Wednesday, March 21, 2018

மோடி அளிப்பதே ராம ராஜ்ஜியம்தானே!




ராமரின் ராஜ்ஜியம் எப்படி இருந்தது. மக்களை அவர் எப்படி பாதுகாத்தார், பொருளாதாரம், நிர்வாகம், அயல் நாட்டுனான உறவு, சட்டம் ஒழுங்கு என்பது பற்றியெல்லாம் ராமாயணங்களின் பல வெர்ஷன்களில்  பெரிதாக எதுவும் சொல்லப்படவில்லை.

கிருஷ்ணருடைய ஆட்சியிலாவது அவரது குலத்தவர்  கடற்கரையில் குடிபோதையில் ஒருவருக்கொருவர் உலக்கையில் அடித்துக் கொண்டு இறந்து போனார்கள் என்றொரு தகவல் உண்டு. ராமாயணத்தில் அப்படி எதுவும் இல்லை.

ஆனால் ராம ராஜ்ஜியத்தில் நடந்ததாக சொல்லப்பட்ட சில நிகழ்வுகள் உண்டு.

இலங்கையில் ராவணைக் கொன்று வரும் போதே சீதையை தீக்குளிக்க வைத்து அவரது புனிதத்தன்மையை சோதித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் அதற்குப் பிறகும் யாரோ ஒருவர் சொன்னார் என்பதற்காக நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சீதையை காட்டுக்கு அனுப்பி வைத்தது என்பது கொஞ்சம் கூட மனிதத்தன்மை இல்லாத ஒரு செயல். சொந்த மனைவியையே பாதுகாக்க முடியாத ஒருவரால், வதந்திகளுக்கு அடிபணிகிற ஒருவரால் எப்படி ஒரு நல்ல அரசை அளிக்க முடியும்?

வேதத்தை பயின்றார் என்ற ஒரே காரணத்திற்காக வர்ணாசிரமத்தைப் பாதுகாக்க சம்புகனைக் கொன்ற ராமரின் ஆட்சியில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு என்பது எப்படி இருந்திருக்க முடியும்?

அஸ்வமேத யாகம் என்பதே ஆதிக்க மனோ நிலையின் உச்சகட்டம்தானே! குதிரையை இதர நாடுகளுக்கு அனுப்பி அதற்கு அடிபணிய வைப்பது என்பது ஆணவத்தின் வெளிப்பாடுதானே!

மொத்தத்தில் ராமராஜ்ஜியத்தில்

பெண்களுக்கு நியாயம் இல்லை.
ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயம் இல்லை,
அயல் நாடுகளை அடக்கும் ஆதிக்க வெறி உண்டு.

இப்போது மோடியின் ராஜ்ஜியத்தில் மட்டும் என்ன வாழ்கிறது!

பெண்களுக்கு மரியாதை (மோடியின் மனைவி உட்பட) கிடையாது.
ஒடுக்கப்பட்ட மக்கள் அடித்துக் கொல்லப்படுகிறார்கள், சிறுபான்மை மக்களும் கூட.
அண்டை  நாடுகளோடு மோதல் போக்குதான் உள்ளது.

நமக்கு இப்போது ராம ராஜ்ஜியமும் தேவையில்லை
மோடி ராஜ்ஜியமும் தேவையில்லை.
ராம ராஜ்ஜியத்திற்கான யாத்திரை தேவையே இல்லை.



1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete