Thursday, March 5, 2026

மாட்டிக் கொண்ட மகாராஜா

 





 

10,11,ஆகஸ்ட், 2024 ஆகிய தேதிகளில் எங்கள் கோட்டச்சங்கத்தின் 37 வது பொது மாநாடு திண்டிவனம் நகரில் நடைபெற்றது. மாநாட்டின் ஒரு பகுதியாக பொது வெளியில் நடைபெற்ற “மக்கள் ஒற்றுமை கலை விழா”வில் நான் எழுதிய “மாட்டிக் கொண்ட மகாராஜா” நாடகத்தை எங்கள் தோழர்கள் அற்புதமாக நடித்து மக்களின் கரவொலியை அள்ளினார்கள்.

ராஜா, மகாராஜா, மீண்டும் மகாராஜா, சந்திரனில் மகாராஜா ஆகிய நாடகங்களின் தொடர்ச்சி இந்த "மாட்டிக் கொண்ட மகாராஜா" 

மாநாடு முடிந்த பின்பு அதனை இங்கே பகிர்ந்து கொள்ள இயலவில்லை. இந்திய அரசில் என்ன நிகழும் என்று நாடகம் வாயிலாக எதிர்பார்த்தோமோ  அது நடக்காத காரணத்தால் இந்த நாடகத்தை இங்கே பகிர்வது பொருத்தமில்லை என்று அதை ஒரு ஓரத்தில் வைத்து விட்டேன்.

பீகார் முதல்வர் பொறுப்பிலிருந்து நிதீஷ்குமார் இப்போது துரத்தப்பட்டு ராஜ்யசபா உறுப்பினராகப் போகிறார். மத்திய மந்திரி பதவி கிடைக்கலாம்.  முதல்வர் பதவியிலிருந்து துரத்தப்பட்டதை அவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் ஆள் அல்ல நிதீஷ்.

அதனால் நாடகக் காட்சிகள் நிஜமாகும், விரைவிலேயே . . .

 

மாட்டிக் கொண்ட மகாராஜா . . .

 

காட்சி 1


 

இடம் : அரசவை

தலையில் உலகம் சுற்றும் வாலிபன் தொப்பியோடு “ராஜாவுக்கு ராஜா நாந்தான், எனக்கு மந்திரிங்க யாரும் இல்லை” என்ற பாடல் ஒலிக்க, அப்போ நாம எல்லாம் யாரு? என்ற கேள்வியோடு மந்திரிகள் இருவரும் பார்த்துக் கொள்ள, மகாராஜா அரசவைக்கு வருகிறார். அவரது கேமராமேன் அவரை போட்டோ எடுத்துக் கொண்டே இருக்கிறார்.

 மந்திரி 1 : போதும்யா போதும். விட்டா நாள் ஃபுல்லா போட்டோ எடுத்துக்கிட்டே இருப்ப போல!

 மகாராஜா : என்னய்யா இந்த தொப்பில நான் எப்படி இருக்கேன்?

 மந்திரி 2 : அப்படியே எம்.ஜி.ஆர் மாதிரி தகதகன்னு மின்னறீங்க .

 மந்திரி 1 : ஏன்யா நீ எம்.ஜி.ஆர் போட்டோவாவது பாத்திருக்கியா? இப்படி  உசுப்பேத்தி உசுப்பேத்தி நீ நல்ல பேரு வாங்கிக்கறே!

 மகாராஜா :  சரி விடுங்கய்யா!  மக்கள் என்னைப் பத்தி என்ன பேசிக்கறாங்க?

 மந்திரி 1     : நல்லபடியா எதுவும் பேசலை

 மந்திரி 2 : இந்தாளு சொல்றதை நம்பாதீங்க. ஃபேஸ்புக், ட்விட்டர் எல்லாம் உங்க புகழ்தான்.

 மந்திரி 1 : அதுலயே எவ்வளவு பேர் கழுவி கழுவி ஊத்தறாங்க தெரியுமா?

 அப்போது வெளியில் ஏதோ சப்தம் கேட்கிறது.

 மகாராஜா : அங்க என்ன சத்தம்?

 புகைப்படக்காரர் : பழைய மகாராஜாவோட பையன் ஒரு கூட்டமா வந்திருக்காரு!

 மகாராஜா : அந்த சின்னப்பையனுக்கு என்ன வேணுமாம்?

 மந்திரிகள் இருவரும் வெளியே போய் சின்ன ராஜாவுடன் பேசி விட்டு உள்ளே வருகிறார்கள்.

 மந்திரி 1 : போன தடவை யானை மாலை போட்டு நீங்க மகாராஜாவானீங்க இல்லை! அப்போ . . .

 மகாராஜா : அதுக்கு இப்போ என்னய்யா?

 மந்திரி 1 : அஞ்சு வருஷம் கழிச்சி மறுபடியும் யானையை வச்சி மகாராஜவை தேர்ந்தெடுக்கலாம்னு சொன்னீங்களாம். அதை ஞாபகப்படுத்த வந்திருக்காரு

 மந்திரி 2 : நாமெல்லாம் என்னிக்குய்யா சொன்ன வார்த்தையை காப்பாத்தியிருக்கோம். அஞ்சு வருஷம் முன்னாடி சொன்னதை எல்லாம் இப்போ செய்யனுமா என்ன?

 மகாராஜா : விடுய்யா பாத்துக்கலாம். நாம பழக்கின யானைதானே!  

மந்திரி 1 : போன தடவை உங்க கழுத்தில மாலை போட்டதும் சுத்தி சுத்தி போட்டோ எடுத்தீங்க இல்ல!

 மந்திரி 2 : அதனால என்னய்யா?

 மந்திரி 1 : ஓவர் ஃப்ளாஷ் ஒத்துக்காம அதோட பார்வையே போயிடுச்சு.

 மந்திரி 2 : அப்போ அது ரிஸ்க்! அந்த யானை சின்னப்பையன் கழுத்தில மாலையை போட்டா நம்ம கதை அம்பேல்.

 மகாராஜா : வேற என்னய்யா செய்யறது?

 மந்திரிகள் இருவரும் யோசித்த படியே அங்கும் இங்கும் நடக்கிறார்கள்.

 மந்திரி 2 : மகாராஜா, ஒரு சூப்பர் ஐடியா!

 மகாராஜா : என்னய்யா அது?

 மந்திரி 2 : நீங்க ரெண்டு பேரும் பலப்பரிட்சை செய்யுங்க. அதில நீங்க ஜெயிச்சிடலாம்.

 மந்திரி 1 : யோவ, அவரு சின்னப்பையன், நம்ம மகாராஜாவுக்கோ வயசாயிடுச்சு.

 மந்திரி 2 : நாமெல்லாம் சுத்தி நின்னு அவனை கலாய்ச்சுக்கிட்டே இருப்போம். அதுல அவன் கவனம் மாறும். அப்போ மகாராஜாவை ஜெயிக்க வச்சிடுவோம். நமக்கு ஏத்த ஒரு ஆளை அம்பயர் ஆக்கிடலாம்.

 மந்திரி 1 : யானைக்கு பதிலா பலப்பரிட்சைன்னா அவன் ஒத்துக்குவானா?

 மந்திரி 2 : நான் என்ன பேசறேன்னு பாரு! அவனை கூட்டிட்டு வா

 சின்ன ராஜா வருகிறார்.

 மந்திரி 2 : இங்கே பாரு தம்பி! இந்த ப்ளூ கிராஸ், பீட்டா எல்லாம் ரொம்ப தகறாரு செய்யறாங்க! யானையை சித்திரவதை செய்யறோமாம். நீயும் மகாராஜாவும் யாருக்கு வலிமை அதிகம்னு பலப்பரிட்சை செய்யுங்க. ஜெயிக்கறவங்க மகாராஜாவாயிடுங்க!

 சின்ன ராஜா யோசிக்கிறார்.

 மந்திரி 2 : நீ சின்னப்பையன்தானே!  உனக்கே உன் பலத்து மேல நம்பிக்கை இல்லையா?

 சின்ன ராஜா :  எனக்கா பயமா? உங்காளு எவ்வளவு நேரம் தாங்குவார்னு யோசிச்சேன். சரி மோதிப் பார்க்கலாம். எப்போ?

 மகாராஜா : நாளைக்கே


 காட்சி  2



ஒரு டேபிள் போடப்பட்டு இரண்டு நாற்காலிகளில் மகாராஜாவும் சின்ன ராஜாவும் உட்கார்ந்து இருக்கிறார்கள். நடுவில் ஒரு  சேர் போடப்பட்டு அதில் அம்பயர் உட்கார்ந்து மிக்ஸர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

 சின்ன ராஜா : ஆரம்பிக்கலாமா?

 அம்பயர் பதில் சொல்லாமல் மிக்ஸர் சாப்பிடுகிறார்.

 மந்திரி 2 : சார்! ஸ்டார்ட் சொல்லுங்க

 அம்பயர் வாயில் மிக்ஸரை மென்று கொண்டிருக்க கையால் ஜாடை காட்டுகிறார்.

 மகாராஜாவும் சின்ன ராஜாவும் கைகளை கோர்த்து மோதுகிறார்கள்.

 மந்திரி 2 : தம்மாத்தூண்டு பையன் நீ, மகாராஜாவோட மோத வந்துட்டியா?

 மந்திரி 2 : உங்க தாத்தாவாலத்தான்     நாடே நாசமா போச்சு!

 மந்திரி 1 : உங்க அப்பாவும் சரியில்லை.

 மந்திரி 2 : நீயெல்லாம் மகாராஜாவானா எல்லா பொண்ணுங்களோட தாலியையும் பறிச்சி பக்கத்து நாட்டுக்கு கொடுத்துடுவே

 சின்ன ராஜா  அம்பயரைப் பார்த்து : இதையெல்லாம் அடக்க மாட்டீங்களா?

 அம்பயர் அப்போதும் மிக்ஸர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

 மகாராஜாவின் நண்பர்கள் நிதீஷும் சந்திரபாபுவும் வருகிறார்கள்.

 நிதீஷ் : என்ன மந்திரி? மகாராஜா தோத்துடுவார் போல இருக்கே!

 மந்திரி 2 : நீங்க ரெண்டு பேரும் மகாராஜாவை ஜெயிக்க வைக்க மாட்டீங்களா?

 நீதீஷும் சந்திரபாபுவும் சேர்ந்து மகாராஜா கையோடு தங்கள் கைகளை சேர்த்துக் கொண்டு அழுத்தம் தர மகாராஜா ஜெயித்து விடுகிறார்கள்.

 வெற்றி! வெற்றி ! என எல்லோரும் குதிக்கிறார்கள்.

 சின்ன ராஜா : இது அநியாயம்! அராஜகம்! ஒத்தனோட மூணு பேர் மோதுவாங்களா? என்ன அம்பயர் இதை கேட்க மாட்டீங்களா?

 அம்பயர் காதில் வாங்காதது போல மீண்டும் மிக்ஸர் சாப்பிடுகிறார்.

 மந்திரி 2 : நாளைக்கு மகாராஜா மீண்டும் பதவியேற்கப் போகிறார். எல்லாரும் வந்துடுங்க.

 

காட்சி 3



மகாராஜா அவரே கிரீடத்தை தன் தலையில் வைத்துக் கொள்கிறார். மந்திரிகளும் நண்பர்களும் கை தட்டுகிறார்கள்.

 சின்ன ராஜா : பிராடு செஞ்சு பதவிக்கு வந்தீங்களே! மக்களுக்கு என்ன செய்யப் போறீங்க?

 மகாராஜா : போன பத்து வருஷமா என்ன செஞ்சேன்?

சின்ன ராஜா : ஒன்னும் செய்யல

 மகாராஜா : இப்பவும் அப்படித்தான்.

 மகாராஜா அரசவையை விட்டு புறப்படுகிறார்.

 நிதீஷும் சந்திரபாபுவும் : எங்கே கிளம்பிட்டீங்க?

 மகாராஜா : என்னோட ரூமுக்குத்தான்.

 நீதீஷ் : இங்க இருக்க வேண்டாமா?

 மகாராஜா : இந்த உலகத்திலேயே எனக்கு பிடிக்காத ஒரே இடம் அரசவைதான்.

 சந்திரபாபு : அப்படில்லாம் எஸ்கேப் ஆயிட முடியாது. அஞ்சரை மணி வரைக்கும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.

 நிதீஷ் : அந்த கிரீடத்தை கொடு. எனக்கு எப்படி இருக்குன்னு பார்க்கறேன்.

 மகாராஜா : அது மகாராஜா கிரீடம்தான்.

 சந்திரபாபு : நாங்க இல்லைன்னா நீ எப்படி மகாராஜாவாயிருப்ப?

 நிதீஷ் : இப்போ கொடுக்கலைன்னா அது சின்ன ராஜா தலைக்கு நிரந்தரமா போயிடும்.

 இரண்டு பேரும் கிரீடத்தை மாற்றி மாற்றி அணிந்து கொள்கிறார்கள். போட்டோ எடுக்கச் சொல்கிறார்கள்.

 மந்திரி 2 : மகாராஜா, இந்தாங்க, உங்க முதலாளிகளுக்கு தர நீங்க கேட்ட லாலிபாப்

 சந்திரபாபு : அந்த லாலிபாப்பை எங்களுக்கு கொடுங்க.

 மகாராஜா : அது என் முதலாளிகளுக்கு

 நிதீஷ் : கண்ணா, இன்னும் அஞ்சு வருஷத்துக்கு நாங்கதான் உன் முதலாளி.

 அவர்கள் இருவரும் லாலிபாப்பை சுவைக்க

 மகாராஜா : என்னய்யா இது.

 மந்திரிகள் இருவரும் : இனிமே இப்படித்தான் . . .

 மகாராஜா அதிர்ச்சியில் நாற்காலியில் சாய்ந்து கொள்ள …

 “உள்ள அழுகிறேன், வெளிய சிரிக்கிறேன். நல்ல வேஷம்தான், வெளுத்து வாங்கறேன்” என்ற பாடல் ஒலிக்கிறது.

 குரல் : இது கதையல்ல, கற்பனையல்ல. இன்னும் ஐந்து ஆண்டுகள், இந்த தேசம் பார்க்கப் போகும் கொடுமைகள்.

 


 

 

மகாராஜா : தோழர் சி.சோமசுந்தரம், கோட்ட அலுவலகம்

மந்திரி  1  : தோழர் ஜி.ரவி, ஆரணி

மந்திரி   2 : தோழர் கே.அத்தாவூர் ரஹ்மான், கோட்ட அலுவலகம்

சின்ன ராஜா : தோழர் பி.எஸ்.பாலாஜி, வேலூர் கிளை

புகைப்படக் காரர் : தோழர் சி.கணேசன், கோட்ட அலுவலகம்

அம்பயர்  : தோழர் கே.வி.பாலகுமார், கோட்ட அலுவலகம்

நிதீஷ்        :  தோழர் கே.ரபீக் அகமது, வேலூர் கிளை

சந்திரபாபு : தோழர் ஆர்.குமரேசன், கோட்ட அலுவலகம்.

 பிகு : மேலே உள்ள கார்ட்டூன்கள்  திண்டிவனம் மாநாட்டு கண்காட்சிக்காக தயாரிக்கப்பட்டவை. 

 

 

No comments:

Post a Comment