Saturday, October 24, 2015

வருத்தம் மட்டும் போதுமா ஸ்டாலின் அவர்களே?

 

சிறிது நேரம் முன்பாக ரிமோட்டில் சேனல்களை மாற்றிக் கொண்டிருந்தேன். கலைஞர் செய்திகளில்  வி.கே.சிங்கிற்கு ஸ்டாலின் கண்டனம் என்று தலைப்புச் செய்தி பார்த்து சரி என்னதான் சொல்லியுள்ளார் என்று பார்க்கலாம் என்று முழுமையான செய்திக்காக காத்திருந்தேன்.

அந்த செய்தியும் வந்தது.

"வி.கே.சிங்கின் பேச்சு கண்டனத்துக்குரியது. அவர் முதலில் வருத்தம் தெரிவிக்க வேண்டும்"  என்று சொல்லி முடித்துக் கொண்டார்.

ஆணவத்தின்  அடையாளமாக வி.கே.சிங் உதிர்த்த வார்த்தைகள் அந்த மனிதன் அமைச்சர் பதவிக்கு அருகதையற்றவன் என்று பதவி விலகுமாறு நாடெங்கும் கண்டனக் குரல் எழுந்து கொண்டிருக்கிறது. பாஜகவின் முன்னாள் தலைவரும் தற்போதைய உள்துறை அமைச்சருமான ராஜ்நாத்சிங் அமைச்சர்கள் பொறுப்போடு பேச வேண்டும் என்று ஊருக்காவது உபதேசம் அளிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

அப்படி இருக்கையில் திரு ஸ்டாலின் அவர்கள் ஏன் வி.கே.சிங் மீது இவ்வளவு மென்மையான அணுகுமுறையை கடைபிடிக்கிறார்? மோடியின் அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று சொன்னால் அதன் மூலம் எதிர்கால தேர்தல் கூட்டணியிலோ அல்லது 2 ஜி விவகாரத்திலோ சிக்கல் வரும் என்ற அச்சமா?

ஒரு அயோக்கியப் பேர்வழியை பதவி விலகு என்று சொல்லக் கூட முடியாத அளவிற்கு திமுக வின் சமூக நீதிக் கொள்கை பலவீனமாகி விட்டதா?

இந்த கேள்வியை எழுப்ப வேண்டிய அவசியம்  இன்று உருவாகியுள்ளது. தமிழகத்தில் நடைபெற்று வரும் பல்வேறு சாதிய ஒடுக்குமுறைகள் மற்றும் ஆணவக் கொலைகள் விஷயத்தில் திமுக பெரும்பாலும் மௌனம்தான் சாதித்து வருகிறது.

இந்த தடுமாற்றத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர்கள் தோழர்கள் பிரகாஷ் காரத்தோ அல்லது சீதாராம் யெச்சூரியோ சுட்டிக்காட்டினால் பல கழகக் கண்மணிகள் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்வதற்குப் பதிலாக அவர்களின் வழக்கமான ஜாதி அரசியலுக்குள் நுழைந்து விடுகிறார்கள்.

நமக்கு நாமே பயணம் செல்லும் ஸ்டாலின் அவர்கள்  இன்னும் ஒரு பயணம் மேற்கொள்ள வேண்டும். 

தங்களின் தடுமாற்றம் சரிதானா என்று அவரது இதயத்திலிருந்து மனசாட்சிக்கு. 

பின் குறிப்பு 1 : இந்த கேள்வியை ஏன் ஜெயலலிதாவிடம் கேட்கவில்லை என்று யாரும் கேட்காதீர்கள்.  ஜெயலலிதாவிடம் இது பற்றியெல்லாம் எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்பது அனைவரும் அறிந்ததே.

பின் குறிப்பு 2 : அதே கலைஞர் தொலைக்காட்சியில் அடுத்து காண்பித்த செய்தி என்பது வி.கே.சிங்கிற்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் விடுதலைச் சிறுத்தைக் கட்சிகளும் நடத்திய போராட்டங்கள்.

2 comments:

  1. பொறுப்பில் இருப்பவர்கள் நிதானமாக இருக்கவேண்டும். அவர்கள் மனிதத்தையே இழந்துவிடுகின்றார்களே. வேதனைதான்.

    ReplyDelete
  2. What Mr karunanidhi and stalin were doing when thousands of tamils were murdered by Mr rajapakse' s singhalese
    army? They were part of Manmohan singh's team and .shedding crocodile tears. they don't have the guts to
    resign from the ministry for the fear of 2g scam.

    ReplyDelete