Monday, March 28, 2011

காங்கிரஸ் கட்சியும் பாரதீய ஜனதாவும் கூட்டுக் களவாணிகள்

சமீப காலமாக காங்கிரஸ் கட்சியும் பாரதீய ஜனதாவும் மிக மோசமாக
சண்டையிட்டுக் கொள்கின்றார்கள். கடுமையாக மோதுகின்றார்கள். 
மத்தியரசிற்கு பாரதீய ஜனதா கட்சி ஒவ்வொரு நாளும் அதிலும் 
நாடாளுமன்றத்தில்  ஏதாவது ஒரு தலைவலி கொடுத்துக் கொண்டே 
இருக்கிறது. 

நாளிதழ்களை  படிப்பவர்களுக்கும்  தொலைக்காட்சியைப் பார்ப்பவர்களுக்கும்  இப்படி ஒரு பிம்பம் ஏற்பட்டிருக்கும். ஆடுகளம் 
சேவல் சண்டையை விட இது உக்கிரமாக இருக்கிறதே என்றும் தோன்றும்.

ஆனால்  சத்தமே இல்லாமல்  இரு கட்சிகளும் கை கோர்த்துக் கொண்டு 
உழைப்பாளி மக்கள் முதுகில் குத்தியுள்ளதை எத்தனை பேர் அறிவார்கள்? 

பென்ஷன் நிதி வளர்ச்சி மற்றும் கட்டுப்பாட்டு ஆணைய மசோதாவை மக்களவையில்  24 ம் தேதியன்று  அரசு தாக்கல் செய்தது. தாக்கல் 
செய்யலாமா, வேண்டாமா என்பதற்கு வாக்கெடுப்பு வேண்டும் என 
மார்க்சிஸ்ட் கட்சி கேட்க  வாக்கெடுப்பு நடந்தது. அன்றைய அவையில் 
பெரும்பாலான காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் இல்லை. சோனியா காந்தி, பிரணாப் முகர்ஜி,மன்மோகன்சிங்  போன்றவர்கள் கூட இல்லை.

அன்று அவையில் உள்ள ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 
எண்ணிக்கையை கணக்கில் எடுத்தால் மசோதா தாக்கல் செய்வது 
வாக்கெடுப்பில் தோற்றுப் போயிருக்கும். 

ஆனால் நடந்தது என்ன? 

பாரதீய ஜனதா கட்சியின் 25  உறுப்பினர்கள்  ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.  மசோதா தாக்கலானது. 

புதிய பென்ஷன் திட்டம் என்ற உழைப்பாளி மக்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகின்ற திட்டம் , சர்வதேச பொருளாதார நெருக்கடியில்  அமெரிக்க தொழிலாளர்களின் சேமிப்பான ஒன்றரை 
டிரில்லியன் டாலரை காற்றில் மறைய வைத்த திட்டம், தொழிலாளர்களின்  சேமிப்பை பங்குச்சந்தையில் முதலீடு செய்து 
சர்வ தேச நிதிமூலதன திமிங்களின் வேட்டைக்கு உட்படுத்துகின்ற 
ஒரு திட்டம். 

இதை அமுலாக்குவதில்  இரண்டு கட்சிகளும் ஒன்றாகவே உள்ளது. இந்திய, பன்னாட்டு முதலாளிகளின்  எடுபிடிகல்தான் இவர்கள் என்பது
மீண்டும் நிரூபணமாகியுள்ளது.  பாஜக கொண்டு வந்த ஐ.ஆர். டி.ஏ மசோதாவை காங்கிரஸ் எப்படி காப்பாற்றியது என்பதை  எனது 
நூறாவது பதிவான 'தலைவருக்கு ஓசிச்சோறு ' வில் விரிவாகவே 
எழுதியிருந்தேன். 

மக்களை கொள்ளையடிப்பதில் இரு கட்சிகளுமே கூட்டுக்   
களவாணிகள் தான்.

   

 

No comments:

Post a Comment