Monday, May 29, 2023

கொண்டாட்டங்களுக்கு மத்தியில் கொடூரம்

 


நேற்று தலைநகரில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்றம் புது இடத்திற்கு மாறுவதற்கு ஒரு கொண்டாட்டம் நடந்தது.

 

அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் எப்படி பாபர் மசூதி இடிப்பதற்கான நாளாக குறிக்கப்பட்டதோ, என்ரான், யூனிட் ட்ரஸ்ட், பால்கோ போன்ற நுணுக்கமான ஊழல்களைச் செய்த வாஜ்பாயின் பிறந்த நாளை சிறந்த நிர்வாக நாளாக கொண்டாட வேண்டுமென்று கிறிஸ்துமஸ் நாள் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டதோ,   எப்படி  அண்ணல் காந்தியின் பிறந்த நாள் அவரது மத நல்லிணக்கம், நேர்மை, தீண்டாமை எதிர்ப்பு, கிராமப்புற முன்னேற்றம், இறையாண்மை போன்ற அம்சங்களை இருட்டடிப்பு செய்து துடைப்பம் தூக்கும் நாளாக அறிவிக்கப்பட்டதோ, அது போல இந்த திறப்பு விழாவுக்கான நாளும் காவிக்கயவர்களால் தேர்ந்தெடுக்கப்ப்பட்டது.                                                                                                                    

 

அந்தமான் சிறையிலிருந்து விடுதலையாக தொடர்ந்து மன்னிப்பு கடிதங்கள் எழுதி, இங்கிலாந்து அரசுக்கு விசுவாசமாக இருப்பேன் என்று உறுதிமொழி கொடுத்து அவர்களிடமிருந்து ஓவ்வொரு மாதமும் ஓய்வூதியமும் வாங்கிக் கொண்டு விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக செயல்பட்ட ஒரு தேசத்துரோகியும் மகாத்மா காந்தியை கொலை செய்ய திட்டம் தீட்டிக் கொடுத்து துப்பாக்கியும் கொடுத்தனுப்பிய பயங்கரவாதியும்  இந்தியாவை இரண்டு நாடுகளாக மத அடிப்படையில் பிரிக்க வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்த மத வெறியனும் தனக்குத்தானே வீரன் என்று செல்ஃபியாக பட்டம் கொடுத்துக் கொண்டவனுமான சாவர்க்கர் பிறந்த நாளில் இந்த விழா நடைபெற்றதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை.

 

நாடாளுமன்ற திறப்பு விழாவும் வழக்கமான காமெடிக் கூத்துக்களோடு நடந்து முடிந்தது. டிமோவுக்கு போட்டி என்று சொல்லக் கூடிய விதத்தில் விதம்விதமான தலை அலங்காரங்களுடைய சாமியார்கள் காலில் விழுந்து ஆசி வாங்கினாலும் ஹோமம் வளர்த்தவர்களிடமிருந்து அந்த சாமியார்களை தள்ளி வைத்ததில் இளித்தது மனு தர்மம்.

 


இந்த கூத்து நடந்து கொண்டிருந்த நேரத்தில்தான் அயோக்கியன் ஒருவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராடிக் கொண்டிருந்த மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகளின் வீரம் செறிந்த போராட்டம் கொடூரமாக நசுக்கப் பட்டது.

 

ஒலிம்பிக்கிலும் மற்ற சர்வதேச விளையாட்டுப் போட்டிகளிலும் அவர்கள் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை தேடித் தந்த போது அவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டு பீற்றிக் கொள்பவர் டிமோ. ஏதோ தானே அவர்களுக்கு நேரடியாக பயிற்சி கொடுத்தது போல பில்ட் அப் செய்து ட்வீட்டுவார் அவர் பெண் குழந்தைகளுக்கு தானே சிறந்த காவலர் என்றும் கூசாமல் அளப்பார். “பேட்டி பச்சாவ்” என்று விளம்பரப் பதாகைகள் அவர் முகம் தாங்கி எங்கெங்கும் காணப்படும்.

 


பாலியல் சீண்டல் செய்த மல்யுத்த ஃபெடரேஷனின் தலைவரும் பாஜக எம்.பி யுமான பிரிஜ் பூஷண் சர்மா மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மாதக் கணக்கில் மல்யுத்த் வீராங்கனைகளும் வீரர்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர். போஸ்கோ சட்டத்தின் படி அவன் மீது வழக்கு பதியப் படுகிறது. போஸ்கோ சட்டத்தின் படி வழக்கு பதியப்பட்டால் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும், இழப்பீடு அளிக்கப்பட வேண்டும், கைது செய்யப்பட்டவனுக்கு பிணையும் கிடையாது.

 

ஆனால் இங்கே அந்த எம்.பி கைதும் செய்யப்படவில்லை. மல்யுத்த ஃபெடரேஷனின் தலைவராகவும் தொடர்கிறான். எம்.பி யாகவும் நீடிக்கிறான். பாஜக எம்.பி என்ற என்ன அயோக்கியதனமும் செய்யலாமா? இவனை ஏன் அமித் ஷா வும் டிமோவும் பாதுகாக்கிறார்கள்? இவர்களுக்கு இவன் ஏதாவது தரகு வேலை பார்த்தானா என்று சந்தேகம் வருகிறதே!

 

நாடாளுமன்றம் திறப்பு விழா கண்ட நேரம் தங்களுக்கு நீதி கேட்டு வந்தவர்கள் அமித் ஷா கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி ஏவல் துறை அவர்களை மடக்கியது. முன்னேற விடாமல் முடக்கியது. வன்முறையை பயன்படுத்தியது. விளையாட்டில் தங்களை இறுக்கி தடுப்பவர்களை தட்டி விட்டு முன்னேறுபவர்கள் நிஜத்தில் முரண்டு பிடிக்கவில்லை. கைதானார்கள். சீட்டுக்கட்டு கோபுரத்தை தகர்ப்பது போல போராட்டக் களம் அகற்றப்பட்டது.

 




தங்கப்பதக்கம் வென்று பெருமை தேடித்தந்தவர்களை கிரிமினல்களை விட மோசமாக நடத்தியது டிமோவின் செங்கோல்.

 

பாரதீய ஜல்சா கட்சி எனும் பெருமையை தக்க வைத்ததுதான் அரண்மனை திறப்பு விழாவின் சிறப்பம்சம்.

 

அத்தோடு நிறுத்தியிருந்தால் கூட பரவாயில்லை.

 

கைதாகி இறுக்கமான முகத்தோடு ஏவல்துறை வேனில் சென்றவர்களின் முகத்தில் போட்டோஷாப் புன்னகை வரைந்து இழிவு படுத்தியது பாஜக. முட்டாள்தனத்தை மட்டுமே மூளையில் கொண்டுள்ள காவிக்கயவர்கள் அந்த போட்டோஷாப் படத்தை பரப்பி தங்கள் அறிவீனத்தை பறைசாற்றிக் கொண்டார்கள்.

 


அவசர நிலைக்காலத்தில் கைதான போது ஜெயப்பிரகாஷ் நாராயணன் சொன்னதையே சொல்ல வேண்டியுள்ளது.

 

“விநாச காலே விபரீத புத்தி”

 

அழிவுக்காலத்தில் அறிவு விபரீதமாகத்தான் செயல்படும்.

 

 

1 comment:

  1. இன்னும் எத்தனை முறை செங்கோல் வளையுமோ?
    அதெல்லாம் கணக்கில் வராது.
    காங்கிரஸ்காரன் எத்தனை முறை திட்டினான் என்பதுமட்டும் கணக்கு வைத்திருப்பார்கள்.
    .

    ReplyDelete