Wednesday, April 24, 2019

ஆன்டி நேஷனல் ஐ.பி.எஸ் அதிகாரிகள்




கிரிமினல் சாமியார் சாபமெல்லாம் பலித்தால் . . .

மாலேகான் வெடிகுண்டு புகழ் சாமியார் சாத்வி பிரக்யா தாகூர் தான் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் மறைந்த காவல்துறை அதிகாரி ஹேமந்த் கர்கரே மீது விஷத்தை கக்கியுள்ளார்.

ஹேமந்த் கர்கரே தான் மாலேகான், ஆஜ்மீர் தர்கா, சம்ஜூத்தா எக்ஸ்பிரஸ் மற்றும் ஹைதராபாத் மசூதி ஆகிய வெடிகுண்டு வழக்குகளில் குற்றவாளிகள் அபினவ் பாரத் என்ற காவி அமைப்புதான் என்பதை கண்டுபிடித்தவர். சாத்வி பிரக்யா தாகூர் என்ற சாமியாரின் பைக்கில்தான் மாலேகானில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது என்பதற்கான ஆதாரத்துடன் அவரை கைது செய்தார்.

மும்பை தீவிரவாதத் தாக்குதலின் போது ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்டார் என்பதும் அவர் அணிந்திருந்த புல்லட் ப்ரூப் கவசம் தரமற்றதாக இருந்ததால்தான் அவர் மரணமடைந்தார் என்பதும் அவரை கொன்றது மும்பையை சூழ்ந்த பாக் தீவிரவாதிகளா இல்லை காவி தீவிரவாதத்தை கண்டு பிடித்ததால் இச்சூழலை பயன்படுத்தி வேறு யாராவது கொன்றார்களா என்ற ஐயம் இன்று வரை நீடிப்பதும் வேறு விஷயம்.

“என்னை கைது செய்த நீ நாசமாகப் போவாய், உனக்கு சந்ததியே இருக்காது”

என்று தான் ஹேமந்த் கர்கரேவைப் பார்த்து சாபமிட்டதாகவும் தான் சபித்த ஒன்றரை மாதத்திலேயே தன் சாபம் பலித்து ஹேமந்த் கர்கரே இறந்து விட்டதாக அவர்  கூறியுள்ளார்.

தீவிரவாதத்திற்கு எதிராக வீர மரணம் அடைந்தவர் என்று போற்றப்பட்டு வீரதீர சாகஸங்களுக்காக வழங்கப்படும் உயரிய விருதான “அசோக சக்ரா” விருது வழங்கப்பட்ட ஒரு தியாகியை ஒரு தீவிரவாதி சாமியார் எள்ளி நகையாடுகிறார்.

இப்படிப்பட்ட கிரிமினல்களுக்குத்தான் பாஜக சீட் கொடுத்து எம்.பி யாக்கி அழகு பார்க்க விரும்புகிறது.

கிரிமினல் சாமியாரின் பேச்சுக்கு எதிர்ப்பு வந்ததும் தான் சொன்னதை திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

அதிலும் ஒரு ஆணவம்.

ஆம்,

தான் கூறியது எதிரிகளுக்கு சாதகமாக அமைந்து விடும் என்பதால் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.


மார்பகப் புற்று நோய் என்று சொல்லிப் பெற்ற பிணையையும் அதே காரணத்துக்காக வழக்கு விசாரணைக்கு நீதி மன்றத்திற்கு வராமல் கொடுக்கப்பட்ட விலக்கையும் திரும்பப் பெற வேண்டும்.

அவரது வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும்.

தீவிரவாதி சாமியார் இருக்க வேண்டிய
இடம் ஜெயில். மக்களவை அல்ல.

பிகு:

இந்த சாமியார் பேசியதை ஐ.பி.எஸ் அதிகாரிகள் சங்கம் கண்டித்துள்ளது. கிசாக நியதிப்படி அவர்கள் அனைவரும் ஆன்டி- நேஷனல்கள் தானே!

No comments:

Post a Comment