Wednesday, May 6, 2026

இந்த ஆடம்பரத்துக்கெல்லாம் ஜெ பாணி நடவடிக்கைதான் சரி


 என்னைப் போன்ற வயதானவர்களுக்கு ஒரு விஷயம் நினைவிருக்கலாம். ஏதோ ஒரு பல்கலைக்கழகத்தில் முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆருக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்தமைக்காக திரையுலகம் ஒரு பாராட்டு விழா நடந்தது. அதிலே கமலஹாசன், ரஜினிகாந்த், பாரதிராஜா, பாக்யராஜ் ஆகிய நான்கு  பேர் சேர்ந்து எம்.ஜி.ஆருக்கு ஒரு பெரிய ரோஜா மாலையை அணிவிப்பார்கள். ஆளுயுர மாலை எப்படி இருக்கும் என்பதை தமிழ்நாடு அப்போதுதான் முதல் முறையாக பார்த்தது.

நேற்று வேலூரில் ஒரு காட்சியை பார்த்தேன். வேலூர் க்ரீன் சர்க்கிள் அருகிள் தவெகவினர் நின்று விசில் ஊதிக் கொண்டிருந்தனர். தாரை தப்பட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். புல்டோசரில் ஒரு பிரம்மாண்ட மாலையை தூக்கி வைத்திருந்தார்கள்.

யாருக்கு போடுவதற்காக அந்த மாலையோ?

வேலூரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ விற்காகக் கூட இருக்கலாம். 

வழக்கமாக ஆளுயுர மாலை எப்படி இருக்குமோ, அது போல நான்கைந்து மடங்கு பெரிதாக இருக்கும். அந்த மாலையை  யானைக்கு போட்டால்  அதன் கழுத்து எலும்பே உடைந்து விடும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். 

யானையே தாங்காது எனும் போது மனிதனால் ஒரு நொடி கூட அந்த மாலையை போட்டுக் கொள்ள முடியாது. எம்.எல்.ஏ ஆக இருந்தால் அந்த தொகுதியில் இடைத் தேர்தல்தானா?

யாருக்கும் பயனில்லாத அந்த பிரம்மாண்டமான மாலை எல்லாம் அவசியமா?

வெட்டி ஆடம்பரம் மட்டுமே!

இது போன்ற ஆடம்பரங்கள் செய்பவர்களை டீல் செய்ய ஜெயலலிதா பாணிதான் சரியாக இருக்கும்.

அது என்ன என்று கேட்கிறீர்களா?

அய்யாறு வாண்டையார் என்ற தஞ்சாவூர் நிலப்பிரபுத்துவ குடும்ப வாரிசு. பாரம்பரிய காங்கிரஸ்காரர் அதிமுகவிற்கு தாவுகிறார். திருவையாறு தொகுதியில் போட்டியிட்டு ஜெயிக்கிறார்.  ஜெயலலிதா அவரை இந்து அறநிலையத்துறை அமைச்சராக்குகிறார். அந்த பதவி ஒரு வாரம் கூட தாங்கவில்லை. 

தூக்கப்பட்டார்.

ஏன்?

அமைச்சராக பதவியேற்ற பின் அவர் சொந்த ஊருக்குச் செல்கிறார். தஞ்சை ரயிலடியிலிருந்து அவரது கிராமத்துக்கு செல்லும் வழியில் பண்ணையார்த்தனமான வரவேற்பு. குதிரைகள் பூட்டிய தேரில் அவர் உட்கார, அனைத்து வகை ஆட்டக் கலைகளோடு ஊர்வலம் நிதானமாக ஊர்ந்து செல்கிறது. தகவல் ஏ1 காதிற்கு செல்ல, அய்யாறு வாண்டையார் வீட்டிற்குச் செல்லும் முன்னே அவரது பதவி பறிக்கப்பட்டு விட்டது.

அப்படியென்றால் ஜெ ஆடம்பரத்தை விரும்பாதவர் என்று சொல்கிறீர்களா என்று கேட்கிறீர்களா?

நோ, நெவர்.

வளர்ப்பு மகன் திருமணத்தை மறக்க முடியுமா?

ஜெயலலிதா பயங்கர ஈகோ பிடித்தவர். தன் கட்சியில் தன்னைத் தவிர வேறு யாரும் ஆடம்பர சீன் போடுவதை அவர் விரும்ப மாட்டார்.

அவ்வளவுதான் . . .

No comments:

Post a Comment