Friday, February 3, 2023

பாலிசிதாரர்கள் பணம் பாதுகாப்பாய் . . .

 



 

ரீடிஃப்.காம் இணைய இதழிற்கு அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் தோழர் அமானுல்லாகான் அளித்த பேட்டியின் தமிழாக்கம் கீழே.

 


கேள்வி : எல்.ஐ.சி தனது ஒட்டு மொத்த சொத்து மதிப்பில் 1 % க்கும் குறைவாகத்தான் அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ளதாக கூறுகிறது. இருப்பினும் இத்தொகை 35,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகவே உள்ளது. இது மக்களுக்கு கவலை அளிக்காதா?

 

பதில் : இதற்கு இரண்டு பகுதிகளாக நான் பதிலளிக்கிறேன். அரசு கார்ப்பரேட் கூட்டுக் களவாணித்தனத்திற்கு மிகவும் கச்சிதமான உதாரணம் அதானி. ஒரு அமைப்பாக இதில் எங்களுக்கு எந்த ஐயமும் இல்லை. ஹிண்டர்பர்க் அறிக்கை பல அடிப்படையான, முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது என்பதையும் நாங்கள் ஏற்கிறோம்.

 

அரசு விசாரணைக்கு உத்தரவிட்டு உண்மைகளை கண்டறிய வேண்டும் என்று எங்கள் அமைப்பு விரும்புகிறது. அது இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது.

 

எல்.ஐ.சி யில் முதலீடு செய்துள்ளவர்களுக்கு நம்பிக்கை அளிக்க நியாயமான விசாரணை அவசியம் தேவை.

 

பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் செபி எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை என்பதை கவலையோடு பார்க்கிறோம்.செபியும் கூட உண்மைகளை கண்டறிய வேண்டும்.

 

அதானியின் வளர்ச்சிக்காக கடைபிடிக்க வழிமுறைகளை நாங்கள் எதிர்க்கிறோம்.

 

அரசியல்வாதிகளின் ஆதரவோடு ஒரு தனி நபர் வளர முடியும் என்பதற்கு அதானி ஒரு தெளிவான  உதாரணம்.

 

எல்.ஐ.சி மீது அதானி தாக்கம் இரண்டாவது அம்சம்

 

ஹிண்டன்பர்க் அறிக்கை மீது தங்களுக்கு சில கவலைகள் உள்ளதென்பதை எல்.ஐ.சி தெளிவாகக் கூறிவிட்டது.

 

மிகப் பெரும் முதலீட்டாளர் என்ற முறையில் ஹிண்டர்பர்கிடமும் சில கண்டறிதல் மேலாக அதானியிடமும் கேள்வி கேட்கும் உரிமை எல்.ஐ.சி க்கு உள்ளது.

 

எல்.ஐ.சி யின் இந்த நிலைப்பாட்டை நாங்கள் வரவேற்கிறோம்.

 

எல்.ஐ.சி யின் முதலீட்டுக் கொள்கைப்படி பாதுகாப்பான முதலீடுகளான அரசுப் பத்திரங்கள், அரசின் கடன் பத்திரங்கள் ஆகியவற்றொ 80 % முதலீடு செய்யப்படும் 

 

மீதமுள்ள 20 % பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்படும். நீண்ட கால சேமிப்புக்களில்தான் எல்.ஐ.சி முதலீடு செய்யும்.

 

பாலிசிதாரர்களுக்கு நீண்ட கால சேமிப்பின் வழியாக பயன் கிட்டக்கூட்டிய விதத்தில்தான் எல்.ஐ.சி யின் முதலீடு அமைந்திருக்கும். எல்.ஐ.சி யிடம் ஒரு முதலீட்டுக்குழு உள்ளது. தீவிரமான பரிசீலனைக்குப் பிறகே முடிவுகள் எடுக்கப்படும்.

 

அதானி குழுமத்தில் செய்யப்பட்ட முதலீடு தொடர்பாக அனைவரும் சந்தை மதிப்பால் நிகழ்ந்திருக்கக் கூடிய (Notional Loss ) இழப்பைப் பற்றித்தான் பேசுகிறார்களே தவிர, நிஜமான இழப்பைப் பற்றி பேசுவதில்லை.

 

எல்.ஐ.சி அதானியின் பங்குகளை சந்தையில் விற்காததால் அதற்கு நிஜமான இழப்பு எதுவும் ஏற்படவில்லை.

 

முதலீட்டின் அளவு 35,000 கோடி என்பதால் அதானி பங்குகள் வாயிலாக சந்தை மதிப்பில் எல்.ஐ.சி லாபமும் ஈட்டியுள்ளது.  இப்போது கூட அதன் மதிப்பு 56,000 கோடி ரூபாய். எல்.ஐ.சி க்கு லாபமும் கிடையாது, நஷ்டமும் கிடையாது. அவை எல்லாம் வெறும் சந்தை மதிப்புதான்.

 

எல்.ஐ.சி லாபமடைந்ததா, நஷ்டமடைந்ததா என்ற கேள்வியே எல்.ஐ.சி சந்தையில் பங்குகளை விற்கும் போதுதான் வரும். தற்போதைக்கு எல்லாம் காகிதக் கணக்குகள்தான்.

 

கேள்வி: நாம் முன்பு விவாதித்த போது எல்.ஐ.சி பங்குகளை விற்கும் அரைன் முடிவு, எல்.ஐ.சி மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை பாதித்தது என்றீர்கள்.  இச்சூழலும் மக்களுக்கு எல்.ஐ.சி மீதுள்ள நம்பிக்கையை பாதிக்கும் என்று கருதுகிறீர்களா?

 

பதில் :  இங்கே இரண்டு பிரச்சினைகள் உள்ளது.  முதலீடு செய்ய எல்.ஐ.சி யிடம் ஏராளமான உபரி உள்ளது. ஒவ்வொரு வருடமும் எல்.ஐ.சி நான்கரை லட்சம் கோடி ரூபாயிலிருந்து ஐந்து லட்சம் கோடி ரூபாய் வரை உபரி ஈட்டுகிறது. இதனை எங்கே முதலீடு செய்வீர்கள்? நீங்கள் பணத்தை வெறுமனே வைத்திருக்க முடியாது.

 

அதை நீங்கள் வெறுமனே வைத்திருந்தால் பாலிசிதாரர்களுக்கு லாபம் தர முடியாது. அதனால் முதலீடு செய்ய வேண்டும். பொறுப்போடும் சாதுர்யத்தோடும் முதலீடு செய்ய வேண்டும்.

 

கேள்வி : இவ்வளவு பெரிய தொகையை ஒரே நிறுவனத்தில் முதலீடு செய்வது புத்திசாலித்தனமானதா?

 

பதில் : ஒட்டு மொத்தமாக பங்குச்சந்தையில் செய்யப்பட்ட முதலீட்டில் பார்த்தீர்கள் என்றால் அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்டது  7 % அளவில்தான் இருக்கிறது. ரிலையன்ஸ் குழுமத்தில் இன்னும் கூடுதலாக, பொதுத்துறை வங்கிகளில் இதை விட அதிகமாகவே முதலீடு செய்யப் பட்டுள்ளது. 35,000 கோடி ரூபாய் என்பது பெரிதாக தெரிந்தாலும் எல்.ஐ.சி ஈட்டுகிற உபரியை ஒப்பிடுகையில் சிறிய தொகைதான்.

 

எல்.ஐ.சி யின் முதலீடு குறித்து இதற்கு முன்பும் பல முறை பொது வெளியில் விவாதத்திற்கு வந்துள்ளது.

 

ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் பங்குகளை எல்.ஐ.சி வாங்கும் போது அரசின் சுமையை குறைக்கவே எல்.ஐ.சி பணத்தை கொட்டுகிறது என்று விமர்சனம் எழுந்தது. ஆனால் ஓ.என்.ஜி.சி பங்குகள் வாயிலாக எல்.ஐ.சி நல்ல லாபத்தை சம்பாதித்தது.

 

ஐ.டி.பி.ஐ வங்கியின் பங்குகளை எல்.ஐ.சி வாங்கும் போதும் அது ஒரு நலிவடைந்த வங்கி என்பதால் கடுமையான விமர்சனங்கள் வந்தன. ஆனால் ஐ.டி.பி.ஐ வங்கி மூலமும் எல்.ஐ.சி லாபமீட்டியது.

 

எல்.ஐ.சி க்கும்  மற்ற முதலீட்டாளர்களுக்குமான பெரிய வேறுபாடு என்னவென்றால் எல்.ஐ.சி ஒரு நீண்ட கால முதலீட்டாளர். அதே நேரம்  வங்கிகளால் நீண்ட கால முதலீடுகளை மேற்கொள்ள முடியாது.

 

பாலிசிதாரர்களின் பணம் மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்று நான் கூறுகிறேன். எங்களின் சால்வென்சி மார்ஜின் எவ்வளவு இருக்க வேண்டுமோ அதை விட அதிகமாகவே உள்ளது. எல்.ஐ.சி அளிக்க வேண்டிய தொகைகளை விட சொத்துக்கள் அதிகமாகவே உள்ளது. இங்கே நான் சந்தை மதிப்பை சொல்லவில்லை. ஆவணங்களில் சொல்லப்பட்ட மதிப்பின்படி  சொல்;கிறேன்.

 

அதனால் மக்கள் பதற்றமடைய வேண்டிய அவசியமில்லை. அவர்களின் பணம் பத்திரமாகவே உள்ளது.

 

கேள்வி : அதானி குழுமத்தில் முதலீடு செய்வதென்ற முடிவு பொருளாதார முடிவென்பதை விட  அது  அரசியல் முடிவுதானே?

 

பதில் : எல்.ஐ.சி யும் முதலாளித்துவத்தை வளர்க்க பயன்படும் ஒரு நிறுவனம்தான். ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு நிறுவனம் வேறு.  அதனால் அதனை  தங்களின்  ஆதாயங்களுக்காக பயன்படுத்தும்.

 

ஆனால் ஒரு தொழிற்சங்கமாக, பொது அமைப்பாக, எல்.ஐ.சி க்கு கிடைக்கிற லாபமெல்லாம் அது சமூகத்தில் உள்ள பெரும்பாலானருக்கு சென்றடைவதை உறுதி செய்யும் பொறுப்பு எங்களுக்கு உள்ளது. பாலிசிதாரர்களின் ப்ணத்திற்கும் முழுமையான பாதுகாப்பு வேண்டும்.

 

கேள்வி : அதானி குழும பங்கு வீழ்ச்சிக்கு பொருளாதாரம் ஆற்றிய எதிர்வினையை   பார்க்கையில் ஒரு குழுமத்தால் இந்தியப் பொருளாதாரத்தையே  பாதிக்க முடியும் என்பது ஏதோ ஒரு அபாய அறிவிப்பு போல அமைந்துள்ளதல்லவா?

 

பதில் : ஆம், அபாயகரமான  தருணம்தான்.  ஒன்றுக்கும் மேற்பட்ட காரணங்களால். இந்தியப் பொருளாதாரத்தின் கேந்திரமான கட்டமைப்பு திட்டங்களான துறைமுகம், விமான நிலையம் ஆகியவை ஒரு தனி நபரால் வாங்கப்படுவதென்பது தவறானது.

 

ஆட்சி நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை என்பதே இல்லை. இக்கேள்வியைத்தான் அடிப்படையாக எழுப்பிட வேண்டும். இல்லேள்வியை எழுப்பிடுமாறு   எல்.ஐ.சி  நிர்வாகத்திடமும்  கூறியுள்ளோம். எல்.ஐ.சி மட்டுமல்ல அனைவரும் கவலைப்பட வேண்டிய விஷயம் இது.

 

பொருளாதாரத்தின் ஏகபோகத்தன்மை உருவாகி வருவது பற்றி ஒவ்வொரு இந்தியரும் கவலைப்பட வேண்டும். ஏனென்றால் இப்படிப்பட்ட பொருளாதார மாதிரியால்தான் நாட்டில் மிகப் பெரிய அசமத்துவம் ஏற்பட்டு வருகிற்து.

 

தமிழாக்கம் & வெளியீடு

 

காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்,

வேலூர் கோட்டம்

 

No comments:

Post a Comment