Saturday, November 5, 2016

கட்டுரை சுவையானது. சுய விமர்சனம் இன்னும் . . . .

டாடா குடும்பத்து குத்து வெட்டு தொடர்பாக எங்கள் தென் மண்டலத் துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் எழுதிய கட்டுரையை கடந்த வாரம் இங்கே பகிர்ந்து கொண்டிருந்தேன்.  



அதன் தொடர்ச்சியாக இன்று தீக்கதிர் நாளிதழில் வந்த கட்டுரையை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன். 

அக்கட்டுரை தொடர்பாக தோழர் சுவாமிநாதன் முக நூலில் ஒரு சுய விமர்சனம் செய்து கொண்டிருந்தார். அதனையும் இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன். 

எங்கள் தோழரின் முதிர்ச்சிக்கும் ஆசானின் வன்மத்துக்கும் உள்ள வேறுபாடை உங்களால் உணர முடியும். இக்கட்டுரை முக்கியமானது. அந்த சுய விமர்சனம் அதை விட முக்கியம் என்பதை ஜெமோவுக்கு யாராவது சொல்லுங்களேன்.





காலதேவன் நீதி வழுவுவதில்லை பொருளியல் அரங்கம்



-க.சுவாமிநாதன்

‘டாட்டாவின் அதிர்வேட்டு’ என்ற தலைப்பிலான கடந்த வார பொருளியல் அரங்கத்திற்கு முகநூலில் ‘இதெல்லாம் கையிலே அதிகமாக வைத்துக் கொண்டு ஷேர் வியாபாரம் செய்யறவங்களோட கவலை’ என்று ஒருவர் எதிர்வினை செய்திருந்தார். இப்போதெல்லாம் நாம் ஷேர் மார்க்கெட் போகிறோமோ இல்லையோ நமது சேமிப்புகளை நம்மைக் கேட்காமலேயே அங்கு தள்ளிவிட்டுவிடுகிறார்கள் என்பதே உண்மை.

என்ன ரகசியம்?

எல்ஐசி சேர்மன் வி.கே.சர்மாவை டாட்டா குழுமத்தின் இடைகால சேர்மன் ரத்தன் டாடா அக்டோபர் 27, 2016 அன்று சந்தித்துள்ளார். அதிகாரப்பூர்வமாக அவர்களுக்குள் என்ன பேசப்பட்டது என்பது வெளியே சொல்லப்படாவிட்டாலும் சைரஸ் மிஸ்திரி சர்ச்சையின் பின்புலத்தில் என்ன பேசியிருப்பார் என்பது உலகறிந்த ரகசியம். இதற்கிடையில் டாட்டா குழுமத்தின் அதிகாரிகளும் பல உள்நாட்டு நிதி நிறுவனங்களின் உயர் நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசியுள்ளனர். சைரஸ் மிஸ்திரி ஐந்து டாட்டா நிதி நிறுவனங்களில் 118000 கோடி சிக்கலாகியுள்ளது என்று வெளியிட்ட தகவலுக்கு விளக்கம் கொடுப்பதற்கே இச்சந்திப்பு என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எல்ஐசியின் படிகளை ரத்தன் டாட்டாவே ஏறியுள்ளதற்கு ஒரு காரணம் உள்ளது. டாட்டா குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களில் எல்ஐசி செய்துள்ள மொத்த முதலீடுகள் ரூ.37500 கோடிகளாகும். மிகவும் லாபகரமான டிசிஎஸ் நிறுவனத்தில் ரூ.14000 கோடிகள் வரை எல்ஐசியின் முதலீடுகள் உள்ளன. மிகவும் சிக்கலில் உள்ள டாட்டா ஸ்டீல் நிறுவனத்தில் எல்ஐசியின் முதலீடுகள் ரூ.5200 கோடிகள் உள்ளன. பங்குச் சந்தையில் டாட்டா குழும நிறுவனங்களின் பங்குகள் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. இந்நிலையில் எல்ஐசி போன்ற பெரிய முதலீட்டாளர்கள் முதலீடுகளை உருவ ஆரம்பித்து விட்டால் மற்ற முதலீட்டாளர்களும் பீதி அடைந்துவிடுவார்கள். ஆகவேதான் ரத்தன் டாட்டாவே எல்ஐசியின் படியேறி விளக்கம் கொடுத்துள்ளார்.

சிக்கலில் சிக்கிய நிறுவனங்கள்

டாட்டா குழும சர்ச்சை பங்குச் சந்தையில் டாட்டா நிறுவனங்களின் பங்கு மதிப்புகளில் ரூ.26,000 கோடி வரை சரிவை உருவாக்கக்கூடுமென நவம்பர் 3, 2016 மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.சைரஸ் மிஸ்திரி விரல் நீட்டிய ஐந்து டாட்டா நிறுவனங்கள் டாட்டா மோட்டார்ஸ், டாட்டா ஸ்டீல், டாட்டா பவர், ஐஎச்சிஎல், டிடிஎல் ஆகியவற்றின் பங்கு விலைகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. அவற்றின் நம்பகத்தன்மை மீது விழுந்த சந்தேக நிழலை அகற்றுவதற்குதான் ரத்தன் டாடா படாதபாடுபடுகிறார்.டாட்டா ஸ்டீல் நிறுவனத்தில் இரண்டாவது பெரிய பங்குதாரர் எல்ஐசி ஆகும். 

நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனமும் 1.17 சதவீதப் பங்குகளை வைத்துள்ளது.  டாட்டா பவர் நிறுவனத்தில் எல்ஐசி 13.1 சதவீதப் பங்குகளை வைத்துள்ளது. இதன் மதிப்பு ரூ.2700 கோடிகள். இதே நிறுவனத்தில் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் கம்பெனி, ஜிஐசி ஆகியன தலா 2.5 சதவீதப் பங்குகளை வைத்துள்ளன. டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 5.2 சதவீதப் பங்குகளை எல்ஐசி வைத்துள்ளது. இதன் மதிப்பு ரூ.2700 கோடிகள். இந்தியன் ஓட்டல் நிறுவனத்தின் 8.8 சதவீதப் பங்குகளை எல்ஐசி வைத்துள்ளது. இப்படிச் சர்ச்சைக்கு ஆளாகியுள்ள நிறுவனங்களிலெல்லாம் எல்ஐசியின் முதலீடுகள் பல்லாயிரம் கோடிகள் உள்ளன! இதனால்தான் ரத்தன் டாட்டாவின் திருமுக தரிசனம் எல்ஐசியின் சேர்மனுக்கு கிடைத்துள்ளது.

நிறைய கதைகள்

இந்திய நாட்டின் பொதுத்துறை நிறுவனங்கள் இப்படி நிறைய தனியார் நிறுவனங்களில் முதலீடுகளைச் செய்துள்ளன. பிரிட்டனின் கெயிர்ன் நிறுவனத்தை இந்திய நிறுவனமான வேதாந்தா விலைக்கு வாங்கி கெயிர்ன் இந்தியா எனப் பெயர் மாற்றியது. தற்போது வேதாந்தா, கெயிர்ன் இந்தியா நிறுவனத்தை ஒரே நிறுவனமாக இணைத்துக் கொள்ள  (ஆநசபநச) விரும்புகிறது. இம்முன்மொழிவும் சர்ச்சைக்கு ஆளாகியுள்ளது. கெயிர்ன் இந்தியா நிறுவனத்தில் எல்ஐசிக்கு 9 சதவீதப் பங்குகள் உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டானியா நிறுவனத்தின் சிஇஓ மாற்றப்பட்டார். அப்போது அந்நிறுவனத்தில் எல்ஐசிக்கு 14 சதவீதப் பங்குகள் இருந்தன. 

ஆனால், அவரின் திடீர் மாற்றம் எல்ஐசிக்கு தெரிவிக்கப்படவேயில்லை. இப்படி தனியார் நிறுவனங்களின் சிக்கல்கள், திறமையின்மை, உள்குத்துகள் ஆகியவை பொதுத்துறை நிறுவனங்களின் மீதும் தாக்குதல்களை ஏற்படுத்துகிற நிறைய கதைகள் உள்ளன. இன்று இந்தியாவில் அரசு வங்கிகள் தாங்க முடியாமல் தவிக்கிற 8 லட்சம் கோடி வராக்கடனில் பெரும்பகுதி இந்திய தனியார் தொழிலகங்களின் கைங்கரியம் தானே. ஆனால் இவற்றையெல்லாம் மீறி தனியார்மயத்தின் `சிறப்பு’ தனியார்களின் ‘நிர்வாகத் திறன்’ உலகமய ஆதரவாளர்களால் தொடர்ந்து சிலாகிக்கப்படுகிறது.

கால தேவனின் நீதி

ரத்தன் டாட்டாவின் `படியேறும் படலம்’ ஒரு உண்மையை வெளியே கொண்டு வந்துள்ளது. 25 ஆண்டு காலமாக இந்திய பொதுத்துறையின் `நிர்வாகத் திறமை’ மீது வாரியிறைக்கப்பட்ட அவதூறுகள் எத்தனை! இதோ இந்திய தனியார் தொழிலகங்களின் பிதாமகர் டாடா பொதுத்துறைகளின் படியேறுகிறார் இந்திய தனியார் தொழிலகங்களின் நிர்வாகத் திறன் குறித்து விளக்கம் தருவதற்கு.காலதேவன் பாரபட்சமற்றவன் . . .அவன் நீதி வழுவுவதில்லை . . .

தோழர் சுவாமிநாதன் மேற்கொண்ட சுய விமர்சனம் கீழே

இன்றைய "பொருளியல் அரங்கம்" பகுதிக்கு " கால தேவன் நீதி வழுவுவதில்லை" என்று தலைப்பு தந்திருக்கிறேன். கால தேவியும் நீதி வழுவ மாட்டாள். பாலின சமத்துவச் சொல்லாடல்களிலும் வழுவக் கூடாது. காலையில் தீக்கதிரை பிரித்ததும் எனது தவறு மனதில் பட்டுவிட்டது. "கால மகள் கண் திறப்பாள்" என்ற பழைய பாடல் நினைவுக்கு வந்தது.


No comments:

Post a Comment