Friday, December 6, 2019

அண்ணல் நினைவு நாளை திசை திருப்பினார்கள்






இன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவுதினம். ஆனால் கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளாக அப்படி மட்டும் நம்மால் பார்க்க முடிகிறதா?

இன்றைய ஆட்சியாளர்கள் இருபத்தி ஐந்து ஆண்டுகள் முன்பாக அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த காரணத்தால் டிசம்பர் ஆறு, பதட்டம் நிறைந்த நாளாக, மதச்சார்பின்மை மற்றும் மத நல்லிணக்கம் மீதான தாக்குதல் நிகழ்ந்த கறுப்பு தினமாக மாறி விட்டது.

அவர்கள் இன்றைய தினத்தை தேர்ந்தெடுத்ததை யதேச்சையானதாக கருத முடியாது.

இன்றைய ஆட்சியாளர்களுக்கு எந்த பாரம்பரியமோ வரலாறோ கிடையாது.

மகாத்மா காந்தியை படுகொலை செய்தது,
வீர சவர்க்கர் மன்னிப்பு கேட்டது,
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை வாஜ்பாய் காட்டிக் கொடுத்தது போன்ற

பாரம்பரியம்தான் அவர்களுக்கு உண்டு.

ஆகவேதான் அவர்கள் வரலாற்றை மாற்ற நினைக்கிறார்கள்.

அகமண முறை ஒழிந்தால்தான் இந்தியாவில் ஜாதி ஒழியும் என்று சொல்கிறார் அண்ணல் அம்பேத்கர். அதற்கு காதல் திருமணங்கள் அவசியம். இவர்களோ காதலர் தினத்தை பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாளாக பொய்ச்செய்தியை பரப்புகிறார்கள்.

காந்தி ஜெயந்தி தூய்மை தினம் என்று நீர்த்துப் போக வைக்கப்படுகிறது.

எட்டு நாள் ஆட்சிக்காலத்தில் என்ரானுக்கு அனுமதி கொடுத்த வாஜ்பாய் பிறந்த நாளை நல்லாட்சி தினம் என்று அறிவிக்கிறார்கள். அது கிறிஸ்துமஸ் நாள்.

தேவலோகத் தச்சன் விஸ்வகர்மா பிறந்தநாளைத்தான் உழைப்பாளர் தினம் என்று சொல்கிறார்கள்.

எனவே இவர்கள் டிசம்பர் ஆறாம் நாளை மசூதியை இடிக்க முடிவு செய்தது உள்நோக்கமுடையது. 

அண்ணல் அம்பேத்கர் லண்டனில் வாழ்ந்த வீட்டை நாங்கள்தான் வாங்கியுள்ளோம் என்று சொல்லி அவரை இன்றைய ஆட்சியாளர்கள் அபகரிக்கப்பார்க்கிறார்கள்.

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 125 வது பிறந்த தினத்தை முன்னிட்டு ஒரு சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விசாகபட்டிணம் அகில இந்திய மாநாடு கோரியது.

தனியார்துறையில் இட ஒதுக்கீடு,
இன்னமும் தொடரும் தீண்டாமைக் கொடுமைகள்,
எஸ்.சி/எஸ்.டி துணைத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, அது முறையாக அமலாவது

உள்ளிட்ட தலித் மக்களின் பிரச்சினைகள் குறித்து விவாதம் அமைய வேண்டும் என்று வற்புறுத்தியது.

ஆனால் அந்த கோரிக்கையை உதாசீனம் செய்த மத்திய அரசு நவம்பர் மாதம் 25 ம் தேதியை அரசியல் சாசன தினம் என்று அறிவித்து ஒரு நாடாளுமன்றக் கூட்டத்தொடரை இரண்டாண்டுகள் முன்பு நடத்தியது. இதன் மூலம் அண்ணல் அம்பேத்கரை நாங்கள் கௌரவிக்கிறோம் என்றும் சொல்லிக் கொண்டது. ஆனால் அந்த கூட்டத்தொடரின் துவக்கத்தில் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படையாக மனுதர்மம் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றார். இதுதான் அவர்கள் அண்ணல் அம்பேத்கரை கௌரவித்த லட்சணம்.

ஒரு மனிதன் - ஒரு மதிப்பு என்ற கொள்கை அனைவருக்கும் வாக்குரிமை என்பது அரசியலில் சாத்தியமாகி உள்ளது.

அதே நேரம் சமூகத்தில் ஒரு மனிதன் - ஒரு மதிப்பு என்ற நிலையை அடைய வெகு தூரம் பயணிக்க வேண்டும் என்று அரசியல் சாசனத்தை முன்மொழிகையில் அவர் சொன்னார். இன்னமும் அந்த இலக்கு வெகு தூரத்தில்தான் உள்ளது.  

லண்டன் நூலகத்தில் அதிகமான நூல்களை படித்தவர்கள் என்ற பெருமை இருவருக்கு மட்டுமே உண்டு.

ஒருவர் பேராசான் காரல் மார்க்ஸ்
இன்னொருவர் அண்ணல் அம்பேத்கர்.

உழைக்கும் மக்களின் விடியலுக்கான பாதையை அளித்தவர்  மார்க்ஸ்.
ஒடுக்கப்பட்ட மக்களின் விடியலுக்கான பாதையை அளித்தவர் அண்ணல் அம்பேத்கர்.

இந்தியாவில் ஜாதிகள் பிரமிட் வடிவத்தில் உள்ளது. ஒரு ஜாதி ஒடுக்கப்படுகிற ஜாதியாகவும் அதே நேரம் ஒடுக்குகிற ஜாதியாகவும் உள்ளது என்றார் அவர்.

ஜாதிய முறையை பாதுகாக்கிற சக்தியாக இங்கே மதம் உள்ளது என்பதை ஆணித்தரமாக நிறுவியவர் அவர்,

இந்தியாவில் ஜாதிகள்,
ஜாதி ஒழிப்பு 

என்ற அவரது நூல்கள் இப்போதும் கிடைக்கிறது. அவற்றை நாம் அவசியம் படித்திட வேண்டும்.

அவரை அரசியல் சாசனத்தை உருவாக்கியவர், ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் என்ற சட்டகத்தில் மட்டும் அடைப்பது சரியல்ல.

தொழிலாளர்களின் வேலை நிறுத்த உரிமைக்காக,
மொழிவாரி மாநிலங்களின் உருவாக்கத்திற்காக
பெண்களின் சொத்துரிமைக்காக,
மாநிலங்களின் உரிமைகளுக்காக,
மத்தியிலே எல்லா அதிகாரங்களும் குவிக்கப்படக்கூடாது

ஆகியவற்றுக்காக

போராடிய, குரல் கொடுத்த பெரும் தலைவர்.

ஜாதிய முறையை கட்டிக்காத்து  நீடிக்க வைப்பது இந்து மதம்தான். நான் இந்துவாக பிறந்திருக்கலாம். ஆனால் இந்துவாக இறக்க மாட்டேன் என்று சொல்லிய அவர்

பல்லாயிரக்கணக்கான மக்களோடு புத்த மதத்தை தழுவுகிறார். அவர் அப்போது இருபத்தி இரண்டு பிரகடனங்களை வெளியிடுகிறார். அண்ணல் அம்பேத்கர் நாக்பூரில் புத்த மதத்தை தழுவிய இடம் "தீட்சா பூமி"  என்று  அழைக்கப்படுகிறது. 

அவரது பிரகடனங்கள் அங்கே ஒரு நினைவுத் தூணில் பொறித்து வைக்கப்பட்டுள்ளது. 

அதனை பார்க்கும் வாய்ப்பு சில வருடங்களுக்கு முன்பு எனக்கு கிடைத்தது.

அந்த பிரகடனங்களை நான் வாசிக்கிறேன்.



1)        பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகியோரை கடவுளாக கருதவோ, வழிபடவோ மாட்டேன்
2)        ராமனையோ கிருஷ்ணனையோ கடவுளாகக் கருதி வழிபட மாட்டேன்.
3)        கௌரி, கணபதி போன்ற ஹிந்து தர்மம் சொல்கிற எவரையும் கடவுளெனக் கருதி தொழ மாட்டேன்.
4)        கடவுள் அவதாரமெடுத்தார் என்பதை ஒருபோதும் நம்ப மாட்டேன்.
5)        புத்தர் விஷ்ணுவின் அவதாரம் எனச் சொல்வது தவறு மட்டுமல்ல, விஷமத்தனமான பிரச்சாரமும் கூட.
6)        திதி போன்றவற்றை நான் செய்ய மாட்டேன்.
7)        புத்த தர்மங்களுக்கு முரணான, எதிரான எதையும் நான் செய்ய மாட்டேன்.
8)        பிராம்மணர்கள் மூலம் எந்த சடங்கையும் செய்ய மாட்டேன்.
9)        அனைத்து மனிதர்களும் சமம் என்பதை நான் நம்புகிறேன்.
10)     சமத்துவத்தை உருவாக்க நான் பாடுபடுவேன்.
11)     புத்தரின் உயரிய கொள்கைகளை பின்பற்றுவேன்
12)     புத்தரின் பத்து கோட்பாடுகள் படி நடந்து கொள்வேன்.
13)     அனைத்து ஜீவராசிகளையும் நேசிப்பேன்.
14)     நான் திருட மாட்டேன்.
15)     நான் தகாத உறவில் ஈடுபட மாட்டேன்
16)     நான் பொய் சொல்ல மாட்டேன்.
17)     எந்த போதைப்பொருளையும் நான் உட்கொள்ள மாட்டேன்
18)     புத்த தர்மத்தின் மூன்று அடிப்படைகளான ஞானம், கருணை, நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில் வாழ்வேன்.
19)     மனிதகுல வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கிற, மனிதர்களை சமமற்றவர்களாகவும் இழிவாகவும் நடத்துகிற ஹிந்து தர்மத்தை துறந்து புத்த தர்மத்தை தழுவிகிறேன்.
20)     இனி புத்த தர்மப்படியே நடந்து கொள்வேன் என சபதமேற்கிறேன்.


அண்ணல் அம்பேத்கர் வாழ்ந்த வீட்டை வாங்கியுள்ளோம் என்று பெருமை கொள்ளும் இன்றைய ஆட்சியாளர்கள் அவருடைய பிரகடனங்களை ஏற்பார்களா?

அதன் வழி நடப்பார்களா?

இல்லை

குஜராத் பாடத்திட்டத்தில் இருந்து அந்த பிரகடனங்களை நீக்கி உள்ளார்கள். 

இப்படிப்பட்டவர்களிடமிருந்து அண்ணல் அம்பேத்கரை மீட்பதும் நம் முன் உள்ள முக்கியக் கடமை.


அஞ்சல் ஓய்வூதியர் சங்கம் மற்றும் பி.எஸ்.என்.எல் ஓய்வூதியர் சங்கம், இரண்டாண்டுகளுக்கு முன்பு வேலூரில் நடத்திய அண்ணல் அம்பேத்கர் நினைவஞ்சலிக் கூட்டத்தில் உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
அப்போது பேசியதில் சில முக்கிய பகுதிகளை 
இங்கே மீண்டும் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

 

1 comment:

  1. அண்ணல் நினைவை மிட்போம்.

    ReplyDelete