆசிரியர்களை மிரட்டியதாக பொய் வழக்கு பதிவு செய்தது.

“இவரது மீசை பெரிதாக இருக்கிறது. ஆகவே இவர் மிரட்டியிருப்பார்” என்று சொல்லி நீதிபதி இவருக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொடுத்தது.

நீதிமன்றத் தீர்ப்பை காரணம் காட்டி எல்.ஐ.சி நிர்வாகமும் அவரை பணி நீக்கம் செய்தது.

கீழமை நீதிமன்றத் தீர்ப்பு உயர்நீதி மன்றத்தில் மாற்றப்படுவதற்குள் இவர் அனுபவித்த சிறைவாசம் ஒன்றரை ஆண்டு.

இன்னொரு போராட்டத்திற்குப் பிறகே தோழர் ஆர்.பி,மான்சந்தா மீண்டும் எல்.ஐ.சி பணியில் இணைந்தார். அதுவும் ஐந்து இன்கிரிமெண்ட் வெட்டுக்களோடு சண்டிகருக்குப் பதிலாக நாக்பூரில்.

அதுவும் சங்கத்திற்கு வசதியாகத்தான் போனது. காவிகளின் தலை நகராக நாக்பூர் இருந்தாலும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் செங்கோட்டைகளில் நாக்பூர் கோட்டமும் ஒன்று.

மீண்டும் சண்டிகர் திரும்பிய தோழர் மான்சந்தா, வடக்கு மண்டல பொதுச்செயலாளராக, தலைவராக பின்பு அகில இந்திய தலைவராக உயர்ந்தார்.

எங்கள் வேலூர் கோட்டத்தில் சங்கத்தின் அனைத்து பெருந்தலைவர்களும் உரையாற்றியுள்ளார்கள், தோழர் ஆர்.பி.மான்சந்தா தவிர.

கேரளாவிற்கு வந்துள்ள தோழர் மான்சந்தா சென்னை செல்லும் வழியில் வேலூர் வந்தால் இரண்டு நாள் அவகாசத்தில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்ய முடியுமா என்று அப்போதைய தென் மண்டல பொதுச்செயலாளர் தோழர் கே.நடராஜன் கேட்க  மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்டு அனைத்து ஏற்பாடுகளையும் செய்யத் துவங்கினோம்.

கூட்டத்திற்காக ஒரு அரங்கை முன் பதிவை செய்து கூட்ட அழைப்பிதழிற்கான ஃப்ரூப் கூட வந்த நிலையில் அவர் உடல் நிலை பாதிப்படைய அவர் நேரடியாக சென்னை செல்ல வேண்டியதாகி விட்டதால்  அக்கூட்டம் ரத்தாகி விட்டது.

அவர் வராத அந்த வருத்தம் இப்போதும் உண்டு.

நினைத்தாலே உற்சாகம் தரும் தலைவருக்கு செவ்வணக்கம்


No comments:

Post a Comment