Thursday, March 22, 2018

சுஷ்மான்னா சும்மாவா?

இன்றைய தீக்கதிர் தலையங்கத்தை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன். 

நான்காண்டுகளாக ஒரு மோசடி ஆட்சியைத்தான் மோடி அரசு அளித்து வருகிறது என்பதற்கு இப்பிரச்சினையும் ஒரு உதாரணம்.

மோடி மட்டும்தான் பொய் சொல்ல வேண்டுமா என்ன?
சுஷ்மா ஸ்வராஜூம் அவர் பங்கிற்கு சொன்ன பொய் இது. 





உண்மையை மறைத்தது ஏன்?

இராக்கின் மோசூல் நகரில் ஐஎஸ் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொல்லப்பட்டிருப்பதாக தற்போது மத்திய அரசுஅறிவித்திருக்கிறது. இது இந்திய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 2014ஆம் ஆண்டு இராக்கின் மோசூல் நகர்பகுதியில் எண்ணெய் கிணற்றில் வேலை பார்த்து வந்த 40 இந்தியர்கள் ஐஎஸ் பங்கரவாதிகளால் கடத்தப்பட்டனர். அதில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்ஜித் மசி என்பவர் மட்டும் அவர்களின் பிடியில் இருந்து தப்பி வந்தார். அப்போது அவர் மற்ற இந்தியர்களை ஐஎஸ் பயங்கரவாதிகள் கொன்று விட்டனர்; அதனை தான் நேரில் பார்த்ததாகவும் கூறினார். 

அப்போதுஇந்த தகவல் பொய் என்று கூறிய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், கடந்தசில தினங்களில் 6 தரப்பில் இருந்து வந்த தகவல்கள் கடத்தப்பட்ட இந்தியர்கள் உயிரோடு இருப்பதை உறுதி செய்வதாக கூறினார்.  2016இல் இப்பிரச்சனை மீண்டும் எழுந்தது.அப்போதும் கடத்தப்பட்ட இந்தியர்கள் கொல்லப்பட்டதை இந்திய அரசு ஏற்கவில்லை. மாறாக இந்தியர்கள் கொல்லப்பட்டதாக கூறுவது உண்மையில்லை;  எங்களுக்கு கிடைத்திருக்கும் 8 விதமான ஆதாரங்கள் இந்தியர்கள் உயிருடன் இருப்பதாக உறுதி செய்கின்றன என அமைச்சர் சுஷ்மா அழுத்தமாக தெரிவித்தார். 

கடத்தப்பட்ட இந்தியர்கள் உயிரோடு இருப்பதாக அவர்களின் உறவினர்களுக்கும், இந்தியமக்களுக்கும் மத்திய பாஜக அரசு ஏன் தவறான தகவல்களை அளித்தது. அத்தகைய தவறானஆதாரங்களை அளித்தவர்கள் யார் என்பதையும் மக்களுக்கு பாஜக அரசு தெரிவிக்க வேண்டும். 

‘‘நான் அப்போதே 39 பேரும் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்றேன். ஆனால், நான் பொய்சொல்கிறேன் என்றார்கள். என்னை சிறையிலும்  அடைத்தார்கள். இப்போது அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என்று சுஷ்மா சுவராஜ் சொல்கிறார். பாஜக அரசு அனைவரையும் தவறாக வழிநடத்தி உள்ளது. நான் எந்த பொய்யும் சொல்லவில்லை. அரசுதான் பொய் சொல்லி இருக்கிறது என்பதை மக்கள் இப்போது புரிந்து கொண்டிருக்கிறார்கள்‘’ என ஐஎஸ் பிடியில் இருந்து தப்பிவந்த ஹர்ஜித்மசிகூறியிருக்கிறார். 

இதற்கு மத்திய அரசு என்ன பதில் சொல்லப் போகிறது. கொல்லப்பட்டிருக்கும் இந்தியர்களின் உடல்களை விரைந்து இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். மதவெறிக்கு மதமுமில்லை, மனிதமும் இல்லை என்பது மீண்டும் மீண்டும் நிரூபணமாகி வருகிறது. 

மத நம்பிக்கை யாருக்கும் பிரச்சனையில்லை. ஆனால் அதுவே வெறியாக மாறும் போது எவ்வளவு கொடூரமாக இருக்கும் என்பதற்கான ஒரு சிறு உதாரணமே 39 இந்தியர்களின் உயிர் பறிக்கப்பட்டிருப்பது. அது சொந்தமதத்தினரையுமே விட்டுவைக்கவில்லை என்பதே சமகாலத்தின் வரலாறு. இந்த மதவெறி ஆபத்து தற்போது இந்தியாவையும் ‘காவியிருளாக’ சூழ்ந்திருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எந்த மதவெறியும் இந்திய மக்களுக்கு ஏற்புடையதல்ல. 

அது ஐஎஸ்அமைப்பா, ஆர்எஸ்எஸ் அமைப்பா என்பது பிரச்சனையல்ல. அனைத்து மதவெறியும் ஒருசேர நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்றே.

No comments:

Post a Comment