Thursday, September 28, 2023

பிள்ளையாரை அவமானப்படுத்துவது யார்?

 


கடந்த சனியும் ஞாயிறும் கள்ளக்குறிச்சியில் கோட்ட மாநாடு. வெள்ளிக்கிழமை மாலை கள்ளக்குறிச்சிக்கு சென்று கொண்டிருந்தோம். பலத்த மழை காரணமாக மெதுவாகவே நகர்ந்து கொண்டிருந்தது மணலூர்பேட்டையை தாண்டியதும் ஓட்டுனர் பிரேக் போட்டார்.

 சாலை முழுதும் காவலர்கள் குழுமியிருந்தார்கள். காரின் உள்ளேயே அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

 ஒரு குட்டி யானை வண்டியிலிருந்து ஒரு பெரிய பிள்ளையார் சிலையை அப்படியே சாலையில் தூக்கி வீசினார்கள். பிறகு சாலையிலேயே தரதர என்று இழுத்துச் சென்று பக்கத்தில் உள்ள ஒரு நீர்நிலையில் (அது குளமா, ஏரியா என்று அந்த இருட்டில் சரியாக தெரியவில்லை)   மீண்டும் வீசினார்கள். அங்கே இன்னும் சில வினாயகர் சிலைகளும் உடைந்த நிலையில் இருந்தது என்பதை அப்போது தோன்றிய மின்னலின் வெளிச்சத்தில் பார்க்க முடிந்தது.

 வினாயகர் சிலைகளை எல்லா இடங்களிலும் இப்படித்தான்  அலட்சியமாக கையாளுகிறார்கள். சென்னை கடற்கரையில் ஒதுங்கிய சிலைகளின் சிதிலங்களே அதற்கு சாட்சி (முகப்பில் உள்ள படம்)  இதற்கு ஒரு விளக்கமும் கொடுக்கிறார்கள் சங்கிகள். பந்தலில் வைத்து பூஜை செய்த பிறகுதான் அந்த பிள்ளையாருக்கு சக்தி வருமென்றும்  கடைசி ஆரத்தி காண்பித்த பின்பு அந்த சக்தி போய்விடும். அப்போது வெறும் பொம்மைதான் என்றும் சொல்கிறார்கள்.

 


அதாவது இவர்கள் பூஜிக்கும் கடவுளுக்கு சக்தி கொடுக்கின்ற, பிறகு அந்த சக்தியை பறிக்கின்ற அளவிற்கு வல்லமை இவர்களுக்குத்தான் உண்டு. (சனாதன தர்மத்தின் பிரிவினை புத்தி பற்றி அந்த சங்கி கொடுத்துள்ள க்ளூவின் அடிப்படையில் அது என்னவென்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்)

 சரி, வெறும் பொம்மை என்றே வைத்துக் கொள்வோம், இத்தனை நாள் கடவுளாக வழிபட்ட ஒன்றை சட்டென்று பொம்மையாக கருதி தடியால் அடித்து உடைத்து மேலிருந்து தள்ளி விட ஒரு பக்தனுக்கு மனம் வருமா?

 இந்த சங்கியின் குடும்பத்தில் ஒரு இழப்பு வருகின்றது என்று வைத்துக் கொள்வோம். உயிர் போனால் வெறும் பிணம்தான். அதனால் அந்த பிணத்தையும் பிள்ளையார் பொம்மையைச் செய்வது போல தரதரவென்று இழுத்துப் போய் சுடுகாட்டிலோ இடுகாட்டிலோ தூக்கிப் போட்டுவிட்டு வந்து விடுவாரா?

 தந்தை பெரியார் பிள்ளையார் பொம்மைகளை உடைத்தார் என்று இன்னமும் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர் ஒன்றும் அந்த பிள்ளையார் சிலைக்கு சங்கிகள் போல சக்தியெல்லாம் கொடுத்திருக்கப் போவதில்லை. அதனால் அவர் உடைத்ததும் பொம்மைதான். அதற்கு மட்டும் ஏன் பொங்கிக் கொண்டே இருக்கிறார்கள்.

 மொத்தத்தில் பிள்ளையாரை இழிவுபடுத்துவது அவர் பெயரில் அரசியல் செய்யும் சங்கிகள் மட்டுமே.

No comments:

Post a Comment