Tuesday, July 3, 2018

நீர்த்துப் போகாது எடுபிடியாரே !!!




தன்னுடைய ஆட்சிக்காலத்தில் முப்பத்தி ஓராயிரம் போராட்டங்கள் நடந்ததாகவும் தான் அவற்றையெல்லாம் நீர்த்துப் போகச் செய்து விட்டதாகவும் பெருமை பேசியுள்ளார் எடுபிடியார்.

இவ்வளவு போராட்டங்கள் நடக்குமளவிற்கு தன்னுடைய ஆட்சி மிகக் கேவலமாக உள்ளது என்பது கூட புரியாத மண்ணாங்கட்டி எல்லாம் முதலமைச்சரானது தமிழகத்திற்குக் கேவலம்.

முப்பத்தி ஓராயிரம் பிரச்சினைகளுக்கு தான் தீர்வு கண்டுள்ளேன் என்று சொன்னால் அது பெருமை.

தரகு வேலை, மிரட்டல் வேலை, அடக்குமுறை, அராஜகம், துப்பாக்கிச் சூடு, விபச்சார வழக்கு போடுதல் என்று போராட்டங்களை ஒடுக்க முயன்ற நீங்கள், தீர்வுக்காக என்றாவது  முயன்றுள்ளீரா?

“அதுக்கெல்லாம் நீங்க சரிப்பட்டு வர மாட்டீங்க”

என்னதான் இன்று முதல்வராக இருந்தாலும் நேற்று வரை அக்யூஸ்ட் 1 கார் டயரை வணங்கிக் கொண்டிருந்தீர். அக்யூஸ்ட் 2 காலில் சாஷ்டாங்கமாக  விழுந்து பதவியைப் பெற்ற

நீங்கள் எப்படி நிர்வாகத்திற்கு சரிப்பட்டு வருவீங்க ???

ஆனால் ஒன்று மட்டும் புரிந்து கொள்ளுங்கள் எடுபிடியாரே!

உண்மையான போராட்ட உணர்வு என்றும் மங்காது, அணையாது, நீர்த்துப் போகாது, அதனை உம்மால் எதுவும் செய்திட முடியாது. நீறு பூத்த நெருப்பு உம்மை நிச்சயம் ஒரு நாள் சுட்டெரிக்கும்.

உங்கள் அடக்குமுறைக்கு யாரும் அஞ்சிடவில்லை என்பதை இன்று தமிழகம் முழுதும் நடந்த ரயில் மறியல் போராட்டத்தின் மூலம் உணர்ந்து கொண்டிருப்பீர்களே!

ஆம் எஸ்.சி/எஸ்.டி வன் கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் முயற்சிக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகள் நேற்று  நடத்திய ரயில் மறியல் போராட்டத்தைத்தான் சொல்கிறேன்.

காவல்துறையை நீங்கள் குவித்து வைத்திருந்தாலும் அதற்காக யாரும் அஞ்சவில்லை. அடங்கவில்லை.

தமிழகம் முழுதும் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

உங்களால் போராட்டங்களை ஒரு போதும் ஒடுக்க முடியாது. நீங்கள் அடக்க, அடக்க வீறு கொண்டு எழுந்து கொண்டே இருக்கும் . . .


No comments:

Post a Comment