Thursday, March 24, 2022

வேலூர் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது

 


கடந்த வாரம் வேலூரில் ஒரு கொடூரமான சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அதன் விபரங்களை இன்று ஆங்கில இந்து நாளிதழில் வெளியிட்டிருந்தார்கள். 

காட்பாடியிலிருந்து வேலூர் நோக்கி இரவுக்காட்சி திரைப்படம் முடித்து வந்த ஒரு பெண் மருத்துவரை ஒரு கும்பல் ஷேர் ஆட்டோவில் கடத்தி கூட்டுப் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார்கள். அந்த பெண் மருத்துவர் பீகாருக்கு சென்று மின்னஞ்சல் மூலமாக புகார் அளித்த பின்பு நடவடிக்கை எடுத்ததில் நான்கு இளைஞர்கள், இருபத்தி இரண்டு வயதுக்கு உட்பட்டவர்கள், மட்டுமல்ல, 18 வயதுக்கும் உட்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தனை பேரும் போதையிலிருந்ததாக சொல்கிறார்கள்.  கைது நடவடிக்கை நல்லது. ஆனால் இந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. வேலூரில் இது போன்ற சம்பவங்கள் நடந்தது கிடையாது. இதனை தவிர்த்திருக்க முடியுமா?

முடியும் என்றுதான் சொல்வேன்.

டாஸ்மாக்கை மூடினாலே பாதி குற்றங்கள் குறையும்.  டாஸ்மாக்கால் கிடைக்கும் வருவாயை விட சமூக அமைதி என்பது மிக முக்கியம்.

இன்னொன்று காவல்துறையின் அலட்சியம்.

முன்பெல்லாம் நள்ளிரவு எங்கேயாவது வெளியூர் போய் விட்டு ஆட்டோவில் வந்தால் காவல்துறை வண்டியை நிறுத்தி சோதனை செய்யும். இதற்காகவே பல ஆட்டோக்காரர்கள் சத்துவாச்சாரி என்றால் வர மாட்டோம் என்று கூட சொல்வார்கள். 

எடப்பாடி ஆட்சிக்கு வந்தது முதல் காவல்துறைக்கு அலட்சியமும் மெத்தனப் போக்கும் வந்து விட்டது. இப்போதும் அந்த போக்கு தொடர்கிறது என்பதுதான் யதார்த்தம். 

15 நாட்களுக்கு முன்பாகக் கூட என் மகனை இரவு 11.30 மணிக்கு ரயிலேற்றி விட்டு ஆட்டோவில் வரும் போது காவல்துறை கேட்டால் காண்பிப்பதற்கு என்று எல்.ஐ.சி ஐ.டி கார்ட், PAN CARD எல்லாம் பத்திரமாய் வைத்திருந்தேன். சில்க் மில் ஸ்டாப், க்ரீன் சர்க்கிளில் இரண்டு இடம், சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியரகம் என நான்கு இடங்களில் போலீஸ் இருந்தாலும் யாரும் யாரையும் கண்டுகொள்ளவில்லை.

இதில் ஏதாவது ஒரு இடத்திலாவது காவலர்கள் அந்த ஆட்டோவை சோதித்திருந்தால் இந்த சம்பவத்தை தவிர்த்து அந்த பெண்ணை காத்திருக்க முடியும். தமிழ்நாட்டின், வேலூரின் மானத்தையும் கூட.

தமிழ்நாட்டு முதல்வர் காவல்துறை மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். 

1 comment:

  1. // டாஸ்மாக்கை மூடினாலே பாதி குற்றங்கள் குறையும். டாஸ்மாக்கால் கிடைக்கும் வருவாயை விட சமூக அமைதி என்பது மிக முக்கியம்.//
    இது நமக்கு தெரிகிறது. ஆனால் அரசாங்கம் கண்டு கொள்ளாமல் இருக்கிறது.
    காரணம் மதுபான ஆலை உற்பத்தியாளர்கள் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள்.

    ReplyDelete