Wednesday, November 9, 2022

வறுமைக் கோட்டை அபத்தமாக்கிய . . . .

 


பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது தேவையில்லாத ஆணி. பட்டியல் இனத்தவர், பிற்படுத்தப்பட்டவர் ஆகியோரை விடவும் குறைவான மதிப்பெண் பெற்றால் கூட வேலை வாய்ப்பு கிடைக்கிற அபத்தம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

 இந்த பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் பிரிவில் இட ஒதுக்கீடு பெற என்ன தகுதி இருக்க வேண்டும்?

 ஏற்கனவே இட ஒதுக்கீட்டிற்கு தகுதியுடைய பட்டியல் இனத்தவர், பிற்படுத்தப் பட்டோர் ஆகியோராக இருக்கக் கூடாது.

 ஆண்டு வருமானம் எட்டு லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதாவது 66,000 ரூபாய் வரை உங்கள் மாத வருமானம் இருக்கலாம்.

 999 சதுர அடி அளவில் வீடு இருக்கலாம். அதை விட ஒரு சதுர அடி கூட இருந்தாலும் கிடையாது. ஆமாம். அவங்க அவ்ளோ ஸ்ட்ரிக்ட்டு.

 ஐந்து ஏக்கர் நிலத்துக்கு மேல ஒரு இன்ச் கூட நிலம் இருக்கக்கூடாது. ஆமாம்.

 ஆக 66,000 ரூபாய் சம்பளம் 999 சதுர அடி வீடு, நாலே முக்கால் ஏக்கர் நிலம் ஆகியவற்றில் ஏதோ இல்லை அனைத்துமோ வைத்திருந்தால் கூட நீங்கள் பொருளாதார நலிவற்றோருக்கான இட ஒதுக்கீட்டை பெறலாம்..

 இதே நேரம் இந்தியாவில் வறுமைக் கோடு என்றொன்று உண்டு.  அதற்கான வரையறை என்ன?

 ஒருவரின் தினசரி வருமானம் கிராமப்புறத்தில் ஒரு நாளைக்கு ரூபாய் 32 க்கு குறைவாகவும் நகர்ப்புறத்தில் ரூபாய் 47 க்கு குறைவாகவும்  இருந்தால் அவர் வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பதாக அர்த்தம். அப்படி வறுமைக் கோட்டிற்கு மேல் இருப்பவர்களுக்கு இலவச அரிசி உட்பட பல சலுகைகளை ரத்து செய்ய ஏராளமான பரிந்துரைகள் உள்ளது.

 47 ரூபாய்க்கு மேல் சம்பாதித்தால் உங்களுடைய பல சலுகைகள் பறி போகும் அபாயம் உள்ள நிலையில் ஒரு நாளைக்கு 2,000 ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்கள் பொருளாதாரத்தில் நலிவடைந்தவராக கருதப்பட்டு அவர் குடும்பத்திற்கு இட ஒதுக்கீடு கிடைக்கும்.

 சமூக நீதிக்கு முரணான இந்த இட ஒதுக்கீடு தொடர்வது எவ்விதத்திலும் நியாயமில்லை. ஆதரித்தோர் கூட  தங்கள் நிலைப்பாட்டினை மாற்றிக் கொள்வது நல்லது.

 

No comments:

Post a Comment