Wednesday, May 7, 2014

மோடியின் கலைஞர் பாணி ஜாதிய அரசியல்



தன்னால் சமாளிக்க முடியாத அளவிற்கு பிரச்சினை வரும் போது, தான் பதிலளிக்க முடியாத சிக்கலான கேள்விகள் வரும் போது ஜாதியை கையில் எடுத்துக் கொள்வது கலைஞரின் வாடிக்கையான பாணி. நான் சூத்திரன் என்பதால்தான் தன்னை தாக்குகிறார்கள் என்று எப்போது அவர் சொல்கிறாரோ அப்போது அவர் பலவீனமாக இருக்கிறார், பிரச்சினையை திசை திருப்புகிறார் என்று அர்த்தம்.

இப்போது அதே பாணியை நரேந்திர மோடி கையாண்டுள்ளார்.

பிரியங்கா மோடியை தரம்தாழ்ந்த அரசியல் செய்கிறார் என்றே விமர்சனம் செய்துள்ளார். அது உண்மையும் கூட. பிரியங்கா எங்கேயும் ஜாதியை குறிப்பிட்டு பேசவில்லை. பிரியங்கா முதலில் எதிர்வினையாற்ற காரணமாக இருந்த மோடியின் பேச்சில்தான் ஜாதி முலாம் இருந்தது.

ஆந்திர முதல்வர் அஞ்சையாவை ராஜீவ் காந்தி அவமதித்தார் என்று மோடி பிரச்சினையை துவக்குகிறார். ராஜீவ் காந்தி அஞ்சையாவை அவமதித்தார் என்பது உண்மை. அஞ்சையா மட்டுமல்ல எத்தனையோ பேர் ராஜீவ் காந்தியால் அவமானப்படுத்தப் பட்டுள்ளனர். ஜாதி வித்தியாசம் இல்லாமல் ராஜீவ் காந்தியால் பலரும் அசிங்கப்பட்டுள்ளனர் என்பதுதான். உண்மை. அந்தளவிற்கு ஆணவமாக நடந்து கொண்டுள்ளார். ஆனால் அதற்கு மோடி கொடுத்த ஜாதியப்பூச்சுதான் தவறானது. முன்னாள் வெளியுறவுச் செயலாளர் ஏ.பி.வெங்கடேஸ்வரனை ராஜீவ்காந்தி பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அசிங்கப்படுத்தி பதவியிலிருந்து நீக்கியதை மறந்து விட முடியுமா என்ன? ஆக ராஜீவ்காந்தியின் ஆணவத்தைக் கண்டிப்பதற்கு பதிலாக ஜாதியை இழுத்தது மோடியின் தரமற்ற அரசியல்தான்.

அதை பிரியங்கா சுட்டிக்காட்டியதும் அதற்கு தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால்தான் தன்னை இழிவுபடுத்துகிறார் என்று மோடி பேசியுள்ளது மிகவும் மோசமானது. பாஜக எதிர்பார்த்த அலை வீசாத காரணத்தால் இறுதியில் ஜாதியில் புகலிடம் தேடுகிற அவசியம் மோடிக்கு வந்து விட்டது.

பிரதமர் பதவிக்கு அல்ல மனிதனாக மதிக்கக்கூட லாயக்கற்றவர் என்பதை மோடி தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்.

No comments:

Post a Comment