Monday, November 30, 2015

ஆழமான உரையின் இரண்டாம் பகுதி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி மாநிலங்களவையில் ஆற்றிய உரையின் காணொளி மற்றும் தீக்கதிர் வெளியிட்ட செய்தியை  நேற்று பகிர்ந்திருந்தேன்.

தோழர் சீத்தாராம் யெச்சூரி அவர்களின் உரையின் நிறைவுப் பகுதியை தீக்கதிர் நாளிதழில் இன்று பிரசுரம் செய்துள்ளனர். 

மிகவும் முக்கியமான இந்த உரையை அவசியம் படியுங்கள்.

 சமத்துவமும் சகோதரத்துவமும் இல்லையேல் சுதந்திரம் இல்லை!
சீத்தாராம் யெச்சூரி



“அரசு முன்வைத்துள்ள தீர்மானத்தில் சமூக நீதி தொடர்பாக டாக்டர் அம்பேத்கர் கூறிய முக்கிய அம்சம் விடுபட்டுள்ளது. இந்த அவையில் அதனை நான் பலமுறை குறிப்பிட்டிருக்கிறேன்.இப்போதுநான் அதனை முழுமையாக மேற்கோள் காட்டுகிறேன். “1950 ஜனவரி 26 அன்று - மீண்டும் ஒருமுறை குறித்துக்கொள்ளுங்கள், அதுதான் அரசமைப்புச்சட்ட தினம், குடியரசு தினம் - நாம் முரண்பாடுகள் மிகுந்த வாழ்க்கைக்குள் நுழைவதற்காக சென்று கொண்டிருக்கிறோம். அரசியலில் நாம் சமத்துவத்தைக் கொடுக்க இருக்கிறோம். ஆனால், சமூக மற்றும் பொருளாதார வாழ்வில் நாம் இன்னமும் சமத்துவமின்மையையே பெற்றிருக்கிறோம். அரசியலில், `ஒரு மனிதன், ஒரு மதிப்பு’ (‘டிநே அயn டிநே எயடரந’) என்னும் கொள்கையை அங்கீகரித்திட இருக்கிறோம். ஆனால், நம் சமூக மற்றும் பொருளாதார வாழ்வில், நம் சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புகளின் காரணமாக, `ஒரு மனிதன், ஒரு மதிப்பு’ என்னும் கொள்கை மறுக்கப்படுவதைத் தொடர இருக்கிறோம். இது முரண்பாடாகும்“ என்கிறார் அம்பேத்கர்.

அவர் மேலும் தொடர்கிறார்: “இந்நிலையினை நாம் மறுப்பது வெகுகாலத்திற்குத் தொடருமேயானால், அது நம் அரசியல் ஜனநாயகத்தையும் ஆபத்திற்குள்ளாக்குவதற்கே இட்டுச் செல்லும். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இந்த முரண்பாட்டை நாம் போக்கிட வேண்டும். இல்லையேல், இத்தகைய சமத்துவமின்மையால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த அரசியல் நிர்ணயசபை மிகவும் கடினமாக உழைத்து உருவாக்கியுள்ள அரசியல் ஜனநாயகம் என்னும் கட்டமைப்பையே தகர்த்துவிடுவார்கள்.’’டாக்டர் அம்பேத்கர் கூறிய கூற்று இது. 

வறுமையின் பிடியில் 90 சதவீத குடும்பங்கள்

இன்று என்ன நிலைமை?ஒரு பக்கம், நம் நாட்டில் ஒரு நூறு பில்லியனர்கள். இவர்களின் சொத்து மதிப்பு என்பது, நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட பாதி அளவினதாகும். சமீபத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நம் நாட்டில் 90 சதவீதக் குடும்பத்தினர், மாதத்திற்கு 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகத்தான் வருமானம் பெறுகிறார்கள். இந்த முரண்பாட்டைக் களைந்திட ஏதேனும் நடவடிக்கை எடுத்திருக்கிறீர்களா? அல்லது, இம்முரண்பாட்டை மேலும் கூர்மைப்படுத்தக்கூடிய விதத்தில்தான் நடவடிக்கை எடுப்பீர்களா? ஆனால், அதற்குப் பதிலாக, பிரதமரின் ஒவ்வொரு அயல்நாட்டுப் பயணத்தின்போதும், அந்நிய மூலதனத்திற்குப் புதிய சலுகைகளை அளிப்பதற்கான வழிவகைகளைத்தான் கண்டுகொண்டிருக்கிறோம்.
அந்நிய நேரடி முதலீட்டிற்கு பதினைந்து புதிய துறைகளைத் திறந்துவிட்டிருக்கிறீர்கள்.தாராள வர்த்தக ஒப்பந்தங்கள், நம் நாட்டில் பயிரிடப்பட்டுக் கொண்டிருந்த வணிகப் பயிர்களின் வேளாண்மையையே அழித்துக் கொண்டிருக்கின்றன. வேளாண் நெருக்கடி அதிகரித்துக் கொண்டிருக்கிறது. விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். அரசாங்கத்தின் புள்ளி விவரங்களின் அடிப்படையிலேயே தொழில் உற்பத்தி அட்டவணை, இந்த மாதம் 6 சதவீதத்திற்கும் கூடுதலாக இருந்தது, 3 சதவீதமாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. உற்பத்தித் தொழிலில் 6 சதவீதத்திலிருந்து 2.4 சதவீதமாக வீழ்ந்துவிட்டது.

டாக்டர் அம்பேத்கர் கூறிய சமூகநீதிக் கொள்கையின்இன்றைய நிலை என்ன?

தலித்துகள்/பழங்குடியினர் இடஒதுக்கீட்டில் நடைபெறும் அட்டூழியங்கள்பற்றி நான் குறிப்பிட்டிருக்கிறேன். சமூகத்தில் சமத்துவமின்மை அதிகரித்துக் கொண்டிருப்பதால், நம் மக்களின் நிலைமைகள் மிகவும் மோசமாகிக் கொண்டிருக்கின்றன. ஏன் இந்த முரண்பாடு? எதார்த்த நிலைமைகளைப் பாருங்கள். இந்த விதத்தில்தான் நாம் டாக்டர் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்த வேண்டுமா? இந்த விதத்தில்தான் நவீன இந்தியா, சமூக நீதிக் கொள்கையைப் பின்பற்ற வேண்டுமா?அரசியல் கட்சிகளை மறந்துவிடுங்கள்.
நீங்கள் எந்தக் கட்சி, நான் எந்தக் கட்சி என்று பார்க்க வேண்டாம். ஓர் இந்தியன் என்ற முறையில், நாம் நமக்கு நேர்மையாக நடந்துகொள்கிறோமா? நாம் உண்மையிலேயே டாக்டர் அம்பேத்கருக்கு நீதி வழங்குகிறோமா?

கூட்டாட்சித் தத்துவம்

டாக்டர் அம்பேத்கர் கூட்டாட்சித் தத்துவம் (கநனநசயடளைஅ) குறித்து என்ன கூறியிருக்கிறார்? மத்திய அரசும், மாநில அரசுகளும் சமமானவைகளாக இருக்க வேண்டும் என்றார். அவரது உரையை நான் படிக்கிறேன்:“நம்முடைய அரசமைப்புச்சட்டத்தை ஒரு மத்தியத்துவப்படுத்தப்பட்ட (உநவேசயடளைஅ) ஒன்றாக அழைப்பது மிகவும் கடினம். கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படைக் கொள்கையே மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே சட்டமன்றங்களும், நிர்வாக ஏற்பாடுகளும் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
இது தொடர்பாக மத்திய அரசு எவ்விதச் சட்டமும் நிறைவேற்றக்கூடாது. அரசமைப்புச்சட்டம்தான் இதனைச் செய்திட வேண்டும்.’’இதுதான் அரசமைப்புச் சட்டத்தின் சாரம். இத்தகைய கூட்டாட்சித் தத்துவம் இன்றையதினம் கடைப்பிடிக்கப்படுகிறதா?அரசமைப்புச் சட்டத்தின் 356ஆவது பிரிவு துஷ்பிரயோகம் செய்யப்பட்டது குறித்து நீங்கள் கூறினீர்கள். இதற்குப் பலியானது நாங்கள்தான். முதலில் 1950இல் கேரளாவில். பின்னர் 1960களில் இருமுறை. வங்கத்தில் 1967இலும் 1969இலும் பலியானோம். இது இருக்கட்டும்.கூட்டாட்சித்தத்துவம் என்றால் என்ன? மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே சமத்துவம் மட்டும் அல்ல; மாநிலங்களின் சுயேச்சையான மதிப்பும் ஆகும். இவற்றை இந்த அரசு வழங்கி இருக்கிறதா?

நீதித்துறை பற்றி அம்பேத்கர் சொன்னது என்ன?

இப்போது நீதித்துறை குறித்தும் பேசுகிறீர்கள். இதுகுறித்து டாக்டர் அம்பேத்கர் கூறியிருப்பது மிகவும் ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடியதாகும். அவர் கூறுகிறார்: “நீதிமன்றங்கள் சற்றே மாற்றியமைக்கப்படலாம், ஆனால் முழுமையாக மாற்றிட முடியாது. புதிய வியாக்கியானங்கள், புதிய விவாதங்கள் வரும்போது அவை தங்கள் கருத்துக்களை மாற்றிக்கொள்ளலாம். ஆனாலும் அவற்றுக்கென்று அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை அவை மாற்றி அமைத்துக்கொள்ள முடியாது.நிர்வாகம், நீதித்துறை மற்றும் நாடாளுமன்றம்/சட்டமன்றங்கள் தனித்தனியேயும் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்தும் உருவாக்கப்பட்டிருப்பது நம் அரசமைப்புச் சட்டத்தின் முத்திரைச்சின்னங்களாகும்.
உலகிற்கே வழிகாட்டிய இந்தியாஇப்போது நீங்கள் டாக்டர் அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கிறீர்கள். 1946 முதல் 1950 வரை உலகின் நிலைமை என்ன?கோடிக்கணக்கான மக்கள் காலனிய ஆதிக்கத்தின் பிடியில் இருந்தார்கள். இந்த நாடுகள் அனைத்தும் ஒவ்வொன்றாக சுதந்திரம் அடைந்தன. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது உண்மையிலேயே நாம் ஒரு புரட்சிகரமான காரியத்தைச் செய்தோம். எந்த நாடுமே அளிக்காத விதத்தில், நாம் நம் மக்கள் அனைவருக்கும் வாக்குரிமை அளித்தோம். 

ஐரோப்பிய நாடுகள் அளிக்கவில்லை, அமெரிக்கா கூட அளிக்கவில்லை.அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா இங்கே வந்த போது, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உரை நிகழ்த்தினார். அவர் நாடாளுமன்றத்தில் உள்ள பார்வையாளர்கள் புத்தகத்தில் என்ன எழுதினார்? “உலகின் மிகவும் பழைமையான ஜனநாயக நாட்டிலிருந்து, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டிற்கு வாழ்த்துக்கள்’’ என்று எழுதியிருந்தார். (“ழுசநநவiபேள கசடிஅ வாந றடிசடன’ள டிடனநளவ னநஅடிஉசயஉல வடி வாந றடிசடன’ள டயசபநளவ.” ) இது அவர் அளித்த செய்தி. 

ஒபாமாவிடம் சொன்னேன்...

மாலையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு விருந்து அளிக்கப்பட்ட சமயத்தில் அவரிடம் இதை நான், “நீங்கள் உங்கள் நாட்டை பழைமையான ஜனநாயக நாடு என்று வரையறுத்திருப்பது தவறு,’’ என்று சுட்டிக்காட்டினேன். அவர், “ஏன்?’’ என்று கேட்டார். நான் அவரிடம், “நீங்கள் உங்கள் நாட்டில் அமெரிக்கர்கள் - ஆப்பிரிக்கர்கள் - அனைவருக்கும் 1962இல்தான் வாக்களிக்கும் உரிமையை அளித்தீர்கள்.
அதாவது நீங்கள் பிறந்து ஓராண்டு கழிந்தபின்னர்தான். ஆனால், நாங்கள் அதனை 1950இலேயே கொடுத்திருக்கிறோம்.’’உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?ஆனால், இன்றைய நிலைமை என்ன? ஹரியானா மாநிலத்தில் 86 சதவீத மக்களுக்கு வாக்குரிமை, தேர்தலில் போட்டி போடும் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது.ராஜஸ்தானில், மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வாக்குரிமை இன்றி இருக்கிறார்கள். குஜராத் குறித்து நீங்கள் என்ன கூறியிருக்கிறீர்கள்? “உங்கள் வீட்டில் கழிப்பறை வசதி இல்லையேல், உங்களுக்கு வாக்குரிமை கிடையாது, தேர்தலில் போட்டி போட முடியாது’’ என்று கூறியிருக்கிறீர்கள். 

இவை அனைத்தும் பாஜக ஆளும் மாநில அரசாங்கங்கள். நீங்கள் இங்கே வந்து அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்துகிறீர்கள். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முக்கிய அம்சமே அனைவருக்கும் வாக்குரிமை என்பதாகும். அதனை உங்கள் பாஜக அரசு மறுத்து வருகிறது.

(மணியடிக்கப்பட்டது)நீங்கள் மணி அடிப்பீர்கள் எனத் தெரியும். ஆளும் கட்சியின் அமரும் இருக்கைகள்அனைத்தும் அநேகமாகக் காலியாக இருக்கின்றன. அதிகாரிகள் அமரும்இருக்கைகள் கூட காலி.
நாங்கள் கூறுவதை யார் அரசுக்கு எடுத்துச்செல்வார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. பொதுவாகவே ஆளுங்கட்சியினர், எங்களது உரைகளை உதாசீனம் செய்கிறார்கள்.அவைத் தலைவர் ஜெர்மனி குறித்தும், அதன் மூன்றாவது ‘ரெய்ச்’ (நாடாளுமன்றம்) குறித்தும் குறிப்பிட்டார். அற்புதம். எதேச்சதிகாரத்தை நினைவுபடுத்தியதற்காக அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கோல்வால்கரின் புத்தகம்

1939இல் நாட்டில் நாம் கோரும் சுதந்திர இந்தியாவின் குணம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது குறித்து விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, ஒரு புத்தகம் வெளிவந்திருந்தது. அப்போது அது மிக முக்கியமான புத்தகமாக இருக்கும் என்று பலர் கருதவில்லை. ஆனால் அது இந்திய அரசியலிலும், இந்தியாவின் எதிர்காலத்திலும் மிக மிக முக்கியமான பாதிப்புகளை ஏற்படுத்திய புத்தகமாகும். அதை எழுதியவர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் குரு என்று அழைக்கப்படுகிறார். 

அவைத் தலைவர், ஜெர்மனியின் மூன்றாவது ரெய்ச் குறித்துக் குறிப்பிட்டதால், அந்தப் புத்தகத்தில் அது குறித்து என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதை மேற்கோள் காட்ட விரும்புகிறேன்.
அந்தப் புத்தகம் “நாம் அல்லது வரையறுக்கப்பட்ட நம் தேசம்’’ ஸறுந டிச டீரச சூயவiடிnhடிடின னநகiநேன (க்ஷhயசயவ ஞரடெiஉயவiடிளே, 1939, சுந. 1) மாதவ சதாசிவ கோல்வால்கர் எழுதிய புத்தகம். “நாம்’’ என்றால் யார்? இந்தியில் இதனை “ஸ்வராஜ்’’ என்கிறார்கள். அந்தப் புத்தகத்தின் முழுமையான சாரம் அதுதான். அந்தப் புத்தகத்தில் அவர், “இந்த நாட்டின் பூர்வகுடியினர் இந்துக்கள்தான், இந்துக்கள் மட்டுமே’’ என்று அவர் கூறியிருப்பார்.அதனையடுத்து, ஜெர்மனியின் மூன்றாவது ரெய்ச் குறித்து அவர் என்ன கூறியிருக்கிறார். “புராதன இன உணர்வு, ஜெர்மானியப் பழங்குடியினரை ஐரோப்பா முழுவதையுமே கைப்பற்றக்கூடிய அளவிற்கு செயலாற்ற வைத்திருக்கிறது. நவீன ஜெர்மனியில் மீண்டும் எழுச்சி உருவாக வைத்திருக்கிறது.
அதன் விளைவாக, வல்லமை பொருந்தியவர்களாக இருந்த மூதாதையர்களால் விட்டுச் செல்லப்பட்ட பாரம்பரியங்களின்படி முன்கூட்டியே உறுதிசெய்யப்பட்ட ஆசைகளைப் பின்பற்றி ஜெர்மானியர்கள் வெற்றிபெற்றார்கள்

.’’ஒரு கணம் இங்கே நான் சற்றே இடைவேளை விடுகிறேன்.இந்தியாவில் இதற்கு இணையாக அவர்கள் யாரைக் கொண்டு வருகிறார்கள் என்று பாருங்கள். இப்போது மீண்டும் கோல்வால்கரின் நூலில் உள்ள விவரங்களைத் தொடர்கிறேன்: “நாமும் அப்படி இருப்போம்; நம் இனத்தில் நாம் உற்பத்தி செய்த ஆன்மீக ஜாம்பவான்கள் இன்றையதினம் உலகில் வீர நடைபோட்டு பவனி வந்துகொண்டிருப்பதிலிருந்து நம் இன உணர்வு மீண்டும் ஒருமுறை எழுச்சி பெற்றிருக்கிறது என்பதைக் காண முடிகிறது”. (கோல்வால்கர், 1939, ப. 32).நமது நண்பர் வி.பி. சிங் பாதோர், பாஜக எம்பியாக இருந்தாலும், ஆர்எஸ்எஸ் இயக்கம் குறித்து அதிகம் தெரியாமல் இருக்கக்கூடும். இந்தப் புத்தகம் 1939இல் வெளிவந்தது. அதில் பக்கம் 35லிருந்து மேற்கோள் காட்டியுள்ளேன். இது பாரத் பிரகாசன் என்னும் பதிப்பகத்தாரால் 1939இல் வெளியிடப்பட்டது. இதன் இரண்டாவது பதிப்பு 1944இல் வெளிவந்தது. அது அப்புறப்படுத்தப்படாமல் இருக்குமாயின் நூலகங்களில் பார்க்கலாம். 

நாடாளுமன்ற நூலகத்திலும் இது கிடைக்கும். எங்குமே கிடைக்கவில்லையெனில் நான் ஒரு பிரதி உங்களுக்குத் தருகிறேன்.அந்த நூலில் கோல்வால்கர் மேலும் கூறுகிறார்:“ஜெர்மனி தன்னுடைய இனம் மற்றும் கலாச்சாரத்தின் தூய்மையை அழியாமல் காப்பதற்காக, தங்கள் நாட்டில் இருந்த யூத இனத்தை அழிக்கும் வேலையில் இறங்கியதன் மூலம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இனத்தைப் பற்றிப் பெருமை கொள்வது இங்கே தெளிவாகப் புலப்படுகிறது. இனங்கள் மற்றும் கலாச்சாரங்கள் ஆழமாக வேரூன்றும்போது ஒன்றுபோலாவதைத் தடுப்பது எந்த அளவுக்கு சாத்தியமில்லை என்பதை ஜெர்மனி காட்டியிருக்கிறது. இது இந்துஸ்தானில் உள்ள நமக்கு ஒரு சரியான படிப்பினை. இதனை நாம் கற்றுக்கொண்டு ஆதாயம் அடைய வேண்டும்.இப்படித்தான் கோல்வால்கர் சொல்கிறார்.பளிச்சென்று சொன்னால், கோல்வால்கர் சொல்வதன் அர்த்தம், “இந்து ராஷ்ட்ரம்’’ என்பதுதான்.

சமத்துவமும், சகோதரத்துவமும்

எனவேதான் கூறுகிறேன், டாக்டர் அம்பேத்கருக்கு உண்மையிலேயே அஞ்சலி செலுத்த வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், அவர் தன் உரையில் நிறைவாகக்கூறியதை நினைவுகூர்க. இனம் (உசநநன)குறித்து அவர் கூறியதை நான் மேற்கோள் காட்ட விரும்புகிறேன். “சமத்துவம் இல்லையேல், உங்களால் சுதந்திரத்தைப் பெற முடியாது. சகோதரத்துவம் இல்லையேல், உங்களால் சமத்துவத்தையோ, சுதந்திரத்தையோ பெற முடியாது. சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் இல்லையேல், உங்களால் சுதந்திரத்தைப் பெற முடியாது.’’இந்தியாவின் விடுதலை மற்றும் அதன் சுதந்திரத்தைக் கொண்டாட விரும்பினால், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் என்கிற இரு அம்சங்களிலும் சமரசம் செய்துகொள்ள முடியாது. ஆனால், சகிப்புத்தன்மையற்ற இன்றைய சூழ்நிலையில் மேற்கண்ட இரண்டும்தான் சமரசம் செய்துகொள்ளப்பட்டிருக்கிறது.

பிரசாத்தும் படேலும்

டாக்டர் ராஜேந்திர பிரசாத் கூறியதை மேற்கோள்காட்டி என் உரையை நிறைவு செய்கிறேன். அவர் வரைவு அரசமைப்புச் சட்டத்தில் கையெழுத்துப் போடும்போது இவ்வரிகளைக் குறிப்பிட்டார். அப்போது அவர் நாட்டின் குடியரசுத் தலைவர் அல்ல. அவர் ஜனவரி 26 அன்றுதான் குடியரசுத் தலைவர் ஆனார். அப்போது அவருக்கு முன் இந்நாட்டிலிருந்த கவர்னர் ஜெனரல் அவருக்குப் பதவிப் பிரமாணம் செய்ய முடியவில்லை. ஏனெனில் கவர்னர் ஜெனரல் என்பவர் பிரிட்டிஷாரால் நியமிக்கப்பட்டவர். எனவே, தலைமை நீதிபதி அழைக்கப்பட்டு, மைய மண்டபத்தில், குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். 

டாக்டர் ராஜேந்திர பிரசாத் இடைக்கால அரசாங்கத்திற்காகப் பதவிப் பிரமாணம் மேற்கொண்ட பிறகு, இந்த அரசமைப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டு, அதன்பின்னர், மாநிலங்களின் எல்லைகள் வகுக்கப்பட்டு, புதிதாகத் தேர்தல்கள் நடைபெற்றன. 1952இல் தேர்தல் நடைபெற்றது.

இன்றைய தினம், சர்தார் வல்லபாய் பட்டேல் இந்தியாவின் முதல் பிரதமராவது மறுக்கப்பட்டதாக, ஒருசாரார் கூறிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். துரதிர்ஷ்டவசமாக சர்தார் பட்டேல் 1950இலேயே இறந்துவிட்டார். ஆனால் தேர்தல் நடந்ததோ 1952. இது புரிந்து கொள்ளப்படுகிறதா? பிள்ளையார் போன்று சிலர் மூலமாக மந்திர தந்திரங்கள் செய்து, இறந்தவரைப் பிழைக்க வைத்து மீளவும் கொண்டு வந்திருந்தார்களானால், அவரைப் பிரதமராக்கி இருந்திருக்கலாம். அப்படி எதுவும் நடக்கவில்லை.

பிரசாத் என்ன சொன்னார்?

அப்போது டாக்டர் ராஜேந்திர பிரசாத் இந்த அரசமைப்புச் சட்டத்தை வரவேற்றுக் கூறியதாவது: “அரசமைப்புச் சட்டம் என்பது ஓர் எந்திரம் போன்று, ஓர் உயிரற்ற பொருள்தான். இதனைக் கட்டுப்படுத்துபவர்கள், இதனைச் செயல்படுத்துபவர்கள் மூலம்தான் இது உயிர்பெறுகிறது. நாட்டின் நலனில் அக்கறையுள்ள நேர்மையான மனிதர்களே இன்றைய தினம் இந்தியாவுக்குத் தேவை.’’டாக்டர் ராஜேந்திர பிரசாத்தும், டாக்டர் அம்பேத்கரும் “மனிதர்கள்’’ (‘அநn’) என்று கூறியபோது, அவர்கள் ஆண்களை மட்டுமல்ல, பெண்களையும் சேர்த்துத்தான். பெண்களும் சுதந்திர இயக்கத்தின் அங்கமாக இருந்தார்கள்.“நம்முடைய வாழ்க்கையில் நம்மிடையே பிளவு உண்டாக்கக்கூடிய விதத்தில் எண்ணற்ற சக்திகள் செயல்படலாம்’’ என்று 1949 நவம்பர் 26 அன்று டாக்டர் ராஜேந்திர பிரசாத் கூறினார். 

அவர் மேலும், “நாம் மதரீதியாக, இன ரீதியாக, சாதி ரீதியாக, மொழி ரீதியாக, மாகாண ரீதியாக மற்றும் பல விதங்களிலும் வேறுபாடுகளைப் பெற்றிருக்கிறோம். இத்தகு சமயத்தில் ஆங்காங்கே தங்கள் பகுதிகளில் மேற்கண்ட வேறுபாடுகளை உயர்த்திப்பிடிக்கக்கூடிய நபர்களுக்கு எதிராகச் செயல்பட்டு, நாட்டின் நலனுக்காகத் தியாகம் செய்யக்கூடிய, நேர்மையான வலுவான மனிதர்கள், தொலைநோக்குப் பார்வையுடைய மனிதர்களே இன்று நமக்குத் தேவை. அத்தகைய மனிதர்களை அபரிமிதமாக இந்த நாடு உருவாக்கும் என்று நாம் நம்புவோமாக!’’

இன்றையதினம் நாம் என்ன பார்த்துக் கொண்டிருக்கிறோம்? அத்தகைய மனிதர்களை அபரிமிதமாக நம்மால் உருவாக்க முடியுமா? முடியாது எனில், அதனைச் சரிசெய்துகொள்ள முயல்வோம்.

1 comment:

  1. ஆழமான கட்டுரை....தோழர் உங்களிடம் தனிப்பட்டமுறையில் ஒன்று சொல்ல விரும்புகிறென்...
    இங்கே நம் கொள்கைகளையும், சித்தாந்தங்களையும் மக்களிடம் சரியாக கொண்டு சேர்க்கவில்லையோ என எண்ணுகிறேன். மக்களுக்காக எல்லாம் செய்யும் நாம் மக்கள் மொழியில் அல்லது அவர்களுக்கு புரியும் வகையில் செய்யவில்லையோ என தோன்றுகிறது.. விலக்காய் சில தோழர்கள் இருக்கலாம்..ஜீவாவைப்போல...

    ReplyDelete