Monday, June 13, 2022

கலெக்டருக்கே இப்டின்னா, கவர்னருக்கு ????

 


தமிழக முதல்வருக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பரிசளித்த நூல் தொடர்பான இரு பதிவுகளை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

புத்தகப்பரிசளிப்புக்கு பொங்கவேண்டாம் - தமுஎகச மாநிலக்குழு

அரசு நிகழ்வுகளிலும் பொது நிகழ்வுகளிலும் சிறப்பு விருந்தினர்களுக்கு புத்தகங்களை பரிசளிக்கும் பண்பு பரவலாகி வருகிறது. இந்த அறிவுச்செயல்பாட்டைப் போற்றிடும் விதமாக தமிழ்நாட்டின் முதல்வர், பொன்னாடை அல்லது பூங்கொத்துக்கு பதிலாக புத்தகங்களையே தனக்கு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அவ்விதமே தனது விருந்தினர்களுக்கும், தான் சந்திக்கும் ஆளுமைகளுக்கும் புத்தகங்களையே பரிசாக வழங்கி நல்ல முன்னுதாரணத்தை உருவாக்கிவருகிறார். இதன் தொடர்ச்சியிலேயே புதுக்கோட்டை மாவட்டத்திற்கு ஜூன் 8ஆம் தேதி வருகைதந்த முதல்வருக்கு அம்மாவட்ட ஆட்சியர் புத்தகமொன்றினை அன்பளிப்பாய் வழங்கியுள்ளார்.

“அறியப்படாத கிறிஸ்தவம் – தமிழ்நாட்டில் ஒரு வரலாற்றுத் தேடல்” என்ற அந்நூல், நிவேதிதா லூயிஸ் என்பவரால் தமிழ்நாடு முழுக்க கள ஆய்வு செய்து திரட்டப்பட்ட தகவல்களைக் கொண்டு எழுதப்பட்டது. தமிழ்ச்சமூகம், அரசியல் பொருளியல் பண்பாட்டுத்தளங்களில் அடைந்துள்ள முன்னேற்றங்களுக்கு கிறித்துவம் ஆற்றிய பங்கினை பேசுகிறது. அதேவேளை ஒரு மதம் என்கிற வகையில் அதனுள் இருக்கும் உள்முரண்களையும் மோதலையும் தீர்த்துக்கொள்ள முடியாமல் திணறுவதையும் ஓரச்சார்பின்றி பேசுகிறது. இந்த உண்மைகளை அறிந்துணராமல் புத்தகத்தின் தலைப்பில் கிறித்துவம் என்ற சொல் இருப்பதைப் பார்த்த மாத்திரத்திலேயே ஆத்திரமடைந்துவிட்ட பாரதிய ஜனதா கட்சியினர், அந்தப் புத்தகம் கிறித்துவத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யக்கூடியதென்றும் அதை முதல்வருக்கு கொடுத்ததன் மூலம் மதச்சார்பற்று பொதுவாக இருக்கவேண்டிய மாவட்ட ஆட்சியர் நடுநிலை தவறிவிட்டதாகவும் அபத்தமாக குற்றம்சாட்டத் தொடங்கியுள்ளனர். போகிறபோக்கைப் பார்த்தால் புத்தகங்களை மட்டுமல்ல, பொட்டலம் கட்டும் காகிதத்தைக்கூட தங்களிடம் காட்டி முன்தணிக்கைப் பெறவேண்டும் என்று பாஜகவினர் கொக்கரிப்பார்கள் போல.

சிறுபான்மை மதத்தவர் மீதான வெறுப்புணர்விலிருந்தும், தமிழக/ இந்தியச் சமூகத்திற்கு சிறுபான்மைச் சமூகங்கள் ஆற்றிய ஆக்கப்பூர்வ பங்களிப்புகளை இருட்டடிப்பு செய்யும் இழிநோக்கிலிருந்துமே அறிவுச்செயல்பாடுகளை அணுகும் பாஜகவின் நிலையை ஏற்க முடியாது. விரும்பும் நூலை எழுதவும் படிக்கவும் பரிமாறிக்கொள்ளவும் பரிசளிக்கவும் மக்களுக்குள்ள அடிப்படை உரிமையைப் பறிக்கும் பாஜகவின் இத்தகைய மிரட்டலையும் ஜனநாயக விரோதமான தலையீடுகளையும் கருத்துரிமையில் பற்றுள்ள யாவரும் கண்டிக்க வேண்டுமாய் தமுஎகச கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்
மதுக்கூர் இராமலிங்கம், Mathukkur Ramalingam மாநிலத்தலைவர் (பொ)
ஆதவன் தீட்சண்யா Aadhavan Dheetchanya , பொதுச்செயலாளர்
13.06.2022 


மாநிலங்களவை உறுப்பினர் திரு எம்.எம்.அப்துல்லா அவர்களின் பதிவு கீழே

புதுக்கோட்டை ஆட்சியர் திருமதி.கவிதா ராமு அவர்கள் நமது முதல்வர் ஐயா அவர்கள் இங்கு வந்திருந்த போது "அறியப்படாத கிருஸ்துவம்" என்ற புத்தகத்தை பரிசாக அளித்தார். எனக்கும் கூட குடுத்தார். அதன் முதல் பாகத்தை இப்போதுதான் படித்து நிறைவு செய்தேன்.
இந்தப் புத்தகத்தைப் பரிசளித்ததற்காக சங்கிகள் "எல்லோருக்கும் பொதுவான ஆட்சியர் எப்படி ஒரு மதரீதியான புத்தகத்தை முதல்வருக்கு வழங்கலாம்?" என கள் குடித்த குரங்கு போல குதிக்கின்றார்கள்!!
அதன் முதல் பாகத்தை படித்து முடித்தவன் என்ற அடிப்படையில் சொல்கிறேன்... அந்தப் புத்தகத்தின் தலைப்பில் கிருஸ்துவம் என்று இருப்பதால் தான் குதிக்கிறார்களே தவிர ஒருவேளை வாசித்து இருந்தால் குதிக்க மாட்டார்கள்!
அதனால்தான் ""தேர்ந்த வாசிப்பாளியான"" படிப்பின் சிகரம் அண்ணன் அண்ணாமலை இன்னும் வாயைத் திறக்காமல் இருக்கிறார் போலும்!!
எங்கிருந்தோ வந்த மதம் நமது பண்பாட்டு வேர்களைத் தழுவி கலந்த விதத்தையும் இன்னும் இங்குள்ள கிருஸ்துவம் தன்னை எந்த விதத்தில் எல்லாம் சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்பது குறித்தும் சிறிதும் சார்பின்றி எழுதி இருக்கும் நிவேதிதா லூயிஸிற்கு எனது பாராட்டுகள்.
இதுல ஒரு காமெடியான விசயம் என்னன்னா "அனைவருக்கும் பொதுவான ஆட்சியர் எப்படி ஒரு மதத்தைத் தாங்கிப் பிடிக்கலாம்னு" சங்கிகள் கேட்டதுதான்!!!
உண்மையில் இது மோடிகளையும் அமீத்ஷாக்களையும் பார்த்து கேட்க வேண்டிய கேள்வி!!
சேம் சைடு கோல் போடுவதில் சங்கிகளுக்கு நிகர் சங்கிகளே!!
# அண்ணே அது குரங்கு பொம்மையில்லை..கண்ணாடி .

ஒரு மாவட்ட ஆட்சியர் எப்படி மதம் சார்ந்த புத்தகம் கொடுக்கலாம் என்று பொங்கும் சங்கிகள், நியாயவான்கள், சனாதன மதத்தை உயர்த்திப் பிடிக்கும் ஆட்டுத்தாடியை என்ன செய்யப் போகிறார்கள் என்று அறிய ஆவலோடு காத்திருக்கிறேன். ரவியை அவர்கள் அடி பின்னிடப் போகிறார்கள்.

ஆட்டுத்தாடியின் அரசியல் சாசன விரோதப் பேச்சுக்கு தனியாக ஒரு கச்சேரி நடத்த வேண்டும்.

அது நாளை . . . .




No comments:

Post a Comment