Wednesday, July 4, 2012

காட்டாட்சியின் காவல்துறை அராஜகம்




மேற்கு வங்கம் எத்திசை வழி நோக்கி சென்று கொண்டிருக்கின்றது, ஜனநாயக, தொழிற்சங்க உரிமைகள் எவ்வாறு நசுக்கப் படுகின்றது, பொய்யும் பித்தலாட்டமும் எப்படி தலை விரித்தாடுகின்றது என்பதன் அடையாளமாக கீழே தரப்பட்டுள்ள எங்களது சங்க சுற்றறிக்கையைப் படியுங்கள்.

அன்றாடம் அலுவலகம் வந்து கொண்டிருக்கும் ஊழியர்கள் தலை மறைவாக உள்ளதாக பொய் சொல்லி அரஸ்ட் வாரண்ட் வாங்கியுள்ள அவல நிலைமையைப் பாருங்கள். பேயரசு ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்தானே நடைமுறையில் இருக்கும்!
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------
காப்பீட்டுக்  கழக  ஊழியர்  சங்கம்
வேலூர் கோட்டம், பதிவு எண் 640/என்.ஏ.டி
சுற்றறிக்கை எண் 28 /2012                           04.07.2012                         
அனைத்து  உறுப்பினர்களுக்கும்,
அன்பார்ந்த தோழர்களே,

கொல்கத்தா மாநகர இன்சூரன்ஸ் ஊழியர்கள் மீது
மேற்கு வங்க அரசு தொடுத்துள்ள பொய் வழக்குகளை கண்டிக்கிறோம்.

மம்தா பானர்ஜி தலைமையில் மேற்கு வங்கத்தில் நடைபெறும் காட்டாட்சியில் நமது பொது இன்சூரன்ஸ் தோழர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள பொய் வழக்குகளைப் பற்றிய அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க சுற்றறிக்கையின் தமிழாக்கத்தை கீழே தந்துள்ளோம். தொழிற்சங்க உரிமைகள் மீதும் ஜனநாயக உரிமைகள் மீதும் மேற்கு வங்க அரசு எப்படி கடுமையான தாக்குதல்களை நிகழ்த்தி வருகின்றது என்பதற்கு இச்சம்பவம் ஒரு சான்று.
வாழ்த்துக்களுடன்,
தோழமையுள்ள
ஒம் ( எஸ்.ராமன்)
பொதுச்செயலாளர்

28.02.2012  அன்று நடைபெற்ற நாடு தழுவிய ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் தேசம் முழுதும் உள்ள உழைக்கும் மக்கள் பங்கேற்றனர். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அறைகூவல்படி  நாடெங்கிலும் உள்ள இன்சூரன்ஸ் ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் மகத்தான முறையில் பங்கேற்றனர். கொல்கத்தாவில் எல்.ஐ.சி மற்றும் பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தினர்.

வேலை நிறுத்த நாளன்று, கொல்கத்தாவில் நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனியின்  அலுவலகங்கள் அமைந்திருக்கிற ரூபி கட்டிடத்தில் நடைபெற்ற வேலை நிறுத்த ஆர்ப்பாட்டக் கூட்டத்தை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அகில இந்திய செயற்குழு உறுப்பினரான தோழர் பிரதீப் பஸக், மேற்கு வங்க மாநில பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவரான தோழர் தனஞ்சய் பானர்ஜி ஆகியோர் தலைமையேற்று நடத்திக் கொண்டிருந்தனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட  ஊழியர்கள் மற்றவர்களை வேலைநிறுத்ததில் பங்கேற்குமாறு அமைதியான முறையில் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே வந்த காவல்துறை நமது தோழர்களோடு கடுமையான விவாதத்தில் ஈடுபட்டது. இறுதியில் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது.
2
இந்த நிகழ்வு நடைபெற்றது 28.02.2012 அன்று. சிறிதும் எதிர்பாராத நிகழ்ச்சியாக 27.06.2012 அன்று நமது தோழர்கள் இருவர் மீது மீது காவல்துறை  அரஸ்ட் வாரண்ட் பெற்றிருப்பதாக நமது தோழர்களுக்கு தெரிய வந்தது. பல்வேறு பொய்யான குற்றங்களை சுமத்தி, அவர்கள் தலைமறைவாக இருப்பதாக பொய்யாக ஜோடித்து  அவர்களுக்கு எதிராக அரஸ்ட் வாரண்ட்  பெற்றுள்ளது.

தோழர் பிரதீப் பஸக் ஒரு பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்தவர். அப்பகுதியில் உள்ள அனைவருக்கும் அவரது வீடு நன்கு அறிமுகமானது. தோழர் தனஞ்சய் பானர்ஜி பணியில் இருக்கும் ஒரு தோழர். அலுவலகப் பணியையும் தொழிற்சங்கப் பணியையும் அன்றாடம் செய்து கொண்டிருப்பவர். இந்த இரு தோழர்களும் காவல்துறை எந்த விசாரணைக்கு அழைத்தாலும் வருவதற்கு தயாராகவே உள்ள தோழர்கள். அவர்களிடம் எந்த விசாரணையும் நடத்த சிறிதும் முயற்சிக்காத காவல்துறை, அவர்கள் தலைமறைவாக உள்ளனர் என்பது உள்ளிட்டு பொய்யான குற்றங்களை சுமத்தியுள்ளது.

வேலை நிறுத்தத்திற்கு  எதிராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெளிப்படையாகவே விடுத்த மிரட்டலை மீறி, வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற ஊழியர்களை மிரட்டுவதற்காகவும் அவர்கள் மத்தியில் அச்ச உணர்வை உருவாக்கவுமே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகின்றது.

மேற்கு வங்கத்தில் இன்றைய சூழலில் இப்படித்தான்  தொழிற்சங்க உரிமைகள் நசுக்கப்படுகின்றன. இந்த தோழர்களை பாதுகாக்க அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.

தோழர்கள் இருவருக்கும் பிணை விண்ணப்பிக்கப்பட்டு ஜாமீன் பெறப்பட்டுள்ளது. அவர்கள் மீதான வழக்கினை முறியடிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இவ்விரு தோழர்களும், எவ்வித அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல் உறுதியாக உள்ளனர். எவ்வித மிரட்டலையும் சந்திக்கும் உறுதியோடு கொல்கத்தா தோழர்கள் உள்ளனர்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் தொழிற்சங்க உரிமைகள் மீதான இத்தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கிறது. சிரமமான இன்றைய சூழலில் மேற்கு வங்க மாநிலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைத்து தோழர்களுக்கும் துணையாக நிற்கும்.  
தோழமையுள்ள
ஒப்பம் ... கே.வேணுகோபால்
பொதுச்செயலாளர்

No comments:

Post a Comment