Tuesday, February 26, 2019

மாணவர்களுக்கா? சின்ன புள்ளதனமா இருக்கே!




வங்கிகளின் இணைப்புக்கள் – பின்னே உள்ள சதிவலைகள் என்ற தலைப்பில் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர் சி.பி.கிருஷ்ணன் அவர்கள் ஆற்றிய உரையின் போது பகிர்ந்து கொள்ளப்பட்ட தவல்கள் குறித்த பதிவுகளின் இறுதி பகுதி இது.




முதல் இரண்டு பகுதிகளின் இணைப்பு கீழே உள்ளது.



ஸ்டேட் வங்கியில் முன்பு குறைந்த பட்ச இருப்புத் தொகை( Minimum Balance) இல்லாமல் ஜீரோ பேலன்ஸ் என்று சொல்லி வங்கிக் கணக்குகளை துவக்க வைத்தார்கள். பிறகு ஸ்டேட் வங்கியோடு அதன் துணை வங்கிகள் பலவற்றையும் இணைத்தார்கள்.  இப்போது குறைந்த பட்ச இருப்புத் தொகையை ஐயாயிரம் ரூபாயாக உயர்த்தி விட்டார்கள்.

குறைந்த பட்ச இருப்புத் தொகை ஐயாயிரத்தை விட குறைவாக போகும் போது  நூறு ரூபாய் அபராதம் விதிக்கிறார்கள்.  ஐயாயிரம் ரூபாய்க்கும் குறைவான இருப்புத் தொகையை யார் வைத்திருக்கப் போகிறார்கள். ஜீரோ பேலன்ஸ் என்று நம்பி கணக்கு துவக்கிய ஏழை மக்கள்தான். அப்படி அவர்களிடமிருந்து கடந்த ஒரு ஆண்டில் மட்டும் ஸ்டேட் வங்கி வசூலித்த அபராதத் தொகை ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி உள்ளது.

ஏழை மக்களிடமிருந்து ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் வசூலித்த அதே ஸ்டேட் வங்கி கடந்த ஆண்டில் மட்டும் பெரு முதலாளிகள் வாங்கி திருப்பித் தராமல் குவிந்து போன வாராக்கடனில் Deep Haircut மூலமாக  இருபத்தி ஐந்தாயிரம் கோடி ரூபாயை தள்ளுபடி செய்தது.

வங்கிகள் எதற்காக தேசியமயமாக்கப் பட்டதோ அதற்கு முரணான எதிர் திசையில் வங்கிகளை இன்றைய மத்தியரசு இழுத்துச் செல்கிறது. சாதாரண மக்கள் தைரியமாக வங்கிகளுக்கு வர வேண்டும் என்பதுதான் தேசியமயத்தின் முக்கியமான நோக்கம். இன்று  சாதாரண மக்கள் வங்கியின் பக்கம் வர முடியாதபடி அச்சுறுத்துகிறார்கள்.

கடன்களுக்கு பிணை பெறுவதிலும் மிகப் பெரிய பாரபட்சம் உள்ளது.

சேன்ஸ்க்ரிட் என்ற மாணவி தன் எம்.பி.பி.எஸ் படிப்பிற்காக அறுபத்தி மூன்று லட்சம் ரூபாய் கடன் கேட்கிறார். கடன் தொகையில் 120 %  பிணை அளித்தால்தான் கடன் வழங்குவோம் என்று சொல்கிறது. அவரால் பிணை ஏதும் அளிக்க முடியாததால் விண்ணப்பம்  நிராகரிக்கப்பட்டது. அந்தப் பெண் நீதிமன்றம் செல்கிறார்.

ஏழரை லட்ச ரூபாய்க்கு மேல் கடன் என்றால் பிணை இல்லாமல் கடன் தர முடியாது என்ற வங்கியின் வாதத்தை நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டு விட்டது.

(Sanskrit என்ற பெயருக்காகவே வட்டி கூட இல்லாமல் கடன் கொடுத்திருக்கலாம். சமஸ்கிருதம் ஒரு இறந்த மொழி என்று பேசப்படும் இக்காலத்தில் அந்த பெண்ணைக் காண்பித்து சமஸ்கிருதம் இன்னும் உயிரோடுதான் உள்ளது என்று சொல்லும் வாய்ப்பை இழந்து விட்டார்கள்)

எல்லோருக்கும் இதே விதிதான் கடை பிடிக்கப்படுகிறதா?

“கனிஷ்க்”  என்ற நகைக்கடை திவாலாகி மஞ்சள் நோட்டீஸ் கொடுத்து விட்டது. அதன் கடன் பாக்கித் தொகை 840 கோடி ரூபாய்.

எந்த அடிப்படையில் கடன் கொடுத்தார்கள்?

கடையில் இருந்த நகைகளின் கையிருப்பை அடிப்படையாகக் கொண்டு.

அந்த ஸ்டாக் என்ன ஆனது?

மார்ச் மாதம் இருந்த ஸ்டாக் மே மாதம் மறைந்து விட்டது.

(ஒரு வேளை ஏதாவது மந்திர, தந்திர வேலையாக இருக்குமோ? பூதம் ஏதாவது தூக்கிப் போயிருக்குமோ? இல்லை ஒரு வேளை கவரிங் நகைகளைக் காண்பித்து ஏமாற்றி இருப்பார்களோ?)

சரி பிணையாவது வாங்கி உள்ளார்களா?

ஆம், வாங்கியுள்ளார்கள்.  840 கோடி ரூபாயில் 120 % ஆன 1008 கோடி ரூபாய் அளவிற்குத்தானே?

அதுதான் இல்லை.

வெறும் 150 கோடி ரூபாய்க்கு மட்டுமே பிணை வாங்கியுள்ளது.  ஆக வசதி படைத்தவர்களுக்கு 120 % பிணை வாங்குவது கிடையாது. பத்து அல்லது பதினைந்து சதவிகிதம் மட்டுமே வாங்குகிறது.

கல்விக் கடன் வசூலை ஸ்டேட் வங்கி ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்றுள்ளது.

ஆம்

நிஜமாகத்தான். விற்றுள்ளது.

ஸ்டேட் வங்கி, தனக்கு வர வேண்டிய 840 கோடி ரூபாயை ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு விற்றுள்ளது. 840 கோடி ரூபாய் கடன் பாக்கித் தொகையை ரிலையன்ஸ் 360 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

அதன் படி மாணவர்கள் வாங்கிய கடன் தொகையை ரிலையன்ஸ் வசூல் செய்து எடுத்துக் கொள்ளும். அப்படி கடன் வசூல் செய்வதற்காக ரௌடிகளை ஏவி விட்டு அவர்கள் அசிங்கப்படுத்தியதில் மதுரையில் லெனின் என்ற மாணவன் இறந்து போனான்.  

840 கோடி ரூபாயை 360 கோடி ரூபாய்க்கு வாங்கியதில் 480 கோடி ரூபாய் ரிலையன்ஸுக்கு  லாபம் என்பதோடு நிறுத்தி விட முடியாது. ஏனென்றால் அதையும் தாண்டியது இந்த டீலிங்.

முதல் கட்ட தவணையாக ரிலையன்ஸ் கட்டியது வெறும் அறுபது கோடி ரூபாய்தான். மீதமுள்ள முந்நூறு கோடி ரூபாயை வருடத்திற்கு இருபது கோடி ரூபாய் என்று பதினைந்து வருடங்களில் செலுத்தினால் போதும். 840 கோடி ரூபாயையுமே ஒரே ஆண்டிலேயே  ரிலையன்ஸ் வசூலித்து விட்டால் கூட அந்த பணத்தை வேறு வழிகளில் முதலீடு செய்து விட்டு அதில் வருமானத்திலிருந்தே ஒரு சிறு பகுதியாக வருடம் இருபது கோடி ரூபாய் என்று கட்டி விடலாம்.

இத்தனை வசதிகளை ரிலையன்ஸுக்கு செய்வதற்குப் பதிலாக மாணவர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டித்தால் அவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

(ஆனால் அப்படியெல்லாம் செய்ய மாணவர்கள் ஒன்றும் மோடியின் அருமை நண்பர் அம்பானி கிடையாதே!)

ஆனால் இந்த அரசு அதையெல்லாம் செய்யாது.

பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்பது என்பது நம்முடைய கடமை அல்ல. அவற்றின் பொதுத்துறை தன்மையை பாதுகாப்பது என்பதும் மிகவும் முக்கியம்.

பிகு : அடைப்புக் குறிக்குள் நீல நிறத்தில் இருப்பது மட்டும் என்னுடைய கருத்து.

No comments:

Post a Comment