Tuesday, November 7, 2017

அவர்கள் இல்லாமல் இருந்திருந்தால்??????




 ஆஹாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி என்று மகாகவி பாரதியால் பாடப்பட்ட ரஷ்யப்புரட்சியின் நூற்றாண்டு தினம் இன்று.

ரஷ்யப்புரட்சியினை ஏன் நினைவு கொள்ள வேண்டும் என்று வழக்கறிஞர் தோழர் பிரதாபன் ஜெயராமன் சுருக்கமாக  எழுதியதை முதலில் பகிர்ந்து கொள்கிறேன். 



#சோவியத்_புரட்சி_அப்படி_என்ன_தான்_சாதித்தது?
☆☆☆புரட்சி☆☆☆


☆ரஷ்ய சமூகம் தன் புரட்சியின் மூலம் அப்படி என்ன தான் செய்தது.. வாருங்கள் பார்ப்போம்...


☆உலகின் முதல் பட்டினியற்ற தேசத்தை உருவாக்கிக்காட்டியது. 


☆உலகின் முதல் கல்லாதோர் அற்ற தேசத்தை உருவாக்கிக் காட்டியது.


☆முழுக்கல்வியும் இலவசமாக்கப்பட்டது.


☆உயர் கல்வி வரை கட்டாயமாக்கப்பட்டது. 


☆சுகாதாரத்திற்கு ஆகும் மொத்த செலவையும் அரசே ஏற்றது.


☆தொழிலாளர்களின் வேலை நேரம் 7 மணி நேரமாக்கப்பட்டது.


☆24 மணிநேரம் பணியாற்ற வேண்டிய அத்தியாவசியத் தொழிலாளர்களின் வேலை நேரம் 6 மணி நேரமாக்கப்பட்டது. 


☆தவிர்க்க முடியாத காலகட்டத்தை தவிர கூடுதல் நேர உழைப்பு தடை செய்யப்பட்டது.


☆தொழிலாளர்களுக்கு இதர விடுமுறை இல்லாமல்,ஆண்டிற்கு ஒரு மாதம் முழு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டது. 


☆விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்வோருக்கான மானியத்துடன் கூடிய உல்லாச விடுதிகள் கொடுக்கப்பட்டன. 


☆ஆண்களுக்கு 60 வயதும், பெண்களுக்கு 55 வயதும் ஓய்வு பெறும் வயதாகவும், ஓய்வு பெறுவோர்க்கும், உழைக்க இயலாதவர்களுக்கும் ஓய்வூதியமாக முழுச்சம்பளமும் வழங்கப்பட்டது. 


☆ஓய்வூதியத்தை உலகமே அறிந்தது ரஷ்ய புரட்சியின் விளைவாகத்தான்.


☆எல்லோருக்கும் குடியிருப்பு உறுதி செய்யப்பட்ட முதல் நாடும் ரஷ்யா தான். 


☆வீட்டு வாடகை, எரிபொருள், மின்சாரம், தண்ணீர் உட்பட எல்லாவற்றிற்கும் சேர்த்தே ஊதியத்தில் 3 சதவீதம் மட்டுமே பெறப்பட்டது. 


☆பெண்களுக்கு பேறுகால விடுப்பு நான்கு மாதங்கள் முழு ஊதியத்துடன் வழங்கப் பட்டது. 


☆தேவைப்படின் ஓராண்டு காலம் வரை பாதி ஊதியத்துடன் கூடிய விடுப்பும் வழங்கப்பட்டது. 


☆தாய்ப்பால் கொடுக்கும் காலம் வரைக்கும் பெண்களுக்கு வாரத்தில் 6 நாட்களோ, நாள் ஒன்றுக்கு 7மணி நேரமோ உழைக்க வேண்டும் என்கிற கட்டாயமில்லை. 


☆எல்லா குழந்தைகளுக்கும் 16 வயது வரையிலும், தனித்து வாழும் பெண்கள் வளர்க்கும் குழந்தைகளுக்கு 18 வயது வரையிலும் அரசு மானியம் வழங்கியது. 


☆எல்லோருக்கும் வேலை வழங்கிய முதல் நாடும் ரஷ்யா தான்.


☆இன்னும் இதுபோன்ற பட்டியல் நீண்டுகொண்டே போகும். இவ்வளவு ஏன், இன்றைக்கு நான்  அனுபவிக்கிற பல உரிமைகளும், தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள பல உரிமைகளும் ரஷ்ய புரட்சியின் மூலமாகவே இந்த உலகம் அறிந்தது, பெற்றது. 


☆சூரிய அஸ்தமனமே இல்லாத பெரும் செல்வம் படைத்த பிரிட்டிஷ் சாம்ராஜியமே, தன் சொந்த நாட்டு மக்களுக்கு அறிமுகம் கூட செய்யாத பல நலத்திட்டங்களை அன்றைக்கு வறுமையிலிருந்து உருவான ரஷ்யாவின் புரட்சிகர அரசாங்கம் செய்துகாட்டியது. 


☆காரணம் செல்வம் ஒரே இடத்தில் குவியாமல், எல்லோருக்கும் நாட்டின் மொத்த செல்வமும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்கிற உயரிய பொதுவுடைமை கருத்தாலேயே அது சாத்தியமானது.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை “இன்று ஐரோப்பிய நாடுகள் அனைத்தையும் கம்யூனிஸம் எனும் பூதம் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது” என்றுதான் பேராசான்கள்  மார்க்ஸூம் ஏங்கல்ஸூம் துவக்கி இருப்பியிருப்பார்கள்.


ரஷ்யப்புரட்சிக்குப் பின்பு அவர்களை அந்த பூதம் இன்னும் அதிகமாக ஆட்டி வைத்தது. தங்கள் நாட்டு தொழிலாளர்கள் சிவப்பின் பக்கம் சென்று விடக்கூடாது என்று “நல அரசு" (Welfare State) என்ற அம்சத்தை கொண்டு வந்தார்கள். 

அது ஒரு புறம் இருக்கட்டும், ரஷ்யப்புரட்சியின் விளைவாக உருவான சோவியத் யூனியன் இல்லாமல் இருந்திருந்தால் இந்திய நிலைமை என்ன ஆகியிருக்கும்?

இந்திய விடுதலைக்குப் பின்பு இந்தியாவின் தொழில் முன்னேற்றத்திற்கு உதவ எந்த ஒரு முதலாளித்துவ நாடும் முன்வராத போது நமக்கு கை கொடுத்தது சோவியத் யூனியன் மட்டுமே.

ரூர்கேலா, பிலாய் போன்ற இடங்களில் உருக்காலை அமைப்பதில் தொடங்கி அனல் மின் நிலையங்கள் அமைப்பது வரை நமக்கு உதவியது சோவியத் யூனியன் மட்டுமே. அவர்கள் உதவவில்லை என்றால் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமே கிடையாது. பெட்ரோலிய துரப்பண ஆராய்ச்சியும் அவர்களது ஒத்துழைப்பால்தான் நிகழ்ந்தது. 

கட்டமைப்புத்துறையில் இந்தியாவின் வளர்ச்சி இருக்கிறது என்றால் அது சோவியத் யூனியன் நமக்கு அளித்த ஒத்துழைப்பால் மட்டுமே.

இன்று இந்தியாவின் பெருமை நமது ஐ.எஸ்.ஆர்.ஓ. இந்திய விண்வெளி ஆராய்ச்சியும் சோவியத் யூனியனின் கொடையே. அவர்கள் கொடுத்த அடித்தளத்திலிருந்துதான் இந்திய சாதனைகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் ராகேஷ் ஷர்மா  என்பது அனைவருக்கும் தெரியும். அவர் சென்றது சோவியத் யூனியனின் விண்கலத்தில்தான் என்பது எத்தனை பேருக்கு நினைவில் உள்ளது?

வங்க தேசப் போரின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது ஏழாவது கடற்படையை அனுப்பியபோது சோவியத் யூனியனின் கடற்படையும் தனது கப்பல்களை அனுப்பியதால் அமெரிக்கா பின் வாங்கியது. 

எனவே சோவியத் யூனியன் இல்லாமல் இருந்திருந்தால் இந்தியா இப்போது இருப்பதை விட மிகவும் பின் தங்கிய நிலையில்தான் இருந்திருக்கும் என்பதுதான் யதார்த்தம். 

உழைக்கும் வர்க்கத்தால் ஆட்சியை கைப்பற்ற முடியும் என்பதை முதன் முதலில் நிரூபித்த ரஷ்யப் புரட்சி வாழிய வாழியவே!!!

2 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. Sorry. I could agree with your view, but not the language

      Delete