புதுவை முன்னாள் முதல்வர் வி.நாராயணசாமிக்கு சட்டசபைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படாததால் அவரது ஆதரவாளர்கள், புதுவையின் தற்போதைய மக்களவை உறுப்பினரும், முன்னாள் முதல்வரும் தற்போதைய புதுவை காங்கிரஸ் தலைவருமான வி.வைத்தியலிங்கம் வீட்டின் முன்பாக போராட்டம் நடத்தி காவல்துறையால் கலைக்கப்பட்டுள்ளனர்.
பத்தாண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. அப்போது எழுதிய பதிவு கீழே நீல நிறத்தில் . . .
அடி வாங்கிய ஆளும் கட்சியினர்
ஒரு வழியாக புதுச்சேரி முதல்வர் யாரென்பது முடிவாகி விட்டது. மற்ற கட்சிகளின் உட்கட்சி விவகாரம் பற்றி கருத்து தெரிவிப்பது கிடையாது என்ற கொள்கை எனக்கு உள்ளதால் அது பற்றி ஒன்றும் சொல்லப் போவதில்லை.
இந்த முடிவை ஏற்றுக் கொள்ளாத கட்சிக்காரர்கள் கல் வீசி பேருந்துகளின் கண்ணாடிகளை உடைக்க, காவல்துறை அவர்களை துரத்தி துரத்தி தடியால் அடித்திருக்கிறது.
இந்தியாவிலேயே ஆளும்கட்சியினர் அடி வாங்கியது முதன் முதலாக புதுச்சேரியில் என்றுதான் நினைக்கிறேன்.
ஆரம்பம் அமோகமாக இருக்கிறது.
பின் குறிப்பு : ஒரு பிளாஷ்பேக். புதுவையில் திரு சண்முகம் என்பவர் சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாத போதும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் அவர் சட்டமன்ற உறுப்பினராவதற்கு வசதியாக தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய யாரும் தயாராக இல்லாததால் ஆறு மாதத்தில் ராஜினாமா செய்து விட்டார்.
இதில் என்ன வேடிக்கை என்றால் நாராயணசாமியை முதல்வராக்க எதிர்ப்பு தெரிவித்ததால் அன்று காங்கிரஸார் போலீஸிடம் அடி வாங்கினார்கள் (அப்போது அடி வாங்கிய நமச்சிவாயம் வகையறாக்கள் பின்னாளில் பாஜகவிற்கு தாவி விட்டார்கள் என்பது வேறு விஷயம்.) இப்போது நாராயணசாமிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால் அடி வாங்கினார்கள்.

No comments:
Post a Comment