Wednesday, October 14, 2015

இவிய்ங்களும் ஊழல் ஆளுங்கதானா?

 

இந்திய கிரிக்கெட் வாரியமும் சர்வதேச கிரிக்கெட் குழுவும்தான் ஊழல் நிரம்பிய அமைப்புக்கள் என்று பார்த்தால் சர்வதேச கால்பந்து அமைப்பிலும் ஊழல் முடை நாற்றம் அடிப்பதை, அதுவும் அந்த ஊழல் காலம் காலமாக நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் புட்டு புட்டு வைக்கிறது இக்கட்டுரை. 

அவசியம் படியுங்கள்.



 மீண்டு எழுமா சர்வதேச கால்பந்து அமைப்பு?
 


ஊழல் ஒரு சர்வதேச நிகழ்வு என்று ஊழல் பேர்வழிகளின் ஆதரவாளர்கள் கூறுவார்கள். ஆனால் அதுஉண்மை என்பதை சர்வதேச கால்பந்து(பிபா) அமைப்பில் நடந்துவரும் நிகழ்வுகள் வலியுறுத்துகின்றன. இந்த அமைப்பில் சர்வம்ஊழல் மயம் என்பதை இணையதளங்களில் இருந்து வரும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. பிபா தலைவர் செப் பிளாட்டரும், ஐக்கிய ஐரோப்பா கால்பந்து அமைப்பின் தலைவர் மைக்கேல் பிளாட்டினியும் மற்றும் ஓரு பிபா அதிகாரியும் அமைப்பின் நன்னடத்தைக் குழுவால் 90 நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பதுஅண்மைச் செய்தியாகும். இவர்கள் மீது லஞ்சம் மற்றும் கையூட்டு குற்றச்சாட்டுகள் குறித்து ஸ்விஸ் காவல்துறை விசாரணை நடத்தி வருவதை யடுத்து இக்குழு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. காவல்துறை நடவடிக்கை எடுத்த பின் இக்குழு எடுத்த முடிவு அதுவரை பிளாட்டரின் கைப்பெட்டிக்குள் மட்டும் செயல்பட்டு வந்த குழுவாக இது இருந்தது என்று கூறப்படுவதை உறுதி செய்கிறது.முந்தைய வரலாறுஇங்கிலாந்து கால்பந்து அமைப்பின் முன்னாள் தலைவர் டிரைஸ்மேன் பிரபு பிபா ஒரு மாபியா குடும்பம் போல் செயல்படுகிறது என்று பிபிசி யின் பனோரமா புலனாய்வு நிகழ்ச்சி ஒன்றில்வர்ணித்துள்ளார். இந்த நிகழ்ச்சி 2006ம் ஆண்டில் வெளியிடப்பட்டது. 

அதில் பல பத்தாண்டுகளாக லஞ்சம் கொடுப்பதும், கையூட்டுபெறுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று அவர் ஆற்றாமையுடன் வருத்தப்பட்டுள்ளார்.இதே நிகழ்ச்சியில் புலனாய்வாளர் ஜென்னிங்ஸூம், தயாரிப்பாளர் ரோஜர் கோர்க்கும் பிபா அதிகாரிகள் லஞ்சமாகப் பெற்ற சுமார் ஒரு லட்சம் ஈரோக்களை திருப்பித் தருவது குறித்து ஒரு ரகசிய ஒப்பந்தத்தை செப் பிளாட்டர் செய்து கொண்டது குறித்து ஸ்விஸ் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது என்றும் தெரிவித்தார்கள்.பிபாவில் ஊழல் ஒன்றும் திடீரென்று தொடங்கி விடவில்லை. இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்டான்லி ரௌஸ் காலம் முதல் தொடங்கிவிட்டது என்று அன்அப்போலாஜிஸ்ட் என்ற இதழ் கூறுகிறது. அன்றைய சோவியத் ரஷ்யா உலகக்கோப்பையில் பங்கேற்காவிட்டால், அந்த வாய்ப்பு இங்கிலாந்துக்குக் கிடைக்கும் என்று கருதியரௌஸ், சிலிக்கும் சோவியத் ரஷ்யாவுக்கும் இடையில் நடக்க வேண்டிய போட்டியை சிலியில் நடத்த உத்தரவிட்டார்.

சிலியின் சர்வாதிகாரி பினோச்செட் அங்கு கம்யூனிஸ்ட்டுகளைக் கொன்றுக் குவித்துக் கொண்டிருந்த காலம் அது. போட்டியை ஒரு நடுநிலை நாட்டில் நடத்த அவர் தயாராயில்லை. சோவியத் ரஷ்யா போட்டியைப் புறக்கணித்தது. ஆளில்லா மைதானத்தில் எதிரணி இல்லாத களத்தில் சிலி வீரர் ஒருவர் கோல் அடித்து சிலியின் பங்கேற்பைஉறுதிப்படுத்தினார். ரஷ்யா தோற்றதன் மூலம் புள்ளிகள் விகிதத்தில் இங்கிலாந்து உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றது. பினோசெட்டிடம் ரௌஸ் பணம் பெற்றுக்கொண்டார் என்று புகார் கூறப்பட்டது.ரௌஸை அடுத்து பிபா தலைவரான ஜோ ஹேவ்லாங்கே 24 ஆண்டுகள் பிபா அமைப்பை தன் கைகளில் வைத்திருந்தார். பிரேசில் நாட்டவரான இவர் மீதும் லஞ்சப்புகார்கள் கூறப்பட்டன. சர்வாதிகாரத்தின் கீழிருந்த அர்ஜெண்டினாவின் இடைக்கால துணைத்தலைவராக இருந்த கார்லோஸ் லாகோஸ்டேயை இவர் பிபா துணைத்தலைவராக நியமித்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது. பின்னர் லாகோஸ்டே லஞ்சப் புகாரின் கீழ் கைது செய்யப்பட்டார். இவரும், இவருடைய மருமகன் ரிகார்டோ டெக்ஸாரியோவும் பிபா செயற்குழுவில் இருந்த போது 4.1 கோடி யுஎஸ் டாலர்களை லஞ்சமாகப் பெற்றனர் என்ற புகார் எழுந்தது. 

இந்த புகார் விசாரணைக்கு வந்தது. அதில் இவர்கள் இருவருக்கும் லஞ்சத்தில் தொடர்பு இருந்தது என்று நிரூபிக்கப்பட்டது. ஆனால் இருவரும் லஞ்சமாகப் பெற்ற தொகைகளில் பெரும்பாலானவற்றைத் திருப்பி அளித்து விட்டதால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.2013ம் ஆண்டில் விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டது. 1998ம் ஆண்டில் பிபாவின் ஆயுட்கால கௌரவத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹேவ்லாங்கே தன்னுடைய கௌரவப் பதவியை விட்டு விலகினார்.

இன்றைய நிகழ்வு

ஹேவ்லாங்கே தலைமையில் பிபா செயலாளர் நாயகமாக இருந்த ஜோசப் பிளாட்டர் பிபா அமைப்பின் எட்டாவது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மிகவும் நெருக்கமான போட்டியில் இவர் ஸ்விஸ் நாட்டவரான லானார்ட் ஜோஹான்சனைத் தோற்கடித்து தலைவாரானார். ஹேவ்லாங்கேயின் ஊழலை நன்கு தெரிந்து வைத்திருந்த இவரும் தனது பதவியை வருமானம் சேர்க்கப் பயன்படுத்திக் கொண்டார். பிபா அமைப்பின் சர்வாதிகாரி போல் செயல்பட்ட இவர் பிபா நிதியை கால்பந்து கற்றுக்குட்டி நாடுகளுக்கு பிரித்துக்கொடுத்ததின் மூலம் அவர்களுடைய வாக்குகளைத் தனக்குச் சாதகமாக நிரந்தரமாக வைத்துக் கொண்டார். இந்த நாடுகளும், பிளாட்டர் உள்ளிட்ட பிபா அதிகாரிகள் மீது புகார்கள் எழுந்த போதும் தங்களுடைய விசுவாசத்தை வெளிப்படுத்தும் வகையில் 2015ம் ஆண்டிலும் இவரையே தேர்வு செய்தன.

2001ம் ஆண்டில் பிபாவின் விற்பனைக் கூட்டாளியான இன்டர்நேஷனல் ஸ்போர்ட்ஸ் அண்ட் லீசர் நிறுவனம் சுமார் 10 கோடி டாலர்களுக்கும் மேல் கடன் வைத்திருந்ததால் திவாலானது. பிளாட்டரின் முதல் பதவிக்காலத்தின் இறுதியில் பிபா நிறுவனம் மூழ்கி விடும் என்ற நிலை ஏற்பட்டது. ஸ்விஸ் அதிகாரிகள் பிபாவின் கூட்டாளி நிறுவனம் திவாலானதை அடுத்து அதுபற்றி விசாரணை நடத்தினர். பிபா அதிகாரிகளுக்கு கையூட்டு அளித்தே அந்த நிறுவனம் திவாலானது என்று விசாரணையில் தெரிய வந்தது. ஆனால் பிளாட்டர் மீது குற்றம் சாட்டப்படவில்லை.பிபா நடத்திய விசாரணை அறிக்கை பிளாட்டரின் ஈடுபாடு குழப்பமாக இருந்தது என்றும், அவர் குற்றவியல் ரீதியாகவோ, நன்னடத்தை ரீதியாகவோ தவறுகளில் ஈடுபடவில்லை என்று கூறிவிட்டது.

2002ம் ஆண்டில் பிபா செயற்குழு உறுப்பினர்களே பிளாட்டர் மீது ஸ்விஸ் காவல்துறையிடம் புகார் செய்தனர். பிளாட்டரின் செயலாளர் நாயகமான மைக்கேல் ஸென் - ருபினென் மற்ற செயற்குழு உறுப்பினர்கள் சார்பாக அளித்த ஆவணமிடப்பட்ட புகாரில் பிளாட்டரின் மோசமான நிதி நிர்வாகம், நலன் முரண்பாடு, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தல் ஆகியவை பட்டியலிடப்பட்டிருந்தன. பிளாட்டர் இந்தப் புகாரை ரகசியமாக வைத்துக் கொள்ள விரும்பினார். புகாரில் குறிப்பிடப்பட்டிருந்த உறுப்பினர்களின் நம்பகத்தன்மையைப் பாதுகாப்பதற்காக இந்த விசாரணையை முடித்துக் கொள்ள விரும்புவதாக அறிவித்தார். அதிகாரப்போட்டியில் பிளாட்டருக்கு ஈடு கொடுக்க முடியாத ருபினென் பிபாவை விட்டு வெளியேறினார். தன்னுடைய சகநிர்வாகிகளிடம் இருந்தே எழுந்த புகாருக்கு மத்தியில் பிளாட்டர் இரண்டாவதுமுறையாக பிபா தலைவராகத் தேர்வானார். கேமரூன் கால்பந்து அமைப்பு மற்றும் ஆப்பிரிக்கா கால்பந்து அமைப்பின் தலைவரான இஸ்ஸா ஹயாடோவ் இவரிடம் தோற்றார். ஆனால் இவரைப் பகைத்துக் கொள்ள விரும்பாத பிளாட்டர் இவரை பிபா துணைத் தலைவராக நியமித்தார்.

2013ம் ஆண்டில் பிபா முதல் முறையாக நன்னடத்தை விதிகளை வெளியிட்டது. ஹேவ்லாங்கே விசா ரணையின் போது இந்த விதிகள் இல்லை.2006 உலகக்கோப்பை போட்டிகள் ஜெர்மனியில் நடந்தன.பிபா துணைத்தலைவரும், டிரினிடாட்- டொபாக்கோ நாட்டின் கால்பந்து அமைப்பின் தலைவருமான ஜேக் வார்னர் உலகக்கோப்பை போட்டிக்கான அனுமதிச்சீட்டுகளை தனது குடும்பத்துக்குச் சொந்தமான சுற்றுலா நிறுவனத்தின் மூலமாக மறு விற்பனை செய்தார் என்ற புகார் எழுந்தது. இதில் இவர் 10லட்சம் டாலர்கள் லாபம் அடைந்தார். ஆனால் இவருடைய நடவடிக்கைக்கு பிபா வெறும்அதிருப்தி மட்டும் தெரிவித்தது. ஜேக் வார்னர் பிளாட்டரின் நிரந்தரவிசுவாசியானார்.2007ம் ஆண்டில் பிளாட்டர் மூன்றாவது முறையாக பிபா தலைவரானார். இவரை எதிர்க்கத் தயாரானவர்களை எல்லாம் இவர் ஓரங்கட்டினார். ஆண்டு தோறும் உலகின் மூலைமுடுக்கில் உள்ள சின்னஞ்சிறு நாடுகளுக்கு பயணம் செய்து அங்கு கால்பந்து மேம்பாட்டுக்கு பிபா நிதியை வாரி வழங்கியதன் மூலம் அந்த நாடுகளின் வாக்குகளைத் தக்க வைத்துக் கொண்டார்.பிளாட்டரின் ஆளுமைக்கு முன்பு அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்த அதிகார துஷ்பிரயோகம், லஞ்சம் போன்றவை இவருடைய காலத்தில் அன்றாடச் செயல்களாக மாறிவிட்டன. 2008ம் ஆண்டில் 2018, 2022 உலகக்கோப்பை போட்டி நடக்கும் நாடுகள் குறித்த தேர்வு ஒரே வேளையில் முடிவு செய்யப்பட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டது. வாக்குகளுக்கான குதிரை பேரம் நடைபெற்றது. போட்டியில் ஈடுபட்ட நாடுகள் தங்களுக்குள் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டன. 

வாக்கு நடக்கும் முன்னரே நைஜீரியாவின் ஆமோஸ் அடாமு, டாஹிட்டியின் ரெனால்ட் டெமாரி ஆகிய இருவரும் வாக்குக்குப் பணம் கேட்டதாக எழுந்தபுகாரில் இடைநீக்கம் செய்யப்பட்டனர். சண்டே டைம்ஸ் நடத்திய ரகசிய குரல் பதிவில் இருவரும் வாக்குக்கு பணம் கேட்டது நிரூபணமானது. இங்கிலாந்தும் போட்டியில் இருந்தது. இங்கிலாந்து குழுவின் தலைவர், ஒரு செயற்குழு உறுப்பினர் இரண்டரைக் கோடி டாலர் கேட்டார் என்றும், ஒரு உறுப்பினர் தனக்கு சர் பட்டம் அளிக்க வேண்டும் என்று கேட்டதாகவும் கூறினார்.இந்தப் புகார் மீது பிபா நன்னடத்தைக் குழு விசாரணை நடத்தியது. 2018 போட்டிகள் ரஷ்யாவுக்கும், 2022 போட்டிகள் கத்தாருக்கும் ஒதுக்கப்பட்டன. இதில் நன்னடத்தை விதிகள் மீறப்பட்ட போதிலும் வாக்குகள் நம்பிக்கையுடன், கண்ணியத்துடன் அளிக்கப்பட்டன என்று நன்னடத்தைக் குழு அறிக்கை கூறுகிறது என்று பிபா தெரிவித்தது. நன்னடத்தைக் குழுவின் புலனாய்வாளராக இருந்த அமெரிக்க சட்ட வல்லுநர் மைக்கேல் ஜே. கார்சியா பிபா முடிவை எதிர்த்து பதவி விலகினார். 2011ம் ஆண்டில் பிளாட்டர் நான்காவது முறையாக பிபா தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சென்ற தேர்தலின் போது அவருக்கு ஆதரவாக இருந்த கத்தாரின் முகமது பின் ஹம்மாம் அவரை எதிர்த்து போட்டியிடுவதாக இருந்தது. ஜேக் வார்னர் மத்திய அமெரிக்க, கரீபியன் நாடுகளின் கூட்டமைப்பின் தலைவர்களை ஹம்மாமைச் சந்திக்க அழைத்திருந்தார்.போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்த ஆதரவு தேடும் கூட்டத்தில் பஹாமாஸ் தலைவருக்கு அளிக்கப்பட்ட உறையில் 40 ஆயிரம் டாலர்கள் இருந்தன. அவர் டாலர்களைப் புகைப்படம் எடுத்துக் கொண்டுபணைத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டார். புகைப்படத்துடன் அவர் பிபாவில் புகார் செய்தார். இதுவும் பிளாட்டரின் ஏற்பாடுதான். 

ஹம்மாம் போட்டியில் இருந்து விலகிவிட பிளாட்டர் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.2010, 2011 ஊழல்கள் குறித்த விசாரணைகள் முடிவுக்கு வர, பிபா அமைப்பின் ஆறு பிரதேச அமைப்பின் தலைவர்கள் வெளியேறினர் அல்லது வெளியேற்றப் பட்டனர்.2015ம் ஆண்டில் பிளாட்டர் மீண்டும் பிபா தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜோர்டான் இளவரசர் அலி பின் ஹோசைன் அவரை எதிர்த்து போட்டியிட்டார். முதல் சுற்றில் ஒருவர் கூட வெற்றிக்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெறவில்லை. பிளாட்டர் முதல் சுற்றில் ஹோசைனை விட 60 வாக்குகள் கூடுதலாகப் பெற்றிருந்தார். இரண்டாவது சுற்றில் சாதாரணப் பெரும்பான்மை பெற்றவர் வெற்றி பெறுவார் என்பதால் ஹோசைன் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார்.2015 மே 15 அன்று ஸ்விஸ் அதிகாரிகள் பிபா அமைப்பின் முன்னாள், இந்நாள் அதிகாரிகள் 14 பேரைக் கைது செய்தனர். பல பத்தாண்டுகளாக நடந்த ஊழல்களின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். ஊழல் விசாரணையை அடுத்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக பிளாட்டர் அறிவித்தார். பிப்ரவரி 2016ல் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என்று பிபா அறிவித்தது.லஞ்சப்புகாரின் அடிப்படையில் அவர் மீது குற்ற விசாரணை நடத்தப்படும் என்று ஸ்விஸ் அதிகாரிகள் கூறினர்.உலகப்போட்டிகளின் உலகளாவிய ஒளிபரப்பு உரிமையை ஜேக்வார்னருக்கு அளிப்பதில் நடந்த முறைகேடுகள் பற்றி விசாரணை நடத்தப்படுவதாக ஸ்விஸ் அட்டர்னி ஜெனரல் கூறினார். 

இதையடுத்து உலகக்கோப்பை புரவலர்களான விசா/மாஸ்டர் கடன் அட்டை நிறுவனம், கொகோ கோலா, மக்டொனால்ட்ஸ், அன்ஹூசர் புஸ்க் இன்பெவ் ஆகியவை பிளாட்டரை பதவிவிலகுமாறு வற்புறுத்தின.ஸ்விஸ் அரசு நடவடிக்கையை அடுத்துபிளாட்டர், பிளாட்டினி, பிபா துணைத்தலைவர் ஜெரோம் வால்க்கே (ஏற்கனவே இவர் நன்னடத்தை விடுப்பில் உள்ளார்) ஆகிய மூவரையும் 90 நாட்கள் இடைக்கால நீக்கம் செய்துள்ளது.உலகின் முதன்மை விளையாட்டான கால்பந்து பிபாவின் செயல்பாட்டால் களையிழந்து நிற்கிறது. அடுத்து வரும் பொறுப்பாளர்கள் பிபாவின் தூய்மையான செயல்பாட்டுக்கும், கால்பந்தின் முன்னேற்றத்துக்கும், வெளிப்படையான நிர்வாகத்துக்கும், குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்களில் கட்டுப்பாட்டில் இருந்து அமைப்பு விடுபடுவதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நன்றி தீக்கதிர் நாளிதழ் 13.10.2015
 



No comments:

Post a Comment