Sunday, August 5, 2012

இவனைப் பார் ! கற்றுக் கொள் !! நாமெல்லாம் வெட்கப்படுவோம்






நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் தனது  19 வது ஒலிம்பிக்
தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார். மனிதனா, மீனா என்று
சந்தேகம் வருகிறது.

இந்த ஒலிம்பிக்கில் என்னை மிகவும் ஈர்த்தவர் தென் ஆப்பிரிக்க
ஓட்டப் பந்தய வீரர் ஆஸ்கார் பிஸ்டோரியஸ். நானூறு 
மீட்டர் அரை இறுதிக்கு அவர் தகுதி பெற்றுள்ளார்.

என்ன சிறப்பு அவரிடம்?

பிறக்கும் போதே காலில் குறைபாடு உள்ளவர். ஒரு வயது
நிறைவடையும் முன்பே இரு கால்களும் மருத்துவ சிகிச்சை
மூலம் துண்டிக்கப்பட்டது. செயற்கைக் கால்கள் மூலம்
ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் முதல் வீரர்
இவர்தான்.

தகுதிச்சுற்று போட்டிகளில் வெற்றி பெற்று இப்போது
அரை இறுதிக்கு தயாராகி விட்டார். 

உடலில் உள்ள குறைபாடுகளை வென்று தன்னம்பிக்கையோடு
வாழும் மனிதர்கள் நிறையவே உள்ளனர். இவர் அவர்களில்
மிகச் சிறந்தவர்கள். 

செயற்கைக் காலோடு ஒலிம்பிக்கில் ஓடுவது என்பது அவ்வளவு
சாதாரணமானதா என்ன! மகத்தான சாதனை.. மகத்தான மனிதன்...

மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே
இவர் ஒரு சிறந்த முன்னுதாரணம். சாதாரணப் பிரச்சினைக்கே
கலங்கிப் போகும் சாமானிய மனிதர்களான நாமெல்லாம்
அவரைப் பார்த்து வெட்கப்பட வேண்டும்.

தங்கம் வெல்லுங்கள் ஆஸ்கார், வாழ்த்துக்கள்.

1 comment: