Wednesday, June 7, 2017

சொல்வதைக் கேட்காத கண்கள்





வேலூர் மக்கான் முனையில் ஒரு பலகை. அங்கே நேரத்தை காண்பிக்கும் ஒரு எலக்ட்ரானிக் கடிகாரம். கூடவே இன்னொரு தகவலையும் சொல்லும். அந்த நொடியின் வெப்ப அளவை காண்பிக்கும் கருவியும் உண்டு.

அந்த பகுதியை கடக்கும் போதெல்லாம் எவ்வளவு வெப்பம் என்று பார்க்காதே என்று ஒவ்வொரு முறையும் மனது சொல்லும், ஆனால் அந்த மனதின் பேச்சை கண்கள் எப்போதும் கேட்கவே கேட்காது. அனிச்சை செயலாய் கண்கள் அங்கேதான் செல்லும். ஏற்கனவே வெப்பத்தால் தகித்துக் கொண்டிருக்கும் உடல், 104, 106 என்று வெப்ப அளவை பார்த்த உடன் இன்னும் அதிகமாக கொதிக்கத் தொடங்கும்.

நேற்றும் அப்படித்தான் விழுப்புரத்திற்கு ஒரு கூட்டத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. இரண்டு மணிக்கு புகை வண்டியை பிடிக்க ஒரு தோழரின் வாகனத்தின் பின்னே அமர்ந்து வேகமாகச் செல்கையில் கூட கண்கள் வழக்கம் போல அதிகப்பிரசங்கித்தனமாக இப்போது வெப்பத்தின் அளவு என்ன என்று பார்க்கத்தான் செய்தது.

103 டிகிரி என்பது ஒரு சோர்வை உடனடியாக அளித்தது. அந்த சோர்வு விழுப்புரம் போகும் வரை கூடவே தொடர்ந்தது என்பதும் யதார்த்தம். விழுப்புரத்தில் கூட்டம் முடிந்து மீண்டும் புகை வண்டியை பிடிக்க ரயில் நிலையத்திற்கு புறப்பட்டபோது மழைத்தூறல்கள் கனமாகவே விழுந்து கொண்டிருந்தன. அலுவலகத்திற்கு மிக அருகாமையிலிருக்கிற ரயில் நிலையத்தை அடைந்த உடனேயே அந்த தூறல்களும் விடை பெற்று சென்று விட்டன.

புழுக்கத்தோடுதான் மீண்டும் பயணத்தை தொடர வேண்டுமோ என்ற மனதில் ஏக்கக்குரல் மழைக்கு கேட்டு விட்டதோ என்னமோ தெரியவில்லை, ரயில் புறப்பட்டது, கூடவே மழையும் தொடங்கியது. ஏழே முக்காலுக்கு தொடங்கிய மழை இரவு பதினொன்றரை மணிக்கு வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தை அடையும் வரையில் கூட நிற்கவில்லை.

ஆட்டோவில் வீட்டிற்கு வந்தாலும் மழைச்சாறல்கள் இரு புறமாக மேலே விழுந்து கொண்டே இருந்தது. உடல் நனைய நனைய உள்ளமும் குளிர்ந்து கொண்டே இருந்தது. ஏதோ ஊட்டி, கொடைக்கானல் போல வேலூரும் குளிர்ச்சியாகத்தான் இருந்தது. மக்கான் முனை வந்தது. இப்போது மனதே கண்களுக்கு ஆணையிட்டது. வெப்பத்தின் அளவைப்பார் என்று சொன்னது.

80 டிகிரி பாரன் ஹீட் என்று அது காண்பித்தபோது வேலூர் இன்னும் இனிமையாகத் தெரிந்தது.

பி.கு : காலையில் எழுந்து வீட்டை விட்டு வெளியே வந்தால் முந்தைய தினத்தில் மாலை முதல் இரவு வரை மழை பெய்த சுவடே சிறிதும் இல்லாமல், குளிர்ச்சியான வேலூர் என்பது ஏதோ கனவில் நிகழ்ந்ததோ என்று  கேள்வி எழுப்பும் அளவிற்கு சூரியன் தனது உக்கிரமான கிரணங்களுடன் தாக்கிக் கொண்டிருந்தான்.  

2 comments:


  1. பீதி!
    பிளாஸ்டிக் அரிசி வரத்து அதிகரித்ததால்
    ஆந்திரா, தெலுங்கானாவில் குவியும் புகார்கள்


    aiya idhu pathiym konjam
    visarichu yeludhunga!!

    ReplyDelete
    Replies
    1. ஆலோசனை சொல்றதுக்கு முன்னாடி நீங்க யாருன்னு சொல்லுங்க

      Delete