Monday, August 14, 2023

கேவலமான “பிரிவினை கோர நாள்” அரசியல்

 


கடந்தாண்டு முதல் டிமோ அரசு ஒரு கேவலமான அரசியலை கையில் எடுத்துள்ளது.

14 ஆகஸ்டை பிரிவினை கோர நாள் என்று அனுசரிக்கிறது. இது பற்றிய எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சுற்றறிக்கையின் ஒரு பகுதியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

   இந்திய துணைக் கண்டம் இரு வேறுபட்ட தேசிய-அரசுகளாகப் பிரிவினை கண்டதோடு நமக்கு சுதந்திரம் கிடைத்ததுஇந்த துரதிர்ஷ்டவசமான பிரிவினையானது நிலப்பகுதியை பிரித்தது மட்டுமன்றி நமது தேசிய இயக்கத்தின் ஒற்றுமையையும் பன்முகத் தன்மையையும் கடுமையாக பாதித்தது. பிரிவினையானது புதிதாக வரையறுக்கப்பட்ட எல்லைகள் நெடுகிலும் மக்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாத துன்பங்களை விளைவித்தது. பிரிவினையின்போது உலகம் இதுவரை கண்டிராத, கற்பனைக்கு எட்டாத அளவுக்கு கொள்ளை, சூறையாடல் மற்றும் கொலைகள் நடைபெற்றன. கிஞ்சித்தும் மனிதம் அற்ற மதவெறி வன்முறையில் கிட்டத்தட்ட பத்து லட்சம் மக்கள் இறந்ததாக அரசாங்க ஆவணம் தெரிவிக்கிறதுமிகப்பெரிய மனித புலம்பெயர்வு மற்றும் வலுக்கட்டாயமான இடப் பெயர்வு ஆகியவை நிகழ்ந்தன.

 முஸ்லிம் அல்லாதவர்கள் 60 லட்சம் பேர் மேற்கு பாகிஸ்தானில் இருந்து இந்தியப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்ததாகவும், 65 லட்சம் முஸ்லிம்கள் பஞ்சாப், டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய இந்தியப் பகுதியிலிருந்து வெளியேறி மேற்கு பாகிஸ்தானுக்குச் சென்றதாகவும் அரசாங்கப் பதிவுகள் காட்டுகின்றன. இதேபோல் முஸ்லிம் அல்லாதவர்கள் 40 லட்சம் பேர் கிழக்கு பாகிஸ்தானில் இருந்து மேற்கு வங்காளத்திற்கும், 10 லட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் மேற்கு வங்கத்தில் இருந்து கிழக்கு பாகிஸ்தானுக்கும் இடம்பெயர்ந்தனர். இந்து, சீக்கியர் மற்றும் முஸ்லீம் ஆகிய மூன்று சமூகத்தினரும் சமமான அளவில் பாதிக்கப்பட்டனர்.

 இனவாத வன்முறை மற்றும் வெறுப்பு ஆகியவை உருவாக்கக்கூடிய பேரழிவை நினைவில் கொள்வது அவசியம். இது மனிதர்களை மிருகங்களாக மாற்றுகிறது. பிரிவினையின் போது கண்ட மிருகத்தனம் மிகவும் மோசமானது. அத்தகைய நிலைமை மீண்டும் உருவாக அனுமதிக்காமல் இருப்பதற்கு பிரிவினையின் பேரழிவிலிருந்து படிப்பினைகளைப் பெறுவது முக்கியம்

 *எதற்காக பிரிவினை கோர நாள்?*

 இந்திய அரசு ஆகஸ்ட் 14 ஆம் தேதியை பிரிவினை பயங்கரத்தின் நினைவு தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளது. இது மத வன்முறையின் ஆபத்துகள் குறித்தும், வெறுப்பு அரசியலில் இருந்து விடுபட்டு நாட்டிற்காக பாடுபடுவது குறித்தும் குடிமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இருந்தால் அது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அது அவ்வாறு இல்லை. அரசியல் ஆதாயங்களுக்காக, பிரிவினை மற்றும் அதன் வீழ்ச்சிக்கு ஒரு சமூகத்தை குறை கூறுவதும், அதன் மூலம் குறிப்பிட்ட வேறு சமூகத்தினரை அணிதிரட்டுவதுமே இதன் முழு நோக்கமாகும். இந்தப் பின்னணியில்தான், ஆகஸ்ட் 14 ஆம் தேதியை, பிரிவினை பயங்கரத்தின் நினைவு தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் உத்தரவின் பேரில்,   கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது

 கண்காட்சியில் வைக்கப்பட்ட  புகைப்படங்கள், செய்திகள் ஆகியவற்றை பார்க்கும் போது அவை வெறுப்பு அரசியலில் இருந்து விடுபட வழி வகுப்பவையாக இல்லை, மாறாக வெறுப்புத்தீயை பெட்ரோல் ஊற்றி பரவச் செய்வதாகவே அமைந்துள்ளது.

 பிரிவினைக்கான முதல் குரலை எழுப்பியது கோழை சாவர்க்கார்தான். ஆனால் முகமது அலி ஜின்னாவின் புகைப்படத்தைப் போட்டு முஸ்லீம் லீக் தீர்மானத்தை நட்டும் வெளியிட்டுள்ளது.

 இந்துக்களும் இஸ்லாமியர்களும் சீக்கியர்களும் பிரிவினையின் போது பாதிக்கப்பட்டார்கள், தாக்கப்பட்டார்கள்,  கொல்லப்பட்டார்கள்.  உடமைகளை இழந்தார்கள்.

 ஆனால் கண்காட்சிப் படங்களும் செய்தித்தாள் கட்டிங்ககும் இந்துக்களும் சீக்கியர்களும் தாக்கப்பட்டதை மட்டும் சொல்கிறதே தவிர இஸ்லாமியர்களுக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி மௌனமாக இருக்கிறது. மிக முக்கியமாக டிமோவின் படம் முதலிலேயே வந்து விடுகிறது.

 மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் வெறுப்புணர்வை தூண்டி மத அடிப்படையில் மக்களை திரட்டும் கேவலமான அரசியலன்றி வேறில்லை.

பிகு: கண்காட்சியில் வைக்கப்பட்ட படங்களை இங்கே பகிர்ந்து அவர்களின் வெறுப்பரசியலை நாமும் பகிரக்கூடாது என்பதால் அவற்றை பகிராமல் தவிர்த்து விட்டேன். 

No comments:

Post a Comment