Thursday, January 25, 2018

எல்லைக்கப்பால் இந்திய உளவாளி, அப்பாவிகள் அறிவீர் . . .



உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் உளவுப்படை உண்டு. அண்டை நாடுகள் மட்டுமல்லாது மற்ற நாடுகளுக்கும் உளவாளிகளை அனுப்பும். தங்களுக்கு வேண்டிய தகவல்களை அவர்கள் மூலமாக ரகசியமாக சேகரிக்கும்.  அமெரிக்காவிற்கு சி.ஐ.ஏ, ரஷ்யாவிற்கு கே.ஜி.பி, இஸ்ரேலுக்கு மொஸாத், இங்கிலாந்திற்கு எம் 16, பாகிஸ்தானிற்கு ஐ.எஸ்.ஐ.  என்று பல அமைப்புக்கள் உண்டு. இதைத்தவிர ராணுவம், கடற்படை,  விமானப்படை ஆகியவையெல்லாம் வேறு தனியாக உளவாளிகளை வைத்திருப்பார்கள்.

ரா (Research and Analysis Wing) என்ற அமைப்பு இந்தியாவுடையது என்றாலும் இந்தியா அப்படிப்பட்ட நாடெல்லாம் கிடையாது. பாகிஸ்தான்தான் இந்தியாவிற்கு உளவாளிகளை அனுப்புமே தவிர இந்தியா பாகிஸ்தானுக்குள் உளவாளிகளையெல்லாம் அனுப்பவே அனுப்பாது என்று மிகவும் அப்பாவித்தனமாக இன்னும் நம்பிக் கொண்டிருக்கிற மக்கள் இங்கே உள்ளனர். அவர்களுக்காகவே இப்பதிவு.

கடந்த ஞாயிறு அன்று ஹிந்து நாளிதழில் வந்த கட்டுரையின் சுருக்கமே இது.

புகைப்படத்தில் இருக்கிற இந்த முதியவரின் பெயர் காஷ்மீரிசிங். இந்திய ராணுவத்தில் 1968 ல் சேர்ந்துள்ளார். பாகிஸ்தானுக்கு சென்று உளவு பார்த்து வர விருப்பமா என்று கேட்கப்பட்டு இவரும் விருப்பம் தெரிவிக்க பாகிஸ்தான் ராணுவத்தால் பிடிபடுகிற வரை சுமார் ஐம்பது முறை எல்லை கடந்து பாகிஸ்தான் ராணுவ நிலைகள் குறித்த விபரங்களை, புகைப்படங்களோடு சேகரித்து வந்துள்ளார். பாகிஸ்தானின் கவச வாகனங்களை புகைப்படம் எடுத்து வந்ததை அவர் முக்கியமான சாதனையாகச் சொல்கிறார்.

1972 ல் கைது செய்யப்படுகிற அவர் கிட்டத்தட்ட முப்பத்தி ஐந்து ஆண்டுகள் பாகிஸ்தான் சிறைகளில் பல சித்திரவதைகளுக்கு உள்ளாகியுள்ளார். ஆனால் இந்திய ராணுவமோ காஷ்மீரிசிங் என்ற உளவாளி யாருமே கிடையாது என்று பிடிவாதமாக மறுத்து விட்டது. ஜலந்தர் ரெஜிமெண்டில் இருந்து அவருக்கு மாதம் 380 ரூபாய் ஊதியம் அனுப்பப்பட்டுள்ளது. உளவு பார்க்க பாகிஸ்தானுக்கு செல்கையில் ஒரு நாளைக்கான படி ரூபாய் 150. இருந்தும்  கைவிரித்து விட்டது ராணுவம். அவரை பாகிஸ்தான் சிறையிலிருந்து மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இறுதியாக பாகிஸ்தான் அமைச்சர் அன்சார் பர்னி என்பவரது  முயற்சியால் அவர் 2008  ம் வருடம் விடுதலை பெற்று இந்தியா வருகிறது. ஆம், நான் இந்திய ராணுவத்திற்காக உளவு பார்த்தேன் என்பதை வெளிப்படையாக அறிவித்து அதிர்வலைகளை உருவாக்கினார். தன்னைப் போல முப்பத்தி ஐந்திலிருந்து நாற்பது பேர் வரை இன்னும் பாகிஸ்தான் சிறையில் இருப்பதாகச் சொல்லியுள்ளார்.

இப்போது 75 வயதில் கூட நாட்டிற்காக உளவு பார்க்க பாகிஸ்தான்  செல்லத் தயார் என்று தெரிவித்துள்ளார்.

அவருக்கு ஒரே ஒரு அறிவுரை சொல்ல வேண்டும்.


வயதான காலத்தில்  எந்த சாகசமும் அவசியமில்லை. இந்த முறை மாட்டிக் கொண்டாலும் இந்திய அரசு உங்களை கைவிட்டுவிடும்.  

"எல்லையிலே ராணுவ வீரர்கள்" என்று வசனம் பேசினாலும் அவர்களுக்கு ஒழுங்காக சாப்பாடு கூட அளிக்காதவர்கள் இவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் வீரரே!

3 comments:

  1. //அமெரிக்காவிற்கு சி.ஐ.ஏ, ரஷ்யாவிற்கு கே.ஜி.பி, இஸ்ரேலுக்கு மொஸாத், இங்கிலாந்திற்கு எம் 16, பாகிஸ்தானிற்கு ஐ.எஸ்.ஐ. என்று பல அமைப்புக்கள் உண்டு. //
    அருமையான தேச நலன் கொண்ட நடுநிலை பதிவு.
    //வயதான காலத்தில் எந்த சாகசமும் அவசியமில்லை. இந்த முறை மாட்டிக் கொண்டாலும் இந்திய அரசு உங்களை கைவிட்டுவிடும்.
    "எல்லையிலே ராணுவ வீரர்கள்" என்று வசனம் பேசினாலும் அவர்களுக்கு ஒழுங்காக சாப்பாடு கூட அளிக்காதவர்கள் இவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் வீரரே!//
    (:

    ReplyDelete
  2. ராஜதந்திர ரீதியாக சென்று உளவு பார்த்து பிடிபட்ட உளவாளிகளை தவிர ஏனைய பிடிபட்ட உளவாளிகளை எந்த நாடும் ஏற்றுக்கொள்வதில்லை

    உலகிலேயே சிறந்த உளவாளியான Eli Cohen ஐ கூட இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளவில்லை . அவன் தூக்கில் செத்தான்

    உளவாளிகள் நிலை எங்கும் ஒன்றுதான்

    Yuvan

    ReplyDelete
  3. //"எல்லையிலே ராணுவ வீரர்கள்" என்று வசனம் பேசினாலும் அவர்களுக்கு ஒழுங்காக சாப்பாடு கூட அளிக்காதவர்கள் இவர்கள்//

    என்ன பேச்சு இது? நான் நாசனல் ஜியோவில் பார்த்தேன் இந்திய ராணுவம் அமெரிக்க டெல்டா பார்ஸ் ரேஞ்சுக்கு ஹெல்மெட் நைட் விசன் எல்லாம் போட்டுகின்னு சர்ஜிகல் ஸ்ட்ரைக் செய்கிறதே?? ஒருவேளை ஆடையை களைந்தால்தான் சாப்பாட்டு வக்கனை தெரியும் என்கிறீரா?? கடற்படை அகாடமி பற்றிய நிகழ்ச்சியில் அத்தனையும் கட்டிளம் காளைகளாக புதுசு புதுசா தினுசு தினுசா ஆடை அணிந்து மூலம் தள்ள ஜிம்னாஸ்டிக் செய்கிறார்களே வெளிநாட்டு படைகளுடன் உண்ணவேண்டிவரும் என டைனிங் மேனர்ஸ் எல்லாம் சொல்லி குடுக்கிரார்களே?? அதெல்லாம் வெறும் நிகழ்ச்சி என்று சொல்கிறீரா??
    உம்மை போல் ஒரு தேசவிரோதியை பார்த்ததில்லை.

    ReplyDelete