Thursday, July 4, 2019

இறுதியாய் கேட்ட முதல் கேள்வி




தோழர் ஜோசப் - அமைப்புக்கு மட்டுமல்ல, சொந்த இழப்பும் கூட

நினைவுகள் முழுதிலும்  மறைந்த தோழர் ஜோசப்தான் இருக்கிறார். 1986 ல் எல்.ஐ.சி பணியில் இணைந்து 1987 ல் தொழிற்சங்கப் பயணத்தை தொடங்கினாலும்  பல தலைவர்களின் பெயர் மட்டும்தான் அறிமுகம். 1990 ல் தென் மண்டல மாநாடு ஹைதராபாத் நகரில் நடைபெற்ற போதுதான் பல தலைவர்களை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த மாநாட்டில் எட்ட  நின்று பிரமிப்போடு பார்த்த ஒரு தலைவர் தோழர் ஜோசப். கிட்டே நெருங்கும் வாய்ப்பு அந்த ஆண்டு இறுதியில் ஒடிஷா மாநிலத்தின் கட்டாக் நகரில் அகில இந்திய மாநாடு நடக்கும் போது கிடைத்தது.

ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஒரு பெரும் படையே மகாநதிக்குச் சென்று குளிக்கப் புறப்படும். அந்த பெரும் படையின் தலைவர்களாக தோழர் ஜோசப், எங்கள் கோட்டத்தின் முதல் பொதுச்செயலாளர் தோழர் ஆர்.ஜகதீசன், தஞ்சைக் கோட்டத்தின் அன்றைய பொதுச்செயலாளர் தோழர் எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இருந்தனர்.

இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த மகாநதிக்கு போகும் போதும் சரி, வரும் போதும் சரி, இயக்க அனுபவங்களையே பேசிக் கொண்டு வருவார்கள். சுவாரஸ்யமாகவும் பயனுள்ளதாகவும் அந்த நடைப் பயிற்சி அமைந்திருந்தது. இன்னமும் மனதில் நிலைத்திருக்கிறது. அப்போதுதான் தனிப்பட்ட முறையில் அவரோடு அறிமுகமானேன்.

தொழிற்சங்கப் பொறுப்பாளர் என்பதைத் தாண்டி அவர் ஒரு சிறந்த பொருளாதார வல்லுனர் என்பதும் மார்க்சிய தத்துவத்தை எளிமையாக புரிந்து கொள்ளக் கூடிய விதத்தில் வகுப்பெடுக்கிற ஆசான்.

தென் மண்டல செயற்குழு உறுப்பினராக 1994 ம் வருடம் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு அவருடனான நெருக்கம் அதிகமானது. மதுரையில்தான் கல்லூரிப் படிப்பு என்று சொன்னவுடன் அவர் எங்கள் கல்லூரிப் பேராசிரியர்கள் சிலரின் பெயரைச் சொல்லி தெரியுமா என்று கேட்க, அதன் பின்பு அவர்கள் எல்லாம் கல்லூரி ஆசிரியர்கள் இயக்கத்தின் முக்கியமான தலைவர்கள் என்று சொன்னார். அது வரை அவர்களின் அருமை தெரியவில்லை என்பதுதான் நிஜம்.

நான் முதன் முறையாக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட திருவண்ணாமலை மாநாட்டிற்கு அவர் வந்திருந்தார். வாழ்த்துக்களை தெரிவித்த பின்பு என்ன நெர்வஸாக இருக்கீங்க என்று கேட்டார். பெரிய பொறுப்பு என்பதால் வரும் நெர்வஸ்னஸ் என்றேன். இத்தனை நாளாக செய்து கொண்டிருந்த அதே வேலையைத்தான் வேறு ஒரு பெயரில் செய்யப் போகிறீர்கள். அதனால் நெர்வஸ் ஆக ஒன்றுமில்லை என்று தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்தியதை மறக்கவே முடியாது.

நம் பணிகளை உற்சாகப்படுத்துவார். பாராட்டுவார். அதே நேரம் தவறுகளை சுட்டிக்காட்டி விமர்சிக்கவும் தயங்க மாட்டார். மாற்று அமைப்பு  ஒன்று எங்கள் அமைப்பின் மீது ஒரு பொய்ப்பிரச்சாரம்  செய்த போது எதிர்வினையாக கடுமையான சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டோம்.  “உங்களின் கோபம் நியாயமாக இருந்த போதிலும் எழுத்தில் இவ்வளவு சூடு அவசியமில்லை” என்று சுட்டிக்காட்டியவர்.

எங்கள் கோட்ட மாநாடுகளின் போது வெளியிடப்பட்ட சிறப்பு மலர்களில் அவரது கட்டுரை கண்டிப்பாக இருக்கும். குறித்த நாளுக்குள் நினைவுறுத்தல் இல்லாமலேயே அனுப்புவது அவருடைய சிறப்பு. அச்சுக்கு செல்வதற்கு முன்பு முற்றுப்புள்ளி, தொடர் புள்ளி ஆகியவற்றில் கவனமாக இருங்கள் என்று அறிவுறுத்துவார். அவை மாறினால் அர்த்தமே மாறி விடும் என்ற எச்சரிக்கை எப்போதுமே பயனுள்ளது.

அவருடையது என்றல்ல, வேறு யாருடைய கட்டுரையிலாவது ஏதாவது புரியவில்லை என்றால் கொஞ்சம் கூட தயக்கமே இல்லாமல் நான் அவரைத்தான் தொடர்பு கொள்வேன். தமிழாக்கம் செய்யும் போது சில ஆங்கில வார்த்தைகளுக்கு சரியான தமிழ் வார்த்தையை பயன்படுத்த அகராதியை நாடியதை விட அவரை நாடியது அதிகம்.  தொலைபேசியில் பேசி முடித்த பிறகு சில சமயங்களில் ஒரு மணி நேரம் கழித்து அவரே அழைத்து இந்த வார்த்தை இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று சொல்வார். நீண்ட வாக்கியத்தை அப்படியே தமிழாக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதன் அர்த்தம் கெடாமல் இரண்டு வாக்கியங்களாகக் கூட மாற்றுங்கள் என்ற அவரது ஆலோசனையும் பயனுள்ளது.

அவருடைய ஆங்கிலப்புலமை அபாரமானது. ஆங்கில மொழியின் சுவாரஸ்யம் குறித்து அவர் வலைப்பக்கம் தொடங்கி அவர் சில நாட்கள் எழுதிக் கொண்டிருந்தார். அதை ஏனோ அவரால் தொடர இயலவில்லை. ஆனால் புளிச்ச மாவு சர்ச்சைக்குப் பிறகு “மாவு  ஆங்கிலத்தில் BATTER என்று அழைக்கப்படும் என்பதை இன்றுதான் அறிந்து கொண்டேன்” என்று முக நூலில் அவர் எழுதியபோது ஆச்சர்யமாக இருந்தது. இதை அவர் எழுதியிருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் புதிதாக இன்றுதான் தெரிந்து கொண்டேன் என்று எழுதியதில் வெளிப்படுகிறது அவரது தன்னடக்கம்.

கூட்டங்களில் அவர் பேசுகையில் சின்ன சலசலப்பு வந்தாலும் கொஞ்சம் டென்ஷன் ஆகி விடுவார் என்பது அவருடைய பலவீனம். ஆனால் ஒரு அவையில் அவரால் சலசலப்பு வந்தது. மகிழ்ச்சியூட்டும் சலசலப்பு அது. அவருக்குப் பிறகு மதுரைக் கோட்ட்சங்கத்தின் தலைவராக செயல்பட்ட பாரதி அண்ணன் என்றழைக்கப்படுகிற தோழர் சி.சந்திரசேகரன் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா மேடையில் தோழர் ஜோசப் இல்லை. எங்கே என்று கேட்ட போது கடந்த வாரம்தான் அவருக்கு ஒரு அறுவை சிகிச்சை நடந்தது என்று மதுரைத் தோழர்கள் சொன்னார்கள். மருத்துவமனைக்குச் சென்று பார்க்க முடியுமா என்று கேட்டதற்கு இன்று டிஸ்சார்ஜ் செய்து விடுவதாக சொன்னார்கள். ஒருவேளை இந்நேரம் அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்குச் சென்றிருக்கலாம் என்றார்கள்.

விழா நடந்து கொண்டிருந்த போது ஒரு சலசலப்பு. என்னவென்று பார்த்தால் மருத்துவமனையிலுருந்து டிஸ்சார்ஜ் ஆன தோழர் ஜோசப் வீட்டிற்குச் செல்லாமல் தோழர் பாரதியைப் பார்த்து வாழ்த்து சொல்ல நேரடியாக விழா அரங்கத்திகே வந்து விட்டார். அன்று அவர் காண்பித்த தோழமை உண்ர்வு பிரமிக்க வைத்தது. 

கூட்டத்தில் பேசுகையில் சலசலப்பு வந்தால் டென்ஷன் ஆவாரே தவிர மிகவும் குறும்புக்காரர். அதிலும் இப்போது நாக்பூரில் இருக்கிற மூத்த தோழர் காஷ்யபன் அவர்களின் பதிவுகளில் அவர் போடுகிற பின்னூட்டங்கள் எல்லாமே அக்மார்க் குறும்பு ரகம்தான்.


சாம்பிளுக்கு ஒன்று


தோழர் காஷ்யபன்

1996ம் ஆண்டு என் மனைவியுடன் ஹைதிராபாத் சென்றேன் .சுந்தரய்யா கேந்திரம்,கொல்கொண்டா,சாலார் ஜங்,என்று என் மனைவியிடம் பெருமையாக காட்டினேன். பின்னர் சார்மினாருக்கும் சென்றேன்.அங்கு நான் கண்ட காட்சி என்னை குலை நடுங்க வைத்தது. அந்த பிரும்மண்டமான கிழக்குத்தூணை ஒட்டி காளியம்மன் கோவில் கட்டப்பட்டிருந்தது. அங்க்கு பூஜை நடந்துகொண்டிருந்தது.  கெட்டவார்த்தைகளாக கொட்டித்தீர்த்துவிட்டென்.சுற்றி இருந்தவர்கள் என்னை ஆசுவாசப்ப்டுதினர் .ஹைதிரபத்தில் தற்பொது அநுமார் ஜெயந்தி நடக்கிறது.அதோடு கலகமும் நடக்கிறது.ஊரடங்கு உத்திரவு போடப்பட்டுள்ளது.....என்ன செய்ய? மக்கா என்னசெய்ய?


தோழர் ஜோசப்

Dear Com.Kashyapan 

I visited your blogspot just now. The way you have presented your reminiscences of Hyderabad and Charminar is really nice.As I have moved with you for the past 42 years, I could imagine as to how you would have reacted on seeing a forced structure on Charminar done with a malicious intent. - EM Joseph



தோழர் காஷ்யபன்

Thank u Joseph,My first blog posting received by u and u r the very first to send comment.At the same time I like ur KUSUMBU in immagining my reaction to the structure Realy I enjoyed it....kashyapan.


தலைமுறை இடைவெளி என்பதே  இல்லாதவர் அவர். எவ்வளவு வேண்டுமானாலும் உரிமை எடுத்துக் கொள்ளலாம். எத்தனையோ சம்பவங்கள் நினைவுக்கு வந்தாலும் ஓரே ஒரு சம்பவத்தை மட்டும் இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

ஒரு பழைய புகைப்படத்தை மதுரையில் கல்லூரியில் படித்த போது எடுத்தது என்று பகிர்ந்திருந்தேன்.

“ஓ! மதுரையைக் கெடுத்ததில் உங்களுக்கும் பங்கு இருக்கிறதா?” என்று அவர் பின்னூட்டம் இட்டிருந்தார்.

“நீங்கள் எல்லாம் இருக்கையில் எனக்கு எங்கே வாய்ப்பிருக்கிறது? நீங்கள் எல்லாம் கெடுத்த பின்பு எனக்கு என்ன மிச்சமிருக்கப் போகிறது என்று புரிந்து கொள்ள வேண்டாம்” என்று பதிலளித்தேன்.

அதற்கு அவர் இன்னொரு பின்னூட்டம்  இட்டார்.

“ஒரு ஞானி ஒரு கோப்பை முழுதும் தண்ணீர் நிரப்பி விட்டு இதனுள் இன்னும் ஏதாவது நிரப்ப முடியுமா என்று கேட்க மற்றவர்கள் முடியாது என்று சொல்ல, அந்த ஞானி அந்த கோப்பையின் மீது சில ரோஜா இதழ்களை மிதக்க விட்டார். நாங்கள் எல்லாம் கெடுத்த பின்னும் உங்களுக்கும் வாய்ப்பு இருந்திருக்கும் என்பதை சரியாக புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்”

இதற்கு மேல் நான் என்ன எழுத?

திங்களன்று பகிர்ந்து கொண்ட தோழர் சுவாமிநாதனின் கட்டுரையில் தோழர்களின் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களைக் கூட அவர் நினைவில் வைத்திருப்பார் என்று குறிப்பிட்டிருந்தார்.

அதை படிக்கையில் நான் கலங்கி விட்டேன்.

நவம்பர் மாதம் நெல்லையில் தமிழ் மாநில மகளிர் மாநாடு நடந்த போதுதான் அவரை இறுதியாக சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி

“ரகுநந்தன் எப்படி இருக்கிறான்?’



No comments:

Post a Comment