Wednesday, May 24, 2017

அவிய்ங்க ஃஎப்.ஐ.ஆர், இவிய்ங்க விருது





காஷ்மீர் ஜீப் பிரச்சினை பற்றியே மீண்டும் எழுத வேண்டி உள்ளது.

அப்பாவியை ஜீப்பில் கட்டி இழுத்துப் போனதற்காக மேஜர்  லீடுல் கோகய் உள்ளிட்ட தொடர்புடைய ராணுவ அதிகாரிகள் மீது ஜம்முகாஷ்மீர் மாநில காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.

அதே நேரம், இந்த சம்பவத்திற்காகவே ராணுவத்தின் தீரச் செயலுக்கான விருதை மேஜர் லீடுல் கோகய்க்கு வழங்கியுள்ளதாக, (மூன்று உயரதிகாரிகளை புறம் தள்ளி, மரபுகளை மீறி மோடியால் நியமிக்கப்பட்ட)  ராணுவத் தளபதி பிபின் ராவத் அறிவித்துள்ளார்.

மாநில காவல்துறை குற்றம் என்று பதிவு செய்துள்ள ஒரு செயலை வீரச் செயல் என்று ராணுவம் விருது வழங்குகிறது.

மேஜர் மீதான முதல் தகவல் அறிக்கையை நாங்கள் ரத்து செய்யப் போவது கிடையாது. சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்போம் என்று காஷ்மீர் மாநில ஐ.ஜி சொல்கிறார். தளபதியின் உறவினர் யாருக்காவது இப்படிப்பட்ட இழிவு நிகழ்த்தப்பட்டிருந்தால் அப்போதும் விருது வழங்கி கௌரவிப்பாரா என்று கேட்கிறார் பாதிக்கப்பட்ட பாரூக் அகமது தார்.

காஷ்மீர் பிரச்சினையை விரைவில் தீர்ப்போம் என்று இரண்டு நாட்கள் முன்பாகத்தான் ராஜ்நாத் சிங் வாய்ச்சவடால் விட்டிருந்தார். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற ராணுவ தளபதிகள் இருக்கிற வரை காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வே இருக்கப் போவதில்லை.

ஜீப் சம்பவத்தை விட இன்னும் கொடுமையாக இருக்கிறது விருது வழங்கிய விவகாரம்.

No comments:

Post a Comment