Tuesday, September 12, 2017

கோவையில் மூன்று பேர் . . .


கடந்த சனிக்கிழமையன்று கோவையில் எங்கள் தென் மண்டலக் கூட்டமைப்பின் சார்பில் மத நல்லிணக்க சிறப்பு மாநாடு நடைபெற்றது. எங்கள் கோட்டத்திலிருந்து 13 தோழர்கள் பங்கேற்றோம். புகைவண்டியில்  முன்பதிவு இல்லாததால் வேன் மூலம் சென்றோம். சோர்வளிக்கும் பயணம்தான். ஆனால் அந்த சிரமத்தை தோழர் அருணன், தோழர் ஆளூர் ஷானவாஸ், திரு பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரின் அருமையான உரைகள் போக்கி விட்டது. முக்கியப் பேச்சாளர்கள் அனைவருமே கலக்கலாக பேசினார்கள்.  உரைகளின் முக்கியமான அம்சங்களை தீக்கதிர் நாளிதழில் பிரசுரித்துள்ளனர். அதனை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

தோழர் ஆளூர் ஷாநவாஸ் பகிர்ந்து கொண்ட ஒரு தகவலும் மாநாடுத் தீர்மானமும் மிக முக்கியமானது. அதனை நாளையும் நாளை மறுநாளும் பகிர்ந்து கொள்கிறேன்.

 
 இந்துக்களுக்கும் எதிரானது ஆர்எஸ்எஸ் மதநல்லிணக்க மாநாட்டில் தலைவர்கள் எச்சரிக்கை



கோயம்புத்தூர், செப்.10-
“இந்துக்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்கிற சங்பரிவாரங்கள் அனிதாவின் மரணத்திற்கு நீதிகேட்டோ, கௌரி லங்கேஷ் படுகொலையை கண்டித்தோ ஏன் கிளர்ந்தெழவில்லை. பெரும் பான்மை மக்களை அச்சப்படுத்தி வாக்கு வங்கியை பலப்படுத்துவது மட்டுமே இவர்களின் நோக்கம். ஆர்எஸ்எஸ் கூட்டம் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தோருக்கு மட்டுமல்ல இந்துமக்களுக்கும் எதிரானவர்கள்” என கோவையில் நடைபெற்ற மதநல்லிணக்க மாநில சிறப்பு மாநாட்டில் தலைவர்கள் உரையாற்றினர். தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற மாநாட்டிற்கு கூட்டமைப்பின் துணைத் தலைவர் க. சாமிநாதன் தலைமை தாங்கினார். கோவைப் பகுதி பொதுச் செயலாளர் கே.துளசிதரன் வரவேற்றார்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போ ன்ஸ், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்க த்தின் கவுரவத் தலைவர் பேராசிரியர் அருணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஆளூர் ஷா நவாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.பேராசிரியர் அருணன் பேசுகையில்,“இந்து மதம் என சொல்லப்படுவது கூட்டமைப்பு. பல பிரிவுகள் ஒன்றிணைக்கப்பட்டு நடைமுறையில் இந்து மதம் என அழைக்கப்படுகிறது. ஆறு சமயங்களை இணைத்து வழிபாட்டு முயற்சி எட்டாம் நூற் றாண்டுக்கு பிறகு உருவாக்கப் பட்டது என மதவரலாறு சொல்கிறது. ஒரு குலதெய்வ வழிபாட்டுக் குள்ளேயே சைவச்சாப்பாடு, அசைவ சாப்பாட்டு முறை உள்ளது. இதுதான் வாழ்க்கை என்பதை அங்கீகரிக்க வேண்டும்” என்றார். ஒரே மதம் என்று இவர்கள் சொல்லுகிற இந்து மதத்தில் பிரிவுகள் உள்ளது என்பதை மறைத்து அதன் பன்மைத்துவத்தை ஒழித்து 130 கோடி மக்கள் மீது ஒற்றைப் பண் பாட்டை திணிக்க முயற்சிக்கிறார்கள். 

மூன்றாண்டுகளில் 30க்கும் மேற்பட் டோர் மாட்டுக் கறியின் பேரால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதில் ஐந்து இந்துக்களும் உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.உ.பியில் ரோமியோ எதிர்ப்பு படை உருவாக்கப்படுகிறது. இதன் நோக்கம் மதமறுப்பு, சாதி மறுப்பு காதல் உருவாகிவிடக் கூடாது என்பதுதான் எல்லோரும் இந்துக்கள் என்றால் சாதி மறுப்பு காதலை ஏன் மறுக்கிறீர்கள்? ஏனென்றால் சாதியை ஒழிக்க இவர்கள் தயாராக இல்லை. கௌரி லங்கேஷ் படுகொலை யை ஒரு கூட்டம் சமூக வலைத்தளத் தில் கொண்டாடுகிறது. அப்படி கொண்டாடுகிறவரை பின்தொடர்கிற வராக பிரதமர் மோடி இருக்கிறார் என்பதுதான் வேதனை. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஏழை, எளிய, அடித்தட்டு இந்து மக்களுக்கு மட்டுமல்ல உயர்சாதி இந்துக்களுக்கும் இவர் கள் எதிரானவர்கள்தான். 

உயர் சாதியில் பிறந்தவர்கள் அனைவரும் மதவெறியர்களோ, சாதி வெறியர்களோ இல்லை. அவர்களிலும் முற்போக்கு ஜனநாயக மதச் சார்பின்மை சிந்தனை கொண்டோர் உள்ளனர். மிகக்கொடூரமான மும்பை கலவரத்தை முன்னின்று நடத்திய பால்தாக்ரே பிராமணர் அல்லாதவர். நடந்த கொடூரத்தை ஆதாரத்துடன் பட்டியலிட்ட சிறீகிருஷ்ணா கமிசன் தலைவர் சிறீகிருஷ்ணா பிராமணர் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உண்மையில் மதக்கலவரங்கள் அனைத்து சாதி, மதத்தினருக்கும் வாழ்விற்கும் கேடுவிளைவிக்கக்கூடியதே. மதச்சார்பின்மை என்பதன் அர்த்தம் பொதுவாழ்வில் இருந்து மதத்தை பிரித்து வைப்பது, கல்வியில், அரசியலில், அரசிடம் இருந்து மதத்தை பிரித்துவைப்பது என்பதே உண்மையான பொருள் என்றார் அருணன்.


வேறுபாடு என்னவெனில்

பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், “21 ஆம் நூற்றாண்டில் ஒவ்வொரு நாளும் மனிதன் புதிய புதிய கிரகங்களை கண்டுபிடித்துக் கொண்டு வருகிறான். பூமிக்கு அடியில் ஆறாயிரம் அடி கீழே என்ன இருக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்கிற அளவிற்கு விஞ்ஞானம் அறிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. ஆனால் இங்கு நாட்டை மதத்தை சொல்லி பின்னோக்கி இழுத்துச்சென்று கொண்டிருக்கிறார்கள். எங்கே எதற்கு அழைத்து செல்கிறார்கள் என்று கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. இதுகுறித்து பேசினால் இந்து விரோதிகள் என குற்றம் சாட்டுகிறார்கள். நாங்கள் இந்து மதத்துக்கோ மக்களுக்கோ எதிரானவர்கள் கிடையாது. மனிதர்களை பாகுபடுத்தும் இந்துத்துவ கோட்பாட் டிற்குத்தான் எதிரானவர்கள் விரோதிகள். 

அனைத்து மதங்களிலும் உள்ள மூட நம்பிக்கைகளுக்கு நாங்கள் எதிரானவர்கள்” என்றார்.வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்வில் பல லட்சக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள். அந்த இடங்களில் இஸ்லாமிய வணிக நிறுவனங்கள், கிருஸ்துவ தேவாலயங் கள் என பல தெருக்களில் உள்ளது. பல லட்சக்கணக்கான மக்கள் கூடுகிற இந்த திருவிழா முடிந்த மூன்று மணி நேரத்தில் ஒருவர் கூட இருக்க மாட்டார்கள். அனைவரும் அமைதியாக கலைந்து சென்று விடுவார்கள். யாரும் யார் மீது கல்லை வீசவில்லை, காவல்துறையின் பாதுகாப்பும் கிடையாது. ஆனால் பத்து பேர் கலந்து கொள்ளும் ராமகோபாலன் தலைமையில் நடைபெறும் பிள்ளையார் ஊர்வலத்தில் ஐநூறு காவலர்கள் பாதுகாப்பு வழங்க வேண்டியுள்ளது. இதுதான் இந்துவிற்கும், இந்துத்துவத்திற்குமான வேறுபாடு என்றும் அவர் குறிப்பிட்டார் 

.ஆளூர் ஷா நவாஸ் தமது உரையில், “நான் ஒரு மதத்தை பின்பற்று கிறேன்.  இதேபோல் இந்த அரங்கத்தில் இருப்பவர்கள் அவரவர் மதத்தை பின்பற்றுபவர்களும் உள்ளனர். மதத்தை மறுப்பவர்களும் இந்த அரங்கில் இருப்பார்கள். மதநல்லிணக்கம் என்றால் என்னுடைய மதத்தில் உள்ள சடங்குகளை மற்ற மதத்தை சார்ந்தவர்களிடம் வலியுறுத்துவதோ, மற்ற மதத்தினரின் சடங்குகளை என்னை ஏற்கச் சொல்வது அல்ல. அவரவர் பின்பற்றுகிற மத சடங்குகளை பின்பற்றவும், மதமே வேண்டாம் என்ற கருத்தைக் கொண்டிருப்பவர்களுக்கும் இடையூறு செய்யக் கூடாது என்பது மட்டுமல்ல ஒத்து ழைக்க வேண்டும் என்பதே மதநல்லிணக்கத்தின் அடையாளம்” என்றார் 

நாட்டில் தற்போது, மத நல்லிணக்கம் திட்டமிட்டு சீர்குலைக்கப் படுகிறது. ஒவ்வொருவரும் தன்னுடைய மதத்தை சுதந்திரமாகப் பின்பற்ற முடியுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. நாட்டின் பன்மைத்துவத்தை சிதைத்து ஏகத்துவத்தை நிலைநாட்டுகிற அதையே சட்டமாக்க துடிக்கிற நிலையில் நாடு போய்க்கொண்டி ருக்கிறது. எந்தப் புறத்தில் இருந்து வந்தாலும் மதவெறியை அனுமதிக்க முடியாது. அம்பேத்கரியம், பெரியாரியம், மார்க்சியம் என்றால் என்ன என்று மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என்றும் கூறினார்.

No comments:

Post a Comment